“பாலா… பாலா…” என கூவிக்கொண்டே வந்தாள் மஞ்சரி பாலாவின் வீட்டிற்கு…
“வாம்மா… மஞ்சு… வா… பாலா சொன்னாம்மா, உன் கல்யாணம் சீக்கிரமே நடக்கப்போகுதுன்னு… ரொம்ப சந்தோஷம்…” என கஸ்தூரி சொல்லவும்
வெட்கத்துடன் நின்றாள் மஞ்சரி….
“ஆமா, என்ன உன்னை இப்போ எல்லாம் பார்க்கவே முடியலை… என்ன இங்க வரக்கூடாதுன்னு எதுவும் ப்ளான் போட்டு வச்சிருக்கியா என்ன?...” என கஸ்தூரி கேட்கவும்,
“அதெல்லாம்… எதுவுமில்ல ஆன்ட்டி… தின்னுட்டு தின்னுட்டு தூங்குறதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு… அதனால தான்…” என்றவள் உண்மையை சொல்ல…
கஸ்தூரிக்கு சிரிப்பு வந்துவிட்டது…
“வாயாடி… வா… உட்காரு… நான் உனக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்…” என்றபடி அவர் சமையலறைக்குள் செல்ல,
“ஆன்ட்டி… ஆப்பிள் ஜூஸ்… மறந்துடாதீங்க… கொஞ்சம் சுகர் தூக்கலா…வேணும்…” என்று கத்தி சொல்ல
“ஆமாம்மா… மொத்த டப்பாவையும் சேர்த்து இவ தலையில கொண்டு வந்து தட்டுங்க… அப்போவாச்சும் இந்த சுகர் பைத்தியம் இவளை விட்டு போகுதான்னு பார்க்கலாம்…” என்றபடி அங்கே வந்தாள் பாலா…
“வாடி ராசாத்தி… புதுசா தினுசா…” என்று மஞ்சு பாலாவைப் பார்த்து பாட, பாலா புரியாமல் விழித்தாள்…
“என்னடி முழிக்கிற?... நான் ஏன் பாடுறேன்னு தெரியலையோ?...” என்றாள் மஞ்சு மெதுவாக…
“தெரியலைடி…” என்றாள் அவளும் உதடு பிதுக்கி…
“அதெப்படி தெரியும்…. எங்களை தான் மேடம்க்கு கண்ணே தெரியாதே… புதுசா வந்த அண்ணன், ஹ்ம்ம்,,, அப்புறம் சிலரோட வாழ்த்து இதெல்லாம் தானே மேடம்க்கு இப்போ…” என சொல்லிக்கொண்டிருந்தவளின் வாயைப் பொத்தி ரூமிற்குள் அழைத்துச் சென்றாள் பாலா…
“ஹேய்… பாலா பிசாசே… எதுக்குடி என்னை இப்போ இங்க கடத்திட்டு வந்த?...”
“ஆமா இவ பெரிய அல்லிராணி…. கடத்திட்டு வந்தாங்களாம்… கடத்திட்டு… சீ… தூ… சும்மா இரு…”
“அடிங்க… என்னடி பேச்சு ஒரு மார்க்கமா இருக்கு?..” என மஞ்சு சந்தேகத்துடன் பாலாவைப் பார்க்க…
“அதெல்லாம் ஒன்னுமில்லையே… நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்…” என்று பாலாவும் சொல்ல…
“யாரு நீ?... எப்பவும் போல???... ஆமா ஆமா… சொல்லிக்கிட்டாங்க… வெளியே….” என மஞ்சு கிண்டல் செய்ய..
“ஹேய்… இப்போ உனக்கு என்னடி வேணும்?.. அதை முதலில் சொல்லித்தொலை…”
“ரைட்… இப்போ வந்தியா வழிக்கு?... குட்… சரி சொல்லு… உன் புது அண்ணன் என்னடான்னா உன் பிறந்த நாளைக்கொண்டாடுறார்… அப்புறம் வள்ளியோட அண்ணன் ஹ்ம்ம்… வள்ளியோட அண்ணன் என்று இரண்டு தடவை அழுத்தி சொல்லிவிட்டு, உனக்கு வாழ்த்தெல்லாம் சொல்லுறார்… ஹ்ம்ம்… என் பிறந்தநாளும் வந்துச்சே… அப்போ அவர் எனக்கு வாழ்த்து சொல்லலையே… உனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் வாழ்த்து?...” என்று புருவம் உயர்த்தி மஞ்சு கேட்க…
“என் அண்ணன் என் பிறந்தநாள் மட்டும் தான் கொண்டாடுனாரா?... அவரோட காதலி உன் பிறந்தநாளையும் தான் ரொம்ப சிறப்பா கொண்டாடுனார்… ஹ்ம்ம்… அப்புறம் என்ன சொன்ன?... ஸ்பெஷல் வாழ்த்தா?.. மண்ணாங்கட்டி… இன்னைக்கு நான் தான் போய் அவர்கிட்ட வேலை எல்லாம் சொன்னேன்… அப்போ எதோ ஒரு ஃபார்மாலிட்டிக்கு அவர் எனக்கு விஷ் செஞ்சார்… அவ்வளவுதான்…” என்று பாலா வெகு இலகுவாக சொல்லவும்…
“ஓஹோ… அப்படீங்களா மேடம், சரி… உன் பிறந்தநாள் இன்னைக்குத்தான்னு அவருக்கு எப்படி தெரியும்?...” என்று மஞ்சு கேட்க… தூக்கிவாரிப்போட்டவளாக நிமிர்ந்தாள் பாலா…
“சொல்லுடி… இப்போ சொல்லு… அவருக்கு எப்படி தெரியும்?...”
சற்று நேரம் யோசித்தவள், “இது என்ன பெரிய ஆச்சரியம், என் அண்ணன் சொல்லியிருப்பார்… சிம்பிள்…” என்றாள் சிரித்துக்கொண்டே…
“அடிப்பாவி…” என்ற மஞ்சு… “நீயெல்லாம் நல்லா வருவடி…” என்று சொல்ல…
“ரொம்ப தேங்க்ஸ்டி…” என்றாள் பாலாவும் புன்னகையுடனே…
அதன் பிறகு, கஸ்தூரி கொண்டு வந்த ஜூஸினை பருகியவள், சற்று நேரம் இருந்து கதை பேசிவிட்டு கிளம்ப தயாரானாள்…
அப்போது மஞ்சு, “பாலா உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்…” என்றாள்…
“ஹ்ம்ம்… சொல்லு மஞ்சு….”
“வள்ளி போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் லீவ்… உன் பிறந்த நாள் எப்போ எல்லாம் வருதோ, அப்போ எல்லாம் உன் ஆசைப்படி அவ உன் முகத்துல விழிக்கிறதே இல்லை… இது உனக்கு நிஜமாவே நிறைவை தருதா பாலா?...”
“……”
“உங்கிட்ட தான் கேட்குறேன் பாலா… பதில் சொல்லு… சின்ன வயசில நாம எப்படி எல்லாம் நம்ம பிறந்தநாளை கொண்டாடினோம்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப் பார்த்திருக்கியா?... நீ?...”
“உனக்கு நேரமாச்சுன்னு சொன்னல்ல… வா… போகலாம்…” என்றபடி பாலா மஞ்சுவின் கையைப் பிடிக்க… மஞ்சு கையை உதறினாள்…
அந்த செய்கை பாலாவிற்கு கோபத்தை ஏற்படுத்த, “சின்ன வயசில எனக்கு நடந்த எதையுமே நான் மறக்கலை… மறக்கவும் மாட்டேன்…” என கோபமும், விரக்தியுமாக சொன்னவளையே மஞ்சு இமைக்காமல் பார்க்க…
“என்னடி இப்படி பார்க்குற?... நான் பட்ட எந்த காயமும் இன்னும் என்னை விட்டு போகலை…” எனவும்,
“நீ ஏன் பாலா இப்படி இருக்குற?...”
“எனக்கென்ன நல்லாதான இருக்குறேன்…”
“கிழிச்ச…” என்றாள் மஞ்சு கோபத்துடன்…
பின், “இங்க பாரு பாலா… நீ யார் பேசுறதுக்கும் வாய்ப்பே தர மாட்டிக்குற?... இது கொஞ்சம் கூட நல்லா இல்ல… அவ்வளவுதான் நான் சொல்லுவேன்…”
“சரி சொல்லிட்டல்ல… முடிஞ்சதா?... போகலாமா?...” என பாலா அமைதியாக கேட்க…
மஞ்சுவிற்கு இவளை அடித்தால் என்ன என்று தோன்றியது… இருந்தும் பொறுமையை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டு அவளிடம் பேசினாள்…
“பாலா நீ நிதானமா யோசிச்சுப் பார்த்தாலே உனக்குப் புரியும்… ஆனா, நீ அதை யோசிக்கிறதே இல்லை… அதுதான் பிரச்சினையே…”
“…..”
“கொஞ்சம் யோசிச்சுப் பாரு… அப்பதான் சில விஷயங்கள் உனக்கே புரிய வரும்…”
“…..”
“ஏய்… ஒருத்தி சொல்லிட்டிருக்கேன்ல… வாயைத்திறந்து சரின்னு ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சா போயிடுவ நீ?...”
“நான் உனக்கு முதலிலேயே சொல்லியிருக்கேன்… எனக்கு தேவை இல்லாத விஷயங்களில், நான் தலையிட மாட்டேன்… அதே மாதிரி அதுல கருத்தும் சொல்லவேண்டியதும் இல்ல, யோசிக்க வேண்டிய அவசியமும் இல்ல… அது உனக்குத் தான் புரிய மாட்டிக்குது நான் என்ன பண்ண சொல்லு???...”
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி… நீ ஏன் தான் இப்படி இருக்கிறியோ?...சே…” என்றாள் ஆத்திரத்துடன் மஞ்சு…
அவளின் முகம் பற்றிய பாலா, “நான் இப்படித்தான்… ஏன்னா உனக்கு என் வலி தெரியாது…” என்றாள் சிரிப்புடன்…
“ஏன்?...” என்ற மஞ்சுவின் கேள்விக்கு “நீ உன் வீட்டுக்கு ஒரே பெண்… அதனால் என் வலியும், வேதனையும் உனக்கு நிச்சயம் புரியாது…” என சொல்லிவிட்டு அங்கிருந்து விருட்டென்று வெளியேறினாள் பாலா…