ஜெய் கண்ணில் கனவும், நம்பிக்கையும் கலக்க பேசும் போதெல்லாம் புவனேஸ்வரி அதை ரசித்துப் பார்த்துக் கொண்டே இருப்பாள்.
வேலை, எதிர்காலம், குடும்ப சுமை போன்றவை எல்லாம் அவளுக்கு புதிதாக இருந்தது. இதை எல்லாம் அவள் அதுவரை யோசித்தது இல்லை. யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்படவும் இல்லை. ஜெய் இவ்வளவு யோசிக்கிறானே என்று பெருமையாக உணர்ந்தாள்.
✽✽✽
முதல் முதல் ஜெய் – புவனேஸ்வரி காதலை அவளின் குடும்பத்தில் கண்டுக்கொண்டது அவளின் அக்கா ராஜேஸ்வரி. சகோதரிகள் இரண்டுப் பேரும் ஒன்றாக அத்தை வீட்டிற்கு அவ்வப்போது வருவார்கள். புவனேஸ்வரி வரும் நேரம் தெரிந்து அவள் முன் ஆஜர் ஆகி விடுவான் ஜெய்.
இதை ராஜேஸ்வரி கவனித்தாலும் முதலில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவளின் அழகின் மேல் அவளுக்கு தனி கர்வம் உண்டு. தன்னை பார்க்க தான் வருகிறான் என்று அவள் நினைத்திருக்க, ஜெயின் கண்களோ புவனேஸ்வரியின் பக்கமே இருந்தது. இதை கண்டுப்பிடித்த உடன் ராஜேஸ்வரிக்கு அவமானமாக இருந்தது!
அவளை ஒதுக்கி விட்டு அழகு என்றால் என்ன என்று கூட தெரியாத தங்கையை ஒருவன் பார்க்கிறான்! கோபத்துடன் குமைந்தவள் புவனேஸ்வரியும் ஜெய்யை பார்த்து புன்னைகைப்பது கண்ணில் படவும், முதல் முறையாக திகைத்துப் போனாள்.
அப்பாவிடம் சொல்வதா, அத்தையிடம் சொல்வதா என்று யோசித்து, முடிவில் சித்ராவிடம் தன் சந்தேகத்தை ஒப்பித்தாள்.