10. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்
கண் பார்த்து தனது தேடலை, தனது முடிவை சொல்லக் காத்திருந்தான் யுவி… வள்ளியிடம்…
அவளும், அவன் சொல்வதைக் கேட்க தயாரான நேரத்தில் அவன் உதடுகள் அவளிடம், எதையோ சொல்லத்துடித்தது மிக…
இருந்தும் பொறுமையாக அவன் பார்வையை சந்தித்தப்படி நின்றிருந்தாள் வள்ளி…
அப்போது….
“வள்ளி…. நீ இங்க தான் இருக்குறியா?...” என்றபடி வந்தார் துர்காதேவி…
வந்தவர் நேரே யுவியிடம், “அம்மா நீ கேட்ட டைம் கொடுத்துட்டு இன்னைக்கு இப்படி நிச்சயம் பண்ணப்போறேன்னு தப்பா எடுத்துக்காத வேலா… உனக்கு வள்ளியைப் பிடிச்சிருக்கான்னு எல்லாம் அம்மா உங்கிட்ட கேட்க மாட்டேன்… அம்மா உங்கிட்ட நேரடியாவே கேட்குறேன்… உனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா இல்லையா?...” என்று பட்டென்று வள்ளியின் முன்னிலையிலே கேட்டுவிட…
யுவியின் கண்கள் ஒரு நிமிடமென்றாலும் மூடித்திறந்தது… கண் மூடி திறந்த வேளையில் அவனின் கண்கள் தஞ்சம் புகுந்தது அவளின் விழிகளிடத்தில்…
சில மணித்துளிகளுக்குப் பின், அவன் தலை அசைந்தது தானாக, உதடுகளும் சம்மதம் என்று உரைக்க….
தேவிக்கோ சந்தோஷம் தாளவில்லை… மகனின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டு “ரொம்ப சந்தோஷம் வேலா…” என்றார் நிறைவுடன்…
பின், மெதுவாக வள்ளியிடம் திரும்பியவர், “நீ என்ன சொல்லுற வள்ளி?... உனக்கு என் பையனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமாம்மா?...” என்று கேட்க…
அவள் அந்த நேரம் அவள் மனதை கூட நாடவில்லை… யுவியின் முகத்தினை தான் பார்த்தாள்…
அவள் விழிகள், “நான் என்ன சொல்ல?...” என கேட்க… அவன் விழிகள் அவளிடம் சொன்ன சேதியில் அவள் மனம் தடுமாறியது…
“சம்மதம் அத்தை…” என்ற வார்த்தையும் அவள் சொல்ல… அவருக்கோ, உச்சி குளிர்ந்து போனது…
அந்நேரம் அங்கு வந்த கஸ்தூரிக்கும் கொள்ளை சந்தோஷம் உண்டாக, மகளை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார்…
இரண்டு மாதங்களுக்குப் பிறகு,
நிறைந்த முகூர்த்த நாளில் அனைவரின் ஆசியுடன் வள்ளியின் வற்புறுத்தலிலும், பிடிவாதத்திலும், உறுதியான முடிவிலும், வ்ருதுணன்-பாலா திருமணம் முதலில் நடக்க முடிவானது…
எப்போதடி என் மனதை உன்னிடத்தில் சொல்ல… நீ உன் மனதில் காதல் உண்டானதையும் எப்போதடி என்னிடத்தில் கூறப்போகிறாய் என்ற தவிப்புடன் வ்ருதுணன் பாலாவின் கழுத்தில் தாலி கட்டினான்…
அதன் பின்னர், யுவி, மூன்று முடிச்சுப்போட்டு வள்ளியை தன் சரிபாதியாக ஆக்கிக்கொண்டான்… அவள் அவனது பாதியான அதே நேரம், அவளது விழிகளில் இருந்து இரண்டு துளி நீர் வந்து விழுந்து யுவியின் கைகளை நனைக்க, அவன் வேண்டாம் என்பது போல் தலை அசைத்து, இன்று பிடிக்கும் உன் கரத்தினை என் வாழ்வு முழுமைக்கும் விடமாட்டேன் என சங்கல்பம் பூண்டு, அவள் கைகளை மென்மையாகப் பற்றி அக்கினியை வலம் வந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டான்…
ஆயிரம் தான் நீ என் கரம் பற்றி தாலிக்கட்டினாலும், உன் மேல் எனக்குள்ள கோபம் சிறிதும் மாறாது என அவனை முறைத்தபடி சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்த மைவிழியனை காதலுடனும், பொய் கோபத்துடனும் பார்வையிட்டாள் மஞ்சரி…
இரவின் அமைதியில், தென்றல் மெல்ல தவழ,
வ்ருதுணனின் அறைக்குள் மெல்ல அடி எடுத்து வைத்தாள் பாலா கையில் பால் டம்ளருடன்…
கையிலிருந்த பாலை வாங்கி பக்கத்திலிருந்த மேசை மீது வைத்தவன், அவளை தனதருகே அமர சொன்னான்….
பின், ஒரு முடிவுடன், அவளை பார்த்தவன், “திரபா…” என்றழைத்தான் மென்மையாக…
அவனின் வித்தியாசமான அழைப்பில் கவரப்பட்டவள், சட்டென நிமிர்ந்து பார்த்தாள் புரியாமல்…
“இது உன்னோட பேர் தான்… இந்.........திரபா…………….லா……” என்று சொல்ல, அவள் மெல்ல சிரித்தாள்…
“எனக்கு உன்னைப் பிடிக்கும் ரொம்ப,,,, அதனால தான் உன்னை வந்து பெண் கேட்டேன்… அப்போதான் நீ…” என்று சொல்ல ஆரம்பித்தவனை, அவன் வாய் மீது தன் விரல் வைத்து தடுத்து வேண்டாம் என்றாள் அவள்…
மெல்ல அவள் விரல் பற்றி அவள் கைகளை விலக்கியவன், “இல்லடா… நான் உங்கிட்ட என் மனசுல இருக்குறதை எல்லாம் சொல்லணும்…” என்றவன் மேலும் தொடர்ந்தான்…
“நீ பிடிக்கலைன்னு சொன்னதும், உண்மையிலேயே மனசு வலிச்சதுடி… ஆனா, அந்த வலி உனக்கு தெரியக்கூடாதுன்றதுல நான் உறுதியா இருந்தேன்… அதனால தான், அதுக்குபிறகு அதைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட நான் உங்கிட்ட கேட்கலை… இப்போ வரை… எனக்கு உன் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்… என்னைப் பிடிக்கலைன்னு நீ சொன்னதுல உனக்கு சந்தோஷம்னா கோடிமுறைன்னாலும் நான் வலி தாங்கிப்பேன்…. திரபா…” என அவன் சொல்லி முடிக்கும் போது அவள் விழிகளை நீர் சூழ்ந்திருந்தது…
“உன்னை அழ வைக்க நான் இப்படி சொல்லலைடா… சாரிடா…” என்று அவன் கெஞ்ச… அவள் விழிகளை துடைத்துக்கொண்டாள்…
“உன் மனசுக்குள்ள நான் வருவேன்னு தெரியும்… ஆனா, உன் மனம் சீக்கிரம் மாறும்னு நான் நினைக்கலைடா….” என்று சொன்னவனுக்கு அன்று மருத்துவனையில் அவள் அழுதது நினைவு வர,
“உன்னை ரொம்ப அழ வைச்சிட்டேனா திரபா? அன்னைக்கு ஹாஸ்பிட்டலில்?... ஹ்ம்ம்….”
“அன்னைக்கு தான் நான் என் காதலை ரொம்பவே உணர்ந்தேன்… உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்னு அன்னைக்கு தான் நான் புரிஞ்சிக்கிடேன்… நிஜமாவே நீங்க இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லன்னு நான் முடிவெடுத்தப்போ தான் கோவிலில் யாருடனோ நிச்சயம்னு சொன்னாங்க… எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா அன்னைக்கு… அதான் அன்னைக்கு பெரியம்மா கிட்ட அப்படி கோபமா கத்திட்டு போனேன்… அப்பதான் உங்க குரல் எனக்கு கேட்டுச்சு… அது நானா இருந்தாலுமான்னு நீங்க கேட்ட நொடி, உங்க கைபிடிச்சு என் காதலை உங்ககிட்ட நான் சொல்லணும்னு தவிச்சேன்… அப்புறம் அவங்க போன பின்னாடி உங்ககிட்ட காதலை சொல்லதான் நினைச்சேன்… ஆனா, என்னால வார்த்தையை கோர்க்க முடியலை… நீங்க சம்மதமான்னு கேட்டதுக்கும் சரின்னு தலை மட்டும் அசைச்சேன்…” என்றவள் அந்த நாளின் நினைவில் முகம் மலர,
பின், “இப்பவும் வார்த்தையை கோர்க்க முடியலைதான்… ஆனா, நான் சொல்லணும்... என் விதுன் கிட்ட சொல்லணும்… ஐ லவ் யூ விதுன்… ஐ லவ் யூ சோ மச்…” என்றாள் அவன் கண்களைப் பார்த்த வண்ணம்…
“ஐ லவ் யூ டூ திரபா…” என்றான் அவனும் சிரித்துக்கொண்டே…
பின் அவன் அவளையேப் பார்க்க, அவள் அவன் பார்வையில் சற்று தடுமாறினாள்…
“நான் உன்னோட சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன் திரபா… ஆனா, என் திரபா மனசுல என்னைக்கைப்பிடிச்ச சந்தோஷம் இருந்தாலும், சில ஆறாத காயங்களும் இருக்குன்னு என் மனசு சொல்லுது…” என அவன் சொல்லி முடித்த வேளை…
அவள் முகம் இறுகியது… கோபம் அவள் முகத்தில் குடிகொண்டது…
“வள்ளி மேல உனக்கென்ன கோபம்?.. ஏன் நீ வள்ளிகூட பேசுறது இல்லை… இது எதையுமே நான் கேட்க மாட்டேன்… நீயா சொல்லுறவரை… ஆனா, ஒரு விஷயம் மட்டும் நான் சொல்லிக்கிறேன்… எனக்கு வள்ளியும் முக்கியம் நீயும் முக்கியம்…” என்றான் அழுத்தமாக…
“தெரியும்… உங்களுக்கு அவளும் முக்கியம்னு…” என்றாள் அவளும் அழுத்தமாக…
“திரபா…” என்று சொன்னவன், அவள் கைகளைப் பற்ற, அதற்கு மேலும் தாங்காமல் அவன் கைகளிலேயே முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள் அவள்…
அவளின் மனதில் ஆறாமல் இருந்த வடுக்களின் பக்கத்தை அவனிடம் சொல்வதற்காக அவள் புரட்டினாள்…
இத்தனை வருடங்கள் மனதிற்குள் பூட்டி வைத்திருக்கும் கோபத்தையும், வார்த்தைகளையும், அவள் அவனிடம் கொட்டத் தயாரானாள்…