யுவி, துணா, மையா மூன்று பேரும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் விஸ்வமூர்த்தியும் வில்வமூர்த்தியும் அமர்ந்திருந்தனர்… அம்பிகாவும் துர்காதேவியும் தத்தமது கணவன்மார்களின் அருகே நின்றிருந்தபடி மகன்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்…
“யுவி… உனக்கு மையன்-மஞ்சரி கல்யாணம் விஷயம் தெரியும்தான?...” என விஸ்வமூர்த்தி கேட்க, அவன் ஆம் என்று தலை அசைத்தான்…
“அன்னைக்கே நாம நிச்சயம் பண்ணிருக்கணும்… ஆனா பண்ணலை… அதுக்கு காரணம் இரண்டு இருக்கு…” என்ற விஸ்வம் வ்ருதுணனையும் யுவியையும் பார்த்தார்…
யுவி அமைதியாக இருக்க, வ்ருதுணன் எதுவோ சொல்ல முனைந்த போது,
“துணா… இனியும் அமைதியா இருக்க முடியாது… அன்னைக்கு சபையில மையனுக்கு நீ மூத்தவன்னு சொன்னோம்… அத நீயும் கேட்டிருப்ப… அப்போ உன் கல்யாணம் எப்போன்னு முடிவு பண்ண வேண்டியது இப்போ அவசியமாயிடுச்சு…” என்றார் விஸ்வமூர்த்தி அழுத்தமாக…
“அப்பா… நான்…” என்று இழுத்த துணாவை..
“நீ எதும் சொல்ல வேண்டாம்பா… பிடிக்காத பொண்ணை நாம பெண்கேட்டுப்போனது நம்ம தப்பு…” என்ற விஸ்வமூர்த்தியை முறைத்தார் அம்பிகா…
அவர் அப்படி சொன்னதும், வாடிப்போன மகனின் முகத்தை பார்த்த அம்பிகாவிற்கு கோபம் எழ, “இப்போ எதுக்கு நீங்க நடந்து முடிஞ்ச கதையை எல்லாம் பேசுறீங்க?... நடக்கப் போறதை பேசுறதுக்கு தான இங்க எல்லாரும் கூடியிருக்கோம்… அப்புறம் என்ன?...” என்று சற்றே சினத்துடன் கூற,
“சரி அம்மு… நடக்கப்போறதையே பேசுவோம்…” என மனைவியிடம் சொன்னவர், மகனைப் பார்த்து, “பாலாவைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீ அன்னைக்கு சொன்ன… இப்பவும் நீ அதை தான் சொல்லுவன்னும் எங்களுக்கு தெரியும்… எங்களுக்கும் அதுல பரிபூரண சம்மதம்தான்… ஆனா, கல்யாணத்துக்கு நாங்க தேதின்னு ஒண்ணு குறிக்கணும்… அதை நீ தான் எங்களுக்கு சொல்லணும்… சீக்கிரம் ஒரு நல்ல பதிலை சொல்லுவன்னு நாங்க நம்புறோம்… என்றவர், இன்னும் உனக்கு ஒருமாசம் டைம் தரேன்… அதுக்குள்ள நல்ல பதிலை சொல்லு….” என்றார் அழுத்தம் திருத்தமுடன்…
“சரிப்பா… கண்டிப்பா…” என்றான் துணாவும் உறுதியுடன்…
துணாவிடம் பேசி முடித்த விஸ்வ மூர்த்தியின் பார்வை, இப்போது யுவியிடத்தில் இருந்தது…
அதைப் புரிந்து கொண்ட அவனும், “கவலைப் படாதீங்கப்பா… துணா சீக்கிரம் நல்ல பதிலை சொல்லுவான்… அதுக்கு நான் பொறுப்பு….” என்று சொல்ல…
“அவன் சொன்னதை செய்வான்னு நம்பிக்கை இருக்கு… அதுலேயும் நீயும் பொறுப்புன்னு சொல்லும்போது கண்டிப்பா அது நடந்தே தீருமென்றும் எங்களுக்கு தெரியும்… ஆனா, உன் வாழ்க்கை???...” என்று விஸ்வ மூர்த்தி கேள்வியுடன் நிறுத்த…
“என் வாழ்க்கைக்கு என்னப்பா… அழகான குடும்பம் எனக்கு கிடைச்சிருக்கு… இது போதாதா?...” என்ற யுவியிடத்தில், “போதாதுடா…” என்றார் அதுவரை அமைதியாக இருந்த வில்வமூர்த்தி…
“அப்பா…”
“என்னடா… அப்பா..???... கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி நாங்களும் வருஷக்கணக்கா சொல்லிட்டிருக்கோம்… கொஞ்சம் கூட அதை காதுல வாங்கமாட்டேன்னா என்னடா அர்த்தம்?... அங்க சபையில மூத்த பையன் இருக்கான்னு சொல்லிட்டு வந்திருக்கோம்… அது யாருன்னு நினைச்ச நீ?... இந்த குடும்பத்துல மூத்த பையன் நீ தான்… அது கொஞ்சமாச்சும் உனக்குப் புரியுதாடா?... உனக்கு கல்யாணம் முடிஞ்சா தான் உன் தம்பிகளுக்கும் கல்யாணம் பண்ண முடியும்… அதை முதலில் நீ என்னைக்கு தான் புரிஞ்சிக்கப் போறியோ?...” என்று அவர் ஆதங்கத்துடன் கூற,
யுவி மௌனமாக இருந்தான்…
“சிவநாதன் குடும்பம் நமக்கு சொந்தம்டா… வ்ருதுணன் பாலா மேல ஆசப்பட்டான்… அப்படி இல்லன்னாலும் அவனுக்கு அந்த பொண்ணைத்தான் நாங்க கல்யாணம் பண்ணி வைச்சிருப்போம்… ஏன்னா, மூத்தவ வள்ளியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நாங்க விரும்பினோம்… நாங்க மட்டுமல்ல, சிவநாதன், இந்திரன், கஸ்தூரி, உமா, எல்லாருக்கும் இது தான் எண்ணம், ஆசையும் கூட…” என்றதும் யுவி, துணா, மையன் மூவருக்கும் அதிர்ச்சி தான்…
அந்த அதிர்ச்சியை மேலும் பெரிதாக்கினார் வில்வ மூர்த்தி தன் வார்த்தைகள் மூலம்…
“நீ உலகம் முழுவதும் தேடினாலும் அந்த வள்ளிப் பொண்ணு மாதிரி கிடைக்கிறது கஷ்டம்டா… தன் தங்கச்சிக்கு நல்லது நடக்கணும்… அதுவும் அவளுக்கு முதலில் கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டு இன்னைக்கு வரை தன் கல்யாணத்தை தள்ளிப்போடுற பொண்ணுடா அவ… அம்பிகா அண்ணி மேல அந்த பொண்ணு எவ்வளவு பாசம் வச்சிருக்குன்னு உனக்குத் தெரியுமா?... இவ்வளவு ஏன் தேவிம்மான்னு உருகுவியே… உன் அம்மாக்கும் அந்த பொண்ணைப் பிடிச்சிருக்கு…” என்று பட்டென்று சில உண்மைகளை அவர் சொல்லிவிடவும்,
வ்ருதுணனின் கண்களில் வள்ளி வந்து போனாள்… மௌனமாக அவன் யுவியைப் பார்க்க, அவனோ அப்போதும் அமைதியாகவே இருந்தான்…
யுவியின் அமைதி வில்வமூர்த்திக்கு கோபத்தை உண்டாக்க, “இன்னும் எத்தனை நாள் இந்த அமைதி பின்னாடி நீ ஒளிஞ்சுக்கப்போற யுவி???...” என்றார் வேகமாக…
அவன் விரைவாக அங்கிருந்து அகல முயல, சட்டென்று எழுந்த வில்வ மூர்த்தி, “யுவி, இத்தனை நாள் நீ சொன்னதை நாங்க கேட்டோம்… உன் போக்குல உன்னை விட்டோம்…. இனியும் அப்படி உன்னை விட எங்களால முடியாது…” எனவும்
அவரை நின்று ஒரு சில நொடிகள் பார்த்தவன், எதுவும் சொல்லாமல் மாடிக்கு செல்ல,
“வேலா…” என்ற தேவியின் குரல் அவனை நிற்க வைத்தது…
“எனக்கு நீ பதில் சொல்ல வேண்டாம்… ஆனா உன் அம்மாக்கு பதில் சொல்லு… நீதான் உன் தேவிம்மா என்ன சொன்னாலும் கேட்பியே… அவளுக்குப் பிடிச்சா உனக்கும் பிடிக்கும்னு சொல்லுவியே எதுவா இருந்தாலும்… இப்போ அவளுக்கு என்ன பதில்டா சொல்லப்போற?...” என்ற வில்வமூர்த்தியின் கேள்வியில் கோபம் தெறித்தது…
“அப்பா… என்னைப் புரிஞ்சிக்கோங்கப்பா…” என்றான் அவன் இதுவரை போட்டுக்கொண்டிருந்த மௌனத்திரையை உடைத்தபடி கெஞ்சலுடன்…
“உன்னைப் புரிஞ்சிகிட்டதால தாண்டா உனக்கு நல்லது நடக்கணும்னு இவ்வளவு பாடுபடுறேன்… அது ஏன் யுவி உனக்குப் புரிய மாட்டிக்குது??..” என்ற தகப்பனின் குரலில் வருத்தம் மிக தெரிய…
கண்களை அழுந்த மூடியவன், சில நொடிகளுக்குப் பிறகு மெல்ல கண் திறந்து தாயைப் பார்த்தான்…
“சொல்லும்மா… நான் என்ன செய்யணும்?...”
“நீ சந்தோஷமா இருக்கணும்… என் வேலன் சந்தோஷமா இருக்கணும்… அவ்வளவுதான்…” என்ற தேவியின் விழிகளில் நீர் திரண்டேவிட்டிருந்தது…
அந்த நீரைக்கண்டவனுக்கோ உள்ளம் வலிக்க, தாயை மெதுவாக அணைத்துக்கொண்டான்…
“எனக்கு கொஞ்ச நாள் டைம் குடுப்பியா தேவிம்மா?...”
மகனின் கேள்வியில் சட்டென்று நிறைவு அடைந்த துர்காதேவி, “எடுத்துக்கோ வேலா…” என்றார் புன்னகையுடன்…
அவரின் புன்னகை கண்டதும், அவனுக்கும் தானாகவே புன்னகை வர, மெல்ல அங்கிருந்து சென்றான் தனதறை நோக்கி…
அவன் டைம் குடுப்பியா என கேட்டதும், ஏன் எதற்கு என்று கூட கேட்கவில்லை அங்கு யாரும்… அவர்கள் அனைவருக்கும் புரிந்தது அவன் சீக்கிரம் நல்ல பதிலை சொல்வான் என…
ஆனால், தேவிக்கும் வில்வமூர்த்திக்கும் மட்டுமே தெரிந்தது அவன் எதுவோ செய்யப் போகிறான் என…
அது என்ன வென்று அவர்களால் யூகிக்க முடிந்ததே தவிர, அவனிடம் அதைப் பற்றி கேட்டு அவனைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை அவர்கள்…
நடப்பது தங்கள் மகனுக்கு நல்லதாக நடக்கட்டும்… அவன் செய்யப்போகிறது எதுவாக இருந்தாலும் அது அவனுக்கு நல்ல முடிவைத் தர வேண்டும் என வேண்டிக்கொண்டனர் அந்த பாசம் மிகுந்த பெற்றோர்கள்…