(Reading time: 22 - 44 minutes)

16. காதல் பயணம்... - Preethi

நிஜமாவா சொல்லுரிங்க அண்ணி????”

“நிஜமாதான் அனு... நானும் முதல்ல நவீன் அண்ணா மேல கோவமாத்தான் இருந்தேன் ஆனா அந்த suspense புரிஞ்சதும் எனக்கு செம ஹாப்பி” என்று வாயில் இருக்கும் 32 பற்களும் தெரியும் அளவிற்கு மகிழ்ந்து கூறினாள்..

Kaathal payanam

“செம அண்ணி ஒரு வழியா அர்ச்சனா அக்காவும் செட்டில் ஆகிட்டாங்க” என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.

“ஆமா ஆமா அவளும் ஒருவழியா கல்யாணத்திற்கு ஒத்துகிட்டாள். அடுத்து.... ஒரு ஜோடி இருக்கு அவங்க எப்போ சேரப் போறாங்கன்னு தான் தெரியலை” என்று ஒரு விதமான ரகசியமான புன்னகையோடு கூறினாள்.

அவள் கூறுவது புரிந்ததும் சத்தமில்லாத வெட்க புன்னகை அவள் உதடுகளை தழுவி செல்ல, மௌனமாக இருந்தாள். அவள் வெட்கம் புரிந்துவிட “என்ன அந்தபக்கம் யாரோ வெட்கபடுற மாதிரி தெரியுது?!?!” என்று மீண்டும் கிண்டல் செய்தாள் அஹல்யா.

இம்முறை வெட்கத்தோடு சேர்ந்து சிரிப்பும் அதிகமாக, “ஹலோ.... ஹலோ.... அண்ணி எனக்கு எதுவும் கேட்கலையே?! சிக்னல் கிடைக்கலை” என்று கூறி தப்பிக்க பார்த்தாள்.

“ஏய் ஏய் நடிக்காத அனு... இந்த விஷயம் பேசினால்மட்டும் ரெண்டு பேருக்கும் காதே கேட்காதே” என்று நக்கலாக கூறினாள். “எனக்கு போர் அடிக்குது அனு, அடுத்து யாருக்கு பேசுறதுன்னு தெரியலை” என்று சோகமாக கூறினாள்.

“ஏன் அண்ணி அர்ச்சனா அக்காக்கு பேசவேண்டியது தானே?”

“யாரு புது கல்யாண பொண்ணா? அவள்ளாம் ரொம்ப பிஸியா இருப்பாள், இனிமே எப்பவும் கடலைதான் அதான் நானே போன் பண்ணுறது இல்லை.”

“ஹா ஹா... அதுவும் சரிதான்” என்று அவளது பேச்சை ஒத்துக்கொண்டாள். பின்பு சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை வைத்துவிட்டாள்.

ங்கு அவர்கள் கடலை போடுவதாக நினைத்த ஜோடியின் நிலைமையோ வேறுவிதமாக இருந்தது. எப்போதும் போல் இரவு நேரமும் வந்தது. அர்ஜுனின் வேலை இப்போது நவீனுக்கு வந்துவிட உற்சாகமாக அர்ச்சனாவை அழைத்தான்.

“ஊருசெனம் தூங்கிருச்சு ஊதக்காத்தும் அடுச்சுருச்சு...

பாவி மனம் தூங்கலையே.... அதுவும் ஏனோ தெரியலையே....”

என்று இனிமையாக காதல் மயக்கத்தில் தூங்காமல் இருப்பதை இசைத்து அந்த பாடல் ஒலிக்க அதை தன் அன்னையின் அருகில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அர்ச்சனா கேட்டு முழித்தாள். தன் கைபேசியின் திரையில் “மாமா...” என்று பெயர் மின்ன பார்த்தவள் முதலில் சத்தத்தை நிறுத்திவிட்டு மெதுவாக தன் தாயை எழுப்பாமல் ஜன்னலின் அருகே சென்றாள்.

அவள் எடுத்த மறுநொடியே ஆசையாக “ஹாய் டி அத்தை பொண்ணு” என்று ஆவலுடன் அழைத்தான் நவீன். அவன் அழைப்பு தானாக அவள் இதழ்களில் புன்முறுவல் தர, “என்ன மாமா இந்த நேரத்தில போன் பண்ணிருக்கீங்க? தூங்கலையா?” என்று இயல்பாக கேட்டாள்.

அவள் அந்த புறம் அப்படி வினவ அவனோ தன் நெஞ்சில் கைவைத்து நெஞ்சுவலி வந்தது போல் ஒரு நடிப்பை தந்து “என்ன வார்த்த சொல்லிட்ட அர்ச்சனா????? தூங்குறதா? இப்போ போன் பண்ணாம எப்போ பண்ணுறது? இரவு நேரத்துல என்னதான் தூக்கம் வந்தாலும் தான் தூக்கத்தை மட்டும் கெடுத்துக்காம தன்னோட ஜோடியோட தூக்கத்தை கெடுக்குரதுதான் உலக நியதி அதுகூட தெரியாமல் இருக்கியேமா??? இருக்கியே....” என்று பயங்கரமாக வசனம் பேசினான்.

அவன் பேசுவதையெல்லாம் மௌனமாக ரசித்து கேட்டவளுக்கு சிரிப்பு அடக்க முடியாமல் வந்தது. சிரமப்பட்டு மறைத்துக்கொண்டவள், “அதெல்லாம் பண்றவங்க பண்ணட்டும் நம்ம கொஞ்சம் வித்தியாசமா இருப்போம்” என்று இலகுவாக கூறினாள்.

அவள் அப்படி கூறவும் பேசமுடியாத வருத்தத்தில் சோர்ந்து போனான். “ஹ்ம்ம் எல்லாம் அவன் அவன் விதி... கல்யாண பண்ணிக்க போற பொண்ணுகூட பேசக்கூடாதாம்.”

“கொஞ்ச நாள் தானே மாமா...” என்று கூரியவளின் குரல் இப்போது அவனிடம் கொஞ்சியது.

அந்த குரலின் சிறு மாற்றமே அவனுக்கு இன்பமாய் இருந்தது. “கொஞ்ச நாளா? கொஞ்ச மாசம்னு சொல்லு இன்னும் 5 மாசம்ம்ம்ம்ம் இருக்கு....” என்று நொந்துகொண்டு கூறினான்.

அவனது ஏக்கம் அவளுக்கு சிரிப்பாக இருந்தது. “நீங்க ஏன் அப்படி நினைக்குரிங்க? அஞ்சே மாசம்னு நினைங்க” என்று மீண்டும் சமாதானம் செய்தாள்...

“ம்ம்ம்ம்... சரி அர்ச்சனா இப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டே இருந்தினா நம்மளும் பக்கா ஜோடி ஆகிடலாம்” என்று ஒரு கள்ள சிரிப்போடு கூறினான்.

அப்போதுதான் தானும் இது உணராமலே பேசிக்கொண்டிருக்கிறோம் என்று புரிந்து போக, “அச்சச்சோ நானும் கவனிக்கவே இல்லை.. போங்க போங்க போய் தூங்குங்க..” என்று மீண்டும் மிரட்டினாள்.

“ஹே ஏண்டி இப்படி பண்ணுற கொஞ்ச நேரம் சனா...” என்று கெஞ்சளாகவே இழுத்தான்.

அவன் “சனா” என்று அழைத்தது புதிதாக இருப்பினும் இனிமையாக இருந்தது. குரல் கொஞ்சம் மென்மையாக கெஞ்ச, “நாளைக்கு நீங்களும் ஆபீஸ் போகணும்... அம்மா திடிர்னு எந்திரிச்சு தேடினால் மாட்டிப்போம் போங்க சமத்தா போய் தூங்குங்க” என்று மென்மையான வருடலை போல் கூறினாள்.

இவ்வளவு நேரம் அவள் பேசியதே பெரிதாக தோன்ற “ம்ம்ம்ம்” என்று கொஞ்சம் வருத்ததோடு துண்டிக்க போனான்.

“மாமா...” என்று திடிரென்ற அவள் அழைப்பில் நிறுத்தியவன் “என்னமா?” என்று மென்மையாக கேட்டான்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. நவீனும் நடுவில் பேசவில்லை மௌனமாக எதையோ கவனிப்பது போல் அமைதியாக இருந்தான். அர்ச்சனாவும் பேசவில்லை எதையோ சொல்ல வந்து பின்பு ஒரு முறுவலோடு “குட் நைட்” என்று கூறினாள்.

அவள் மனதில் என்ன சொல்லிகொண்டாளோ அது நவீனுக்கு மட்டும் புரிந்தது போல, மென்மையாக அவள் தடுமாற்றத்தை ரசித்தவன், “லவ் யூ” என்று காதலோடு கூறி “போய் நல்லா தூங்கு” என்று கூறி இணைப்பை வைத்தான்.

புதுவித உணர்வுதான் இதுவரை அனுபவிக்காத உணர்வில் இருந்தனர் இருவரும். அவளின் மௌனமொழியை நினைத்து நவீன் சிரித்துக்கொண்டிருந்தான். அர்ச்சனாவோ அவனது பேச்சுக்களை எல்லாம் அசைபோட்டபடி ஜன்னலோரம் நின்றுக்கொண்டிருந்தாள்... ஜன்னல் வழியே தெரியும் நிலவு வெளிச்சம், குளிர்ந்த காற்று, எல்லாம் அவளை தன் செயலை நினைத்து சிரிக்க செய்தது. இது தான் காதல் போல, படங்களிலும் கதைகளிலும் கேட்ட பார்த்த வர்ணனைகள் எல்லாம் இப்போது அவளால் உணரமுடிந்தது. இதையே சில வினாடிகள் யோசித்தவள் அந்த நினைவிலேயே உறங்க சென்றாள்.

ஹாய் மேடம் என்ன பலத்த யோசனை போல....” எப்போதும் போல் ஒரு வசீகர முறுவலோடு வந்தான்.

“வந்திட்டியா? உனக்காக தான் காத்திருக்கே... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...”

“பாருடா கேட்காமலேயே சொல்லுற?? சொல்லு சொல்லு” என்று ஆர்வமாக அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் அஸ்வத்..

அவன் எதை அவள் சொல்ல காத்திருக்கிறான் என்று அறிந்தது தானே எனவே வெறும் முறைப்பு மட்டுமே கிடைத்தது அவனுக்கு... “ஹ்ம்ம் அதானே பார்த்தேன் நீயாவது சொல்லுறதாவது வேற என்ன விஷயம் சொல்லு...” என்று கொஞ்சம் ஸ்ருதி குறைந்தே கேட்டான்.

“ம்ம்ம்ம் அது... இந்த வாரம் ஏதாவது பிளான் போட்டுருக்கியா?” என்று கேட்டாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.