“இப்படி உன்னை சிரிச்ச முகமா பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு திரபா… முதல் அப்படிங்கிற வார்த்தை உன் முகத்துல எவ்வளவு தூரம் சந்தோஷத்தைக்கொண்டு வருது… ஆனா….”
“ஆனா… என்னங்க?... சொல்லுங்க…???”
“யுவி எனக்கும் மூத்தவன்… இருந்தாலும், நம்ம கல்யாணம் தான் முதலில் நடந்துச்சு… அது உனக்கு தெரியும் தானே?...” என கேட்க… அவள் ஆம் என்று தலை அசைத்தாள்…
“ஹ்ம்ம்… நமக்கு முதலில் கல்யாணம் நடக்க காரணம் யாருன்னு உனக்கு தெரியுமா?...” என அவன் கேட்க… அவள் தெரியாது என்றாள்…
“வள்ளி தான் காரணம்…. வள்ளி சொன்ன வார்த்தை தான் காரணம்…” என்றவன், பாலாவிடம் வள்ளி கூறியதை சொன்னான்…
“அவ மனசுல தெரிஞ்சோ தெரியாமலோ காயம் பட நானே காரணமாயிட்டேன்… நான் முதலில் பிறந்ததால அவளுக்கு நிறைய இடைஞ்சல்… ஆனா, அது எதுவுமே எனக்கு தெரியாம போயிட்டு… தெரிஞ்சு நான் சரி பண்ணனும்னு நினைச்சப்போ அவ எங்கிட்ட இருந்து விலகிட்டா… போகும்போது எங்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா… உனக்கே எல்லாம் முதலில் கிடைக்கட்டும்னு… அப்போ இருந்து இப்போவர, என் மனசுல கேட்டுட்டே இருக்கு அந்த வார்த்தை… அதுக்குப்பிறகு எதையுமே அவளுக்குப் பிறகு தான் நான் பேசுறேன்… செய்யுறேன்… அவளுக்கு அடுத்து… அதனால, என் இந்து கல்யாணம் தான் முதலில் நடக்கணும்… அவளை தான் முதல்ல பெண் பார்க்க வரணும்… எல்லா நல்லதுமே அவளுக்கு தான் முதலில் நடக்கணும்…” என்று வ்ருதுணனிடம் ஆரம்பத்தில் சொன்னாள் வள்ளி…
பின் திருமணம் யுவியுடன் என்று முடிவான போது, மூத்தவன் யுவி என்னும் பட்சத்தில், உங்கள் இருவருக்கும் தான் முதலில் திருமணம் என்று பெரியவர்கள் சொன்ன போது, அப்படி எனக்குத்தான் முதலில் திருமணம் என்று நீங்கள் முடிவெடுத்தால், எனக்கு திருமணமே வேண்டாம் என்றாள் வள்ளி… அதன் பிறகு அவளின் விருப்பத்திற்கேற்ப அனைவரின் திருமணமும் இனிதே நடந்தது...
“இப்பவும் உனக்கு வள்ளி மேல ஏதோ இனம் புரியாத கோபம் இருக்கும்… ஆனா, அவ மேல தப்பு இல்லை அப்படிங்கிறது உனக்கு கொஞ்சம் புரிஞ்சாலும் நான் சந்தோஷப்படுவேண்டா…” என அவன் சொல்ல… அவள் கத்தாமல், கோபப்படாமல் யோசிக்க ஆரம்பித்தாள்…
“அவ தான் நம்ம கல்யாணம் முதலில் நடக்க காரணம்னு எனக்கு தெரியாது இப்போவர… ஆனா, அவ மேல எனக்கு இருக்குற கோபம் மறையலை… அது மாறுமான்னும் எனக்கு தெரியலை… ஆனா, யோசிக்க வைக்குது விதுன்… நான் என்ன செய்ய?... எனக்குப் புரியலை…” என கலங்கி கேட்க…
“போதும்டா… இனி நீ என்ன செய்யணும்னு நான் சொல்லுறேன்…” என்றவன் அவள் காதில் ஏதோ முணுமுணுக்க, அவள் வெட்கம் கொண்டாள்…
அப்போது…
யுவி தன்னிடம் பேசியதை வள்ளியிடம் சொல்லத்துவங்கினார் துர்காதேவி…
“உனக்கு வள்ளியைப் பிடிச்சிருக்குன்னு அப்பா சொன்னார்… உண்மையா தேவிம்மா?...”
சட்டென்று அவன் கேட்ட கேள்வியில் ஒருநிமிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் போனார் துர்காதேவி…
“உங்கிட்ட தான் கேட்குறேன்… சொல்லு தேவிம்மா…”
“உண்மைதான் வேலா… எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றவர்,
“உனக்கு???..” என்று கேட்டுவிட்டு மகனின் முகத்தினை ஆராய்ந்தார்…
அவனின் முகத்தில் பலவித உணர்ச்சிகள் வந்து போனதை கூர்ந்து கவனித்தவர், “என்னாச்சு வேலா…” என்று கேட்க…
“என மனசு எங்கிட்ட இல்லம்மா…” என்றான் அவன் உணர்ச்சிகள் துடைத்த குரலில்…
“வேலா…” என்று அவர் மகனின் முகம் பற்றி கேட்க…
“நான் உங்கிட்ட எதையுமே மறைச்சது இல்ல தேவிம்மா… அது உனக்கே தெரியும்… நான் இப்படி இருக்குறதுக்கு காரணமும் உனக்கு தெரியும்…” என்றவன் கண்களை அழுந்த மூடி திறக்க… மகனின் மனம் படும் பாடு அறிந்த அந்த தாயோ, அவனது தலைமுடியை கோதிவிட்டு அவனை இலகுவாக்கினார்…
பின், “அதை மறந்திடு வேலா…” என்றார் அவர் மெதுவாக…
அதைக் கேட்டதும், அவன் உடம்பு விறைப்பதை உணர்ந்து கொண்டவர், “உன் நல்லதுக்குத்தான் வேலா… அம்மா சொல்லுறேன்… இந்த வள்ளி ரொம்ப நல்ல பொண்ணுப்பா… நிச்சயம் அவ உன் காயத்துக்கு எல்லாம் மருந்தா இருப்பா வேலா… அம்மா சொல்லுறதைக் கேளு… நடந்ததை மறந்திட்டு நடக்கப்போறதை ஏத்துக்க பழகிக்கப்பா…” என்று சொல்ல…
“ஒரு உண்மை சொல்லட்டுமா தேவிம்மா… நடந்தது எதையுமே என்னால மறக்க முடியலை தேவிம்மா இப்போவரை… ஆனா…. ஆனா, இந்த வள்ளி, அந்த பொண்ணைப் பார்த்ததுல இருந்து நான் நானா இல்ல தேவிம்மா… எதோ விட்டுப்போன ஜென்ம பந்தம் போல இருக்கு தேவிம்மா… அவளைப் பார்க்குற ஒவ்வொரு நிமிஷமும் நான் என்னை இழக்குறேன்ம்மா அவகிட்ட… இது துரோகமா படுதும்மா எனக்கு… என் த்வனி இருக்குற மனசு இன்னொருத்திகிட்ட எப்படி தேவிம்மா போகுது???... எனக்கு அவமானமா இருக்கு தேவிம்மா… நான் என் த்வனிக்கு துரோகம் பண்ணுறேன்னு தோணுது தேவிம்மா… ஆனா, இந்த வள்ளியை இன்னொருத்தின்னு நினைக்கவே என்னால முடியலைம்மா… இது துரோகம்னு நான் நினைச்ச அடுத்த கணமே, இது உன்னை சேர வந்த வரம், விட்டுடாதன்னு என் மனசே என்னை கொல்லுது தேவிம்மா… இத்தனை நாள் என் மனசு தவிச்சது… என் த்வனியைப் பார்க்காம… ஆனா, இந்த வள்ளியைப் பார்த்த நிமிஷமே அது அப்படியே எனக்குள்ள அடங்கி போயிடுச்சு தேவிம்மா… வள்ளியை விட்டு விலகி வந்ததுமே மறுபடியும் இது துடிக்க ஆரம்பிக்குது தேவிம்மா… அவளை மறுபடியும் பார்த்தாதான் அமைதி ஆகுது… இது ஏன் எதுக்குன்னு எனக்கே தெரியலை தேவிம்மா… எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கும்மா… த்வனிதான் இந்த ஜென்மம் மட்டுமில்ல ஏழேழு ஜென்மத்துக்கும் அவ ஒருத்தி மட்டும் தான் எனக்கு மனைவின்னு நான் முடிவே பண்ணினேன் தேவிம்மா… ஆனா, என் த்வனி இடத்துல வள்ளியை வச்சுப் பார்க்க என் மனசுக்கு எப்படி முடிஞ்சதுன்னு எனக்கு புரியலை தேவிம்மா… புரியலை…” என்று விழிகள் சிவக்க, கலங்கியவனை சட்டென்று அணைத்துக்கொண்டார் தேவி…
“ஒன்னுமில்லப்பா… என் வேலன் யாருக்கும் துரோகம் பண்ணலை… என் வேலனால பண்ணவும் முடியாது… வருத்தப்படாத வேலா… அம்மா இருக்கேன்ல… உங்கூட… உன் தேவிம்மா இருக்கேன்ல… நான் இருக்குறப்பவே என் பையன் கலங்கலாமா?... அதை நான் பார்த்துட்டு உயிரோட இருக்கணுமா?...” என்று அவர் சொல்லிய மறுவினாடியே அவரின் வாயை தன் கைகளால் மூடினான் யுவி…
“என்ன வார்த்தை சொல்லிட்ட தேவிம்மா… எப்படி தேவிம்மா உனக்கு இப்படி பேச மனசு வந்தது???”
அவன் அப்படி கேட்டதுமே, தான் செய்த தவறு அவருக்கு புரிய, அவசரம் அவசரமாக, “உன் தேவிம்மா உங்கூட தான் எப்பவும் இருப்பேன்… எங்கேயும் போகமாட்டேன்… சத்தியமா…” என்று அவனை சமாதானப்படுத்த, அவனும் சற்றே அமைதியானான்…
“வேலா அம்மா சொன்னா கேட்பீயா?... இல்லாதவளை நினைச்சிட்டு கஷ்டப்படுறதை என்னாலயும் பார்க்க முடியலை.. உன் மனசுக்கும் வள்ளியைப் பிடிச்சிருக்கு…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது யுவி குறுக்கிட, அவனை பொறுமையாக இருக்கும்படி சொல்லிவிட்டு தொடர்ந்தார் தேவி…
“நீ சொல்லுற இந்த துரோகம் எல்லாம்… த்வனி உயிரோட இருந்து வள்ளியை நீ நினைச்சிருந்தா தான்… அப்பக்கூட நீ கேட்கலாம்… நேசிச்சவங்க இறந்து, இன்னொருத்தரை நினைக்குறது கூட இறந்து போனவங்களுக்கு நாம செய்யுற துரோகம் தானேன்னு???… உன்னை பொறுத்தவரைக்கும் இந்த கேள்வியே தப்புதான் வேலா…
உனக்கு புரியும்படி சொல்லுறேன்… உன் மனசுல த்வனி இருக்குறது உண்மைதான்… ஆனா, அதே நேரத்துல, வள்ளியைப் பார்க்குறப்போ உனக்குள்ள தோணுதே வரம்னு… அது ஏன் தோணனும் உனக்கு???... த்வனி இறந்து போயிட்டான்னு தான் நானும் நினைச்சேன்… ஆனா, அவளே ஏன் இந்த வள்ளியா பொறந்திருக்கக்கூடாது உன்னை கல்யாணம் பண்ணிக்க???… சில விஷயம் நம்ம கை மீறி போகுறது எவ்வளவு உண்மையோ, அதே போல, இந்த உலகத்துல நம்ம துணை யாருன்னு முடிவு பண்ணுறதுல கடவுளோட பங்கும் இருக்குறது மறுக்க முடியாத உண்மை வேலா… த்வனி மேல நீ ஆசப்பட்ட… ஆனா, அவ போயிட்டா… அது விதி… அந்த விதி தான், த்வனியை, வள்ளியா உங்கூட சேர்த்து வைக்க முயற்சி பண்ணுது… இது எப்படி நீ த்வனிக்கு பண்ணுற துரோகம் ஆகும்???... கடவுளோட அமைப்பே நீ வள்ளியைக் கைப்பிடிக்கணும் அப்படிங்கிறது தான்… அது எனக்கு புரிஞ்சிட்டு… உனக்கும் புரிஞ்சா நல்லா இருக்கும்னு தான் நானும் ஆசப்படுறேன்… வேலா…” என தேவி சொல்லிவிட்டு மகனைப் பார்க்க, அவன் முகத்தில் குழப்பமும், தெளிவும் ஒருசேர வந்து நின்றது…
அதைக் கண்டவர், “சரிப்பா… அம்மாக்கு தூக்கம் வருது… நான் போகட்டுமா?...” என்று கேட்டுவிட்டு இரண்டி அடி எடுத்து வைத்தவர் அப்படியே நடக்க முடியாமல் சரிய, சட்டென்று தாயைப் பிடித்துக்கொண்டான் யுவி..