05. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா
மொட்டை மாடியில் படுத்திருந்தான் விஷ்வா. காலையில் பார்த்த அம்மாவின் முகம் நினைவை விட்டு அகலவில்லை.
அம்...மா. ஒரு முறை உச்சரித்து பார்த்தான் விஷ்வா. எல்லா அம்மாவையும் போல் அவளும் அவனை கண்ணுக்குள் வைத்துதான் வளர்த்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் இருவருக்குமிடையில் விரிசல் துவங்கியது எப்போது???????
அம்மாவை விட்டு பிரிந்து வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகின்றன. அப்போது கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தான் அவன்.
அவன் வீட்டை விட்டு வெளியே வந்த போது அவனுக்காக அவனுடனே வந்தார் அப்பா. அவனுடைய அப்பா அனந்தராமன்.
அவர் அவனுடன் வாழ்ந்த வீடுதான் இது. அவர் அவனுடன் இருந்தவரை அவனுக்கு எந்த குறையும் இருந்ததில்லை. அவருக்கு மரணம் வருமென்று அவன் நினைத்தே பார்த்ததில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் அவன் எதிரே பார்க்காத நேரத்தில் அவர் அவனை விட்டு போய்விட்ட அந்த நாள். அந்த நாள் அவன் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம்.
மனம் ஏதேதோ நினைவுகளில் அழுந்த அவனே அறியாமல் அவன் விரல்கள் கைப்பேசியை தேடி அபர்ணாவின் எண்ணை அழுத்தின.
அவள் ஒன்றும் வெகு தூரத்தில் இருந்துவிடவில்லை. கீழே பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள்.
திருமணத்திற்கு வந்த அப்பா இரண்டு நாள் தங்கி விட முடிவெடுக்க, அபர்ணாவும் அவருடன் அன்று விஷ்வாவின் வீட்டிலேயே தங்கி விட்டிருந்தாள்.
'சொல்லு விஷ்வா' என்றாள் அபர்ணா.
என்ன பண்றே?
கிச்சன கிச்சனாவா வெச்சிருக்கே நீ? க்ளீன் பண்ணிட்டிருக்கேன். என்ன வேணும் உனக்கு?.
மனசு சரியில்லை கொஞ்சம் மேலே வரியா அப்பூ.
'என்னவாயிற்று அவனுக்கு. ஜனனி ஞாபகமா?' யோசித்தவள் ஒரு டென் மினிட்ஸ் விஷ்வா. இதோ வந்திட்டேன் என்று அழைப்பை துண்டித்தாள்.
அதே நேரத்தில் உள்ளே படுக்கையறையில் படுத்திருந்த அவளது அப்பாவின் கைப்பேசி ஒலித்தது.
அழைத்தவன் அவளது அண்ணன் அஷோக்.
என்னப்பா இன்னைக்கு கிளம்பலையா நீங்க?
'இல்லைடா ரெண்டு நாள் கழிச்சு வரேன்.' என்றார் அப்பா,
எங்கே தங்கி இருக்கீங்க?
விஷ்வா வீட்டிலே...
சுள்ளென்று கடுப்பேறியது அஷோகின்னுள்ளே. 'நினைச்சேன். ஊர்லே ஹோட்டலே இல்லையா?' அவன் வீடு தான் கிடைச்சதா உங்களுக்கு. எப்படியோ போங்க அப்பாவும் பொண்ணும்' துண்டித்தான் அழைப்பை.
'விஷ்வாவை பார்த்தாலே கொதிப்பேறும் அஷோகினுள்ளே.
'வருவான். அபர்ணாவுக்கானவன் எங்கிருந்தாவது வருவான். வருபவன் விஷ்வாவை தட்டாமலா போய் விடுவான்.' தனக்குள்ளே சொல்லிகொண்டான் அஷோக்.
கண்களை மூடி படுத்திருந்தான் விஷ்வா
இப்போது என்று இல்லை அவனுக்கு ஆறுதல் தேவையாக இருக்கும் போதெல்லாம் தோள் சாய்த்துக்கொள்பவள் அவள்தானே.
தோள் கொடுப்பதென்ன எப்போதோ நின்று போயிருக்க வேண்டிய சுவாசத்தையே திரும்ப தந்தவள் அவள்தானே.
கல்லூரியில் அவளைவிட ஒரு வருடம் சீனியர் விஷ்வா.
குடும்பத்தை விட்டு சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்தாள் அபர்ணா. கல்லூரியில் புதிதாக சேர்ந்த பயத்துடனே வலம் வந்தவளை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து போனது விஷ்வாவிற்கு.
இறுக்கமாய் பின்னி முடித்த கூந்தலும், இழுத்து சொருகப்பட்ட சேலையும், கையில் சற்றே பெரிய கை கடிகாரமுமாய்....
முதல் முறை அவளை 'ஹேய் '...மணிக்கூ....ண்டு' என்றே அழைத்தான் அவன்.
அவளை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து கேலி செய்வான் விஷ்வா. அது ஏனோ அவன் கேலி செய்யும் போது மட்டும் அவளுக்கு கோபமே வந்ததில்லை.
ஆனால் மற்றவர்கள் யாரையும் அவளை நெருங்கக்கூட விட்டதில்லை அவன்.
அவள் நடை உடை பேச்சு எல்லாவற்றையும் மெல்ல மெல்ல மாற்றினான் விஷ்வா.
அவளை லவ் பண்றியாடா நீ? யாராவது அவனை கேட்டால் அவர்களை அடிக்கப்போவான் விஷ்வா. இருவருக்கும் எப்போதுமே அப்படி ஒரு உணர்வு தோன்றியதே இல்லை.
பாடத்தில் ஏதாவது புரியவில்லையா? விஷ்வா.... உடல் நலமில்லையா? விஷ்வா.... மனதில் குழப்பமா? விஷ்வா.....
'விஷ்வா' என்ற வார்த்தையில் 'வா' வென்ற எழுத்தை அவள் உச்சரித்து முடிப்பதற்குள் அவள் முன்னால் வந்து நிற்பான் விஷ்வா.
இருவருக்கும் இடையில் அப்படி ஒரு அழகான நட்பு பூத்திருந்த அந்த நேரத்தில் வந்தது அந்த உல்லாச பயணம். கல்லூரி மாணவர்கள் எல்லாரும் சென்ற கொடைக்கானல் டூர்.
இரண்டு நாட்கள் ஊரை சுற்றி பார்த்தவர்கள், அடுத்த நாள் ஊரை விட்டு சற்று தள்ளி இருந்த ஒரு ஏரியை பார்க்க திட்டமிட்டிருந்தனர்.
கடைசி நேரத்தில் நிறைய பேர் வர மறுத்துவிட, விஷ்வா வெகு சில நண்பர்களை மட்டும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
அவன் கிளம்பும் நேரத்தில் திடீரென்று சொன்னாள் அபர்ணா 'நானும் வரேன் விஷ்வா'
கேர்ள்ஸ் யாரும் வரலை நீ எதுக்கு அப்பூ.?
அப்போ நீயும் போகாதே.
அப்பூ... என்ன அப்பூ நீ..... அவன் என்ன சொல்லியும் கேட்கவில்லை அவள்.
இல்லை விஷ்வா. எனக்கு என்னமோ பயமா இருக்கு. நானும் உன் கூட வருவேன்.
எப்படியோ அவர்களுடன் வந்த ஆசிரியரையும் ஏமாற்றி விட்டு பிடிவாதம் பிடித்து அவர்களுடன் கிளம்பினாள் அபர்ணா.
அதிக ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ஏரியில், அங்கே தனித்திருந்த ஒரு படகை எடுத்துக்கொண்டு படகு சாவாரிக்கு கிளம்பினர் அனைவரும்.
அபர்ணாவினுள்ளே மட்டும் ஏதோ ஒரு எச்சரிக்கை மணி ஒலித்துக்கொண்டே இருந்தது.
என்ன நிகழ்ந்ததோ, எப்படி நிகழ்ந்ததோ சிரித்து விளையாடிக்கொண்டிருந்த விஷ்வா அப்படியே கவிழ்ந்து ஏரிக்குள் விழுந்தான்.
விஷ்ஷ்ஷ்ஷ்ஷ் .....வா.........அவள் அலறல் காதில் கேட்டது, அதற்கு மேல் எதுவும் கேட்காமல் சுவாசம் கிடைக்காமல், அவன் நீருக்குள் மூழ்கி கீழே.... கீழே....... .
அந்த நேரத்தில் சட்டென ஏரிக்குள் குதித்து விட்டிருந்தாள் அபர்ணா.