ரோஹினி கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்ட திருடனைப் போல விழித்தாள்.
"சரி, நீ சொல்லலைனா நானே சொல்றேன். வர வர இந்த வீட்டுல இந்த அழகிய இளைஞனுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு. அது அம்மாக்கும் தெரிஞ்சு இருக்குறது நல்லது தானே?"
"அது... அது... ஒரு ஆக்சிடன்ட்..."
"ஆக்சிடன்ட்டா?? இனிப்பான விபத்துன்னு வேணா சொல்லலாம்..."
“ஹுஹும்... கசப்பான விபத்து!”
யோசிக்காமல் பட்டென்று சொல்லி முடித்தப் பிறகு தான்... என்ன சொன்னாள் என்பது புரியவும்... மீண்டும் அஜயைப் பார்த்து விழித்தாள் ரோஹினி...
“கசப்பா... ஹ்ம்ம்... அப்படிலாம் தெரியலையே... நான் பிடிச்சு தள்ளாத குறையா தள்ளுற வரைக்கும் நீ என்னை விட்டு அசையவே இல்லையே...”
உல்லாசம் நிறைந்த குரலில் அஜய் சொல்லவும், ரோஹினிக்கு அப்படியே பூமிக்குள் சென்று மறைந்து விட மாட்டோமா என்று இருந்தது...!
பேசாமல் வாயை மூடிக் கொண்டு அங்கே இருந்து செல்வது தான் நல்லது என்று முடிவு செய்தவள்... அதை நிறைவேற்றுபவளாய் அங்கே இருந்து வேகமாக நடந்துச் சென்றாள்...
அப்போது எதிர்பாராமல் திடீரென டிஃபன் பாக்ஸும் கையுமாய் சாரதா எதிரே வரவும் அவள் மேலே இடித்துக் கொண்டாள்...
சாரதாவின் கையில் இருந்த டிஃபன் பாக்ஸ் பறந்து சென்று கீழே விழ... அதில் இருந்த உணவு முழுக்க தரையில் கொட்டியது...!