“கண்ணைத் திறந்து பாருங்க விதுன்…. ப்ளீஸ்… உங்ககிட்ட என் காதலை நான் சொல்லணும்…. என்னைப் பாருங்க விதுன்… அன்னைக்கு நான் உங்களைப் பிடிக்கலைன்னு சொன்னேன் தான… இன்னைக்கு சொல்லுறேன்… எனக்கு உங்களை மட்டும் தான் பிடிச்சிருக்கு விதுன்… என்னைப் பாருங்க… எங்கிட்ட பேசுங்க… விதுன்…” என அவனையேப் பார்த்துக்கொண்டு மனதினுள் சொல்லி அழுதாள் அவள்…
அவள் அழுகை அவனின் ஆழ்ந்த மயக்க துயிலை கலைத்தது மெதுவாய்… மெல்ல விழி திறக்க கஷ்டப்பட்டவன், வலியில் முகம் சுளித்தான்… பின், மெல்ல கண் திறந்தவனின் எதிரே பாலா இருந்த்தைக் கண்டு அதிர்ச்சியானவன், அவளின் அழுகை முகத்தினைக் கண்டு வலி கொண்டான்…
அவள் கண்கள் அவன் முகத்தினை விட்டு அகலவில்லை சிறிதும்… அவனிடம் பேசவும் அவள் முயற்சிக்கவில்லை… மௌனமாக கண்ணீரை மட்டும் சிந்தினாள்…
உடம்பில் வலி இருந்தாலும், அவள் மௌனம் அவனை மேலும் வதைத்தது மிக… இருந்தும் அவளையே விழி அகற்றாமல் பார்த்தான் அவன் காதலுடன்…
“வலி எடுத்தும் பொறுக்கிறேன்
உன் மௌனம் எண்ணி…
விழி திறந்தும் பார்க்கிறேன்
உன் அன்பை எண்ணி..
தவிப்பதும் துடிப்பதுமே காதல் எனில்
அதைத் திறம்பட நான் செய்வேன் என்றும்
உன்னைத் தவிர வேறு நினைவில்லாது…”
என அவன் விழிகள் சொன்ன சேதியில் அசைவற்று நின்றவள், பின், எதுவும் சொல்லாமல் அங்கிருந்து விருட்டென்று வெளியேறினாள்…
பதினைந்து நாட்களுக்குப் பிறகு, வ்ருதுணன் நன்றாக குணமாகிவிட…. அலுவலகத்திற்கு வர ஆரம்பித்திருந்தான்…
“இங்கே பாருடி… ஆன்ட்டி… சீக்கிரம் கோவிலுக்கு வர சொன்னாங்க… கிளம்புற ஐடியா உங்க இரண்டு பேருக்கும் இருக்கா இல்லையா?...” என மஞ்சு வள்ளியையும், பாலாவையும் பார்த்துக் கேட்க, அவர்கள் இருவருமே மௌனம் சாதித்தனர்…
“இது சரிபடாது… நான் ஆன்ட்டிக்கே போன் பண்ணி சொல்லிடுறேன்…” என போனை கையிலெடுத்த போது அதைப் பிடுங்கி கொண்டாள் பாலா…
“இப்போ என்ன உனக்கு?... கோவிலுக்கு கிளம்பணும்… அவ்வளவுதான?... கிளம்பிட்டு வரேன்… போதுமா?...” என சொல்லிவிட்டு பாலா செல்ல, வள்ளியும் கிளம்பச் சென்றாள்…
சிவநாதன், இந்திரன், உமையாள், கஸ்தூரி, பாலா, வள்ளி, நீலகண்டன், விஜயா, மஞ்சரி என அனைவரும் கோவிலுக்கு வந்திருந்தனர்…
இதமான ஒரு அலை நெஞ்சில் தவழ்வதை வள்ளி கண் மூடி அனுபவித்தாள்…
அப்போது, கஸ்தூரி, பாலா மற்றும் மஞ்சரியுடன் வந்து, “மஞ்சு… பார்த்துக்கோ, இன்னும் கொஞ்ச நேரத்துல இவங்க இரண்டு பேரையும் பொண்ணு பார்க்க வர்றாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க… இன்னைக்கே நிச்சயமும் முடிச்சிடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்… அவங்களுக்கு மட்டுமில்லை… உனக்கும் இன்னைக்குத்தான் நிச்சயதார்த்தம்…” என்று சொல்ல…
“அம்மா… யாரைக் கேட்டு முடிவு பண்ணீங்க?...” என வெடித்தாள் பாலா…
“யாரைடி கேட்கணும்…?...” என்று கஸ்தூரியும் அவளை விட சத்தமாக கேட்க,
“என்னைக் கேட்கணும்… வாழப்போறவ நான்… என்னைக் கேட்காம… எப்படி நீங்களா முடிவு எடுக்கலாம்?...” என்றாள் பாலா…
“உன்னைக் கேட்டப்போ நீ என்னடி சொன்ன?... பிடிக்கலைன்ற வார்த்தையை தவிர வேறென்ன சொல்லி நீ கிழிச்ச?...” என கஸ்தூரி கேட்க, பாலா வாயடைத்துப்போனாள்…
பாலாவின் பேச்சற்ற நிலையைக் கண்ட வள்ளி, கஸ்தூரியை சமாதானப்படுத்தும் விதமாக, “சின்னம்மா,… நீங்க…” என ஆரம்பித்தபோது,
“யாரும் எனக்காக பேசத் தேவையில்லை… மீறி பேசினா நல்லா இருக்காது சொல்லிட்டேன்…” என்றாள் பாலா பட்டென்று…
அவளின் பதிலில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கஸ்தூரி, “என்னடி சொன்ன?...” என்றவாறு அவளை அடிக்க கையை நீட்ட,
சட்டென்று இடையில் புகுந்து அவரின் கையைப் பிடித்துக்கொண்டாள் வள்ளி…
“சின்னம்மா… என்ன காரியம் செய்யப் பார்த்தீங்க?..!!!”
“நீ சும்மா இரு வள்ளி… எனக்கு ஆத்திரம் அடங்க மாட்டேங்குது… இவ என்னைக்குத்தான் யாரைத்தான் புரிஞ்சிக்கிட்டா?... திமிரு உடம்பு முழுக்க திமிரு… இவ அன்னைக்கு வீம்பு பிடிச்சப்பவே நாலு சாத்து சாத்தியிருக்கணும்… அப்ப சும்மாவிட்டேன் பாத்தியா, அதான் இப்போ இவ என் தலை மேல ஏறி ஆடுறா… இவளை கொன்னா கூட தப்பில்லை…” என்று கஸ்தூரி சொல்லிக்கொண்டிருக்கையில்,
“நிறுத்து கஸ்தூரி… என்ன பேச்சு பேசுற நீ?...” என்றபடி அங்கே வந்தார் உமையாள்…
“வேற என்ன செய்ய சொல்லுறீங்க அக்கா?... இவளை பெத்துட்டேனே… இன்னும் என்ன எல்லாம் என்னை பேச வைக்கப் போறாளோ??? தெரியலை…” என கஸ்தூரி அழத்துவங்க, வள்ளி அவரைத் தேற்றினாள்…
“பாலா… அம்மாப் பத்தி உனக்குத் தெரியும்தான?... படபடன்னு பேசுவாளே தவிர, மனசுல எதுவும் வச்சிக்கமாட்டா…” என்று உமையாள் சொல்லும்போதே,
“அதுதான் தெரியுமே… அவங்களைப் பத்தி… எப்பவும் அவங்களுக்கு நான்னா இளக்காரம்தான… அது இப்போதான் எனக்கு புதுசா தெரியணுமா என்ன?...” என்ற பாலாவின் பதிலில்
“ஏய்… என்னடி…” என்று எழுந்த கஸ்தூரியை அமர வைத்தாள் வள்ளி…
“கஸ்தூரி… நான் தான் பேசிட்டிருக்கேன்ல… நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு…” என அவரிடம் சொன்ன உமா,
பாலாவிடம், “உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு நாங்க ஆசைப்படுறதுல என்னடா தப்பிருக்கு?... ஏன் உன் பெரியம்மா-பெரியப்பா ஆசையை நீ நிறைவேத்தி வைக்கமாட்டியா என்ன?...” என கேட்க…
“கண்டிப்பா பெரியம்மா… நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்… ஆனா, இப்போ மாப்பிள்ளை அது இதுன்னு அம்மா ஏதோ சொன்னாங்க… உண்மையா பெரியம்மா?...”
“ஆமாடா… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவாங்க….”
“பெரியம்மா… நான்… வந்து…” என்று இழுத்த பாலாவிடம்,
“இல்லடா… போன தடவை மாதிரி இந்த தடவை நடக்காது… உனக்கு அந்த வ்ருதுணனைப் பிடிக்கலை… சரி விடு… போகட்டும்… ஆனா, இன்னைக்கு வர்ற மாப்பிள்ளையை கண்டிப்பா உனக்கு பிடிக்கும்…” என உமா சொன்னதைக் கேட்டு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் நின்றிருந்தாள் பாலா…
“யாரோ ஒருவரை அழைத்துக்கொண்டு வந்து இவன் தான் மாப்பிள்ளை என்று முடிவே பண்ணிவிட்டார்களா?... இல்லை… என் விதுனை தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… மாட்டேன்….” என அவளுக்குள்ளே சொல்லிக்கொண்டிருந்தாள் பாலா…
“என்ன பாலா?... என்ன யோசனை?... மாப்பிள்ளை இப்போ வந்திடுவார்மா… உனக்கு நிச்சயம் இந்த மாப்பிள்ளையை பிடிக்கும்… நீ வேணும்னா பாரேன்…” என உமா சந்தோஷமாக சொல்ல..
வள்ளிக்கும், மஞ்சுவிற்கும் கூட அதிர்ச்சியாகத்தான் இருந்தது…
எல்லாம் கை கூடி வரும் வேளையில் இது என்ன புது குழப்பம்?... என்று மஞ்சு நொந்து போக, வள்ளியோ, “என்னதான் நடக்கிறது இங்கே?... வ்ருதுணனை விட்டுவிட்டு எப்படி வீட்டில் வேறொரு மாப்பிள்ளைப் பார்த்தார்கள்?... எப்படி இது சாத்தியம்???..” என தனக்குள் கேள்விக்கேட்டுக்கொண்டாள்…
“பெரியம்மா… எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை… இப்போ இங்க வரப்போகுற மாப்பிள்ளையை வரவேண்டாம்னு சொல்லிடுங்க… எனக்கு அவரைப் பிடிக்காது… அவரை மட்டுமில்ல யாரையுமே எனக்குப் பிடிக்காது…” என கோபமாக சொல்லிவிட்டு பாலா செல்ல….
“அது நானா இருந்தாலுமா?...” என்ற குரல் அவளை நிற்க வைத்து திரும்பி பார்க்க வைத்தது…