“ஏ புள்ள, எங்க ஊர் சுத்தப் போன. உங்கம்மா போய்ட்டா உன்னைக் கேக்க ஆள் இல்லாமப் போச்சா”, போதையில் வாய் குழற மணி தேவியிடம் கத்தினான்.
“இல்ல நைனா, ஊர் சுத்த எல்லாம் போவல. மீனாக்கா வீடு அப்பறம் அம்மா வேலை செஞ்ச மத்த வீடுங்களுக்கெல்லாம் போய் நாளைலேர்ந்து நான் வீட்டு வேலை செய்ய வரேன்னு சொல்லிட்டு வந்தேன்”
“ஓ அப்படியா, பொறுப்பா இருந்தா சரிதான். இப்போ எனக்கு பசிக்குது. இந்த வெற்றி நாய் வேற எங்கிட்ட இருந்த துட்ட பிடிங்கிட்டு பக்கத்து ஊருக்கு போய்ட்டான். நீ வீட்டுல ஏதானும் ஆக்கி வச்சிருக்கியா”
“சோறாக்கி வச்சுட்டுத்தான் நைனா நான் போனேன். நீ உள்ள வா, நான் சாப்பாடு எடுத்து வைக்கறேன்”, என்று தந்தையிடம் கூறியபடியே கதவைத் திறந்து உள்ளே போனாள் தேவி.
தேவிக்கு தன் வீட்டு வேலை முடித்து விட்டு, மற்ற வீட்டு வேலைகளுக்கும் போய் விட்டு பள்ளிக்கூடம் ஓடத்தான் நேரம் சரியாக இருந்தது. மாலையிலும் அதேக் கதைதான், பள்ளியிலிருந்து நேராக மற்ற வீடுகளுக்கு சென்று வேலை முடித்து அவள் வீடு வந்து சேரவே எட்டு மணி ஆகி விடும். அதன் பின்னர் இரவு சமைத்து அனைத்தையும் ஒழித்து, தேய்த்து முடிக்க பத்து மணி ஆகிவிடும். அதன் பின்னர் எங்கிருந்து படிப்பது. அவளின் இந்த ஓட்டம் அவளின் அந்த மாதத்திய தேர்வில் மதிப்பெண்களாக தெரிந்தது. முதல் முறையாக தேவி அவளின் பள்ளி வாழ்க்கையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாக மதிப்பெண்கள் வாங்கி இருந்தாள்.
அவளின் கணித ஆசிரியை தேவியைக் கூப்பிட்டு கேட்க, தேவி தான் வீட்டு வேலைக்குப் போவதால் தனக்கு படிப்பதற்கு நேரம் இல்லாமல் போவதைக் குறித்துக் கூற, அவரும் மீனா கூறியதையே வேறு விதமான வார்த்தைகளில் கூறினார்.
தேவியும் தான் தன் தந்தையையும், அண்ணனையும் விட முடியாது என்று கூறி, வேண்டுமானால் வீட்டு வேலைகளைக் குறைத்துக் கொள்வதாகக் வாக்கு கொடுத்தாள். அதன்படியே மாலையில் நான்கு வீட்டிற்கு போவதை இரண்டாகக் குறைத்து ஏழு மணிக்குள் வீடு திரும்பி வருமாறு பார்த்துக்கொண்டாள். என்னதான் உடல் சோர்வாக இருந்தாலும் படிக்காமல் படுப்பதில்லை என்பதையும் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்தாள். இப்படியே தேவியின் வாழ்க்கை ஒருவாறு சுமாராக ஓட ஆரம்பித்தது, அவள் மறுபடி நல்லதம்பியின் கண்ணில் படும்வரை.
தொடரும்
{kunena_discuss:857}