ரிசெப்ஷன் ஹாலில் நின்று கொண்டு முகம் மலர அன்னிய ஆடவனுடன் பேசிக் கொண்டிருந்த துளசியைப் பார்த்த சரண் , 'என்னுடன் பேசும் பொழுது எப்பொழுதும் முகத்தை கடுகடுவென்று வைத்திருப்பவள், இவனிடம் மட்டும் எப்படி சிரித்த முகத்துடன் பேசிக் கோண்டிருக்கிறாள்.. என்னைப் பார்த்தாலே இவளுக்கு பேச்சு வருவதில்லை.. இவனுடன் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது.. இவனைப் பார்த்தால், சக மாணவனாக தெரியவில்லையே?.. ஒரு வேளை அவளது ஆசிரியறோ? யாராய் இருந்தால் தான் என்ன , டயம் ஆகிறது தெரியவில்லை.. கொஞ்சமாவது தன் உடம்பு மீது அக்கறை இருக்கிறதா? கரெக்ட் டயத்திற்கு சாப்பிட வேண்டாமா.. அம்மா வேறு கவலை பட்டுக் கொண்டு இருப்பார்கள்.. எதுவானாலும் நாளை பேசலாமே.. ஒரு வித பொறாமையில் எதேதோ நினைத்துக் கொண்டு அவளை அழைக்க நடந்தவன், துளசியே வேகமாக வருவதைப் பார்த்து நின்றான்.
"ராம், நீங்களா.. டிரைவர் வரவில்லை"....
"ஏன் மேடம், எங்களுடன் வர மாட்டார்களோ?.. கடுப்புடன் கேட்டவன்,
ஒன்றும் புரியாமல் திகைப்புடன்,' இவன் என்ன இப்படி கோபமாக பேசுகிறான் .. நார்மலாக ஒரு வார்த்தை கேட்டதற்கு இவ்வளவு கோபமா.. ஏற்கனவே, விவேக் ராம் கரணை பற்றி பேச்சை தொடங்கியவுடன் பழைய நினைவுகள் அச்சுறுத்த அவனை அவாய்ட் செய்து விட்டு வேகமாக வெளியே வந்தவள், சரண் இப்படி கேட்கவும், அவளுக்கும் கோபம் வந்தது.. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு, ஒரு வேளை ரொம்ப நேரம் காத்துக் கொண்டிருந்தானோ, என்னவோ, அதுதான் நம்மிடம் கடுப்படிக்கிறான்' என்று எண்ணி, "சாரி ராம்.. கொஞ்சம் லேட்டாகி விட்டது. நீங்கள் வந்து நேரமாகிவிட்டதா" என்று சின்ன குரலில் மெதுவாக சொன்னாள்.
சரணுக்குமே, தான் ஏன் ஒன்றும் இல்லாத விழயத்திற்கு அவள் மேல் கோபப்படுகிறோம் என்று எண்ணியவன், "சாரி துளசி.... ஆபிஸ் டென்ஷன்.. உன்னை வேறு இவ்வளவு நேரமாக காணவில்லையா.. உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று வந்தவன் உன்னை காணாமல் சற்று கவலையில் உன்னிடம் கடுப்படித்து விட்டேன்.. சரி.. வா போகலாம்.. அம்மா வேறு இரண்டு முறை போன் செய்து விட்டார்கள்".
காரில் ஏறி அமர்ந்தவுடன், வேகமாக காரைச் செலுத்தினான் சரண்.. ஒன்றும் பேசாமல் சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி.. ' யாருடன் அவ்வளவு நேரமாக பேசிக் கொண்டிருந்தாள், ஏன் லேட்டானது என்று ஏதாவது காரணம் அவளே சொல்லுவாள் ' என காத்திருந்தவன் அவள் வாயைத் திறப்பதாக இல்லை என்று கண்டு கொண்டு மனதிற்குள் மீண்டும் மூண்ட கோபத்துடன், 'மகாராணிக்கு உடம்பு முழுவதும் திமிர், ஏன் யாரவன் என்று எனக்கு சொல்லக் கூடாதா.. வாயைத் திறந்தால் முத்து விழுந்துவிடுமோ?.. அவனுக்கு யார் அவன் என்று தெரிய வேண்டியிருந்தது.. பொறுமை இழந்தவன் தானே அவளிடம் கேட்க எண்ணி, "துளசி, நான் உன்னை அழைக்க வரும் பொழுது யாருடன் அப்படி பேசிக் கொண்டிருந்தாய்", என்று தன்மையாகவே கேட்டான்.
ஆச்சரியமுடன் அவனைப் பார்த்தவள், 'ஓ.. விவேக்குடன் பேசுவதைப் பார்த்து விட்டானா?'.. "அவர் எனக்குத் தெரிந்தவர் ராம். அவர் பெயர் விவேக்.. என் காலேஜ் மேட் ராதவுடைய சகோதரர்.. ராதா அவள் பாட்டி வீட்டில் தங்கி ஒரு வருடம் என்னுடன் படித்தாள்.. பின்னர் அவள் தாயின் உடல் நிலைக் காரணமாக மீண்டும் சென்னைக்கே அவள் பாட்டியுடன் சென்று விட்டாள்.. அவர்களுடையதுதான், இந்த கம்ப்யூட்டர் கல்வி நிலையம்.. இத்தனை நாட்களாக அவர் தந்தை ராமமூர்த்தி பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது விவேக் பார்த்துக் கொள்கிறாராம்.. நம் திருமண ரிசெப்ஷனுக்குக் கூட அவர் தந்தை வந்திருந்தாராம்.."
"ஒ.. ராமமூர்த்தியின் மகன் விவேக்கா?.. எப்பொழுதோ பார்த்திருக்கிறேன்.. அப்பாவுக்கு அவரைத் தெரியும்.. அதனால் தான், இந்த இன்ஸ்ட்டிடூட்டில் உன்னை ஈஸியாக சேர்க்க முடிந்தது.. சற்று தொலைவில் இருந்ததால் சரியாகப் பார்க்கவில்லை.. அது சரி, அவர் பிள்ளைகள் உனக்கு பழக்கம் என்று நீ சொல்லவேயில்லையே?"....
"அப்படி ஒன்றும் பெரிய பழக்கம் இல்லை.. ராதா என் காலேஜ் மேட்.. மிகவும் நல்லப் பெண்.. காலேஜீக்கு அவளை ட்ராப் செய்யும் பொழுது அவரை பார்த்து இருக்கிறேன்.. ஒரிரு வார்த்தை பேசுவார்.. அவ்வளவுதான்... மற்றபடி, நான் ராதாவுடன் கூட காலேஜீல் பேசுவதுடன் சரி.. பாட்டிக்கு தோழிகளுடன் வெளியே சுற்றுவது அவ்வளவு பிடிக்காது.. எனக்கும் படிப்பு தவிர வேறு எதற்கும் நேரமிருந்ததில்லை.. அவளைப் பார்த்தே இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது".
வேறு எதுவும் பேசாமல் மௌனமாகவே காரை வீடு நோக்கிச் செலுத்தினான்.. வீட்டை அடைந்தவர்கள், காரை பார்க் செய்து விட்டு ஒன்றாகவே உள்ளே நுழைந்தனர்.. சோபாவில் அமர்ந்திருந்தனர் கிருஷ்ணனும், சியாமளாவும்...
"என்னம்மா துளசி, இவ்வளவு நேரமாகி விட்டது.. சற்று கவலையாகி விட்டது.. சரண் உன்னை அழைத்து வருவதாக கூறி இருந்ததால், உங்களுக்காக மாமா கூட லன்ஞ் சாப்பிடாமல் வெயிட் செய்கிறார்.. டிராபிக்கா.. வா வா .. எதுவானாலும் பிறகு பேசிக் கொள்ளலாம்.. உனக்கும் பசித்திருக்கும்.. பிள்ளைதாய்ச்சிப் பெண் கரெக்ட் டயத்தில் சாப்பிட வேண்டும்" என்ற சியாமளா அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
அன்று மாலை, தாய் சியாமளாவின் விருப்பபடி, பெசண்ட் நகர் அஷ்ட லக்ஷ்மி கோவிலை நோக்கி காரை செலுத்தினான் சரண்...
அவனது பெற்றோர் காரின் பின் சீட்டில் அமர்திருக்க, தன் அருகே அமர்ந்திருந்த துளசியை அடிக்கடி ஒரக் கண்ணால் பார்வையிட்டவாறு காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.. அவன் மனம் ஏனோ அன்று சிறகு அடித்து பறந்தது.. இந்த அழகு தேவதை என் மனைவி என்று கர்வம் தோன்றியது.. அன்று ஏதோ ஆடி வெள்ளியாம்.. அதனால், கோவிலுக்குப் போகலாம் என்ற அவன் தாயார், துளசியை பார்த்து பார்த்து அலங்கரித்திருந்தார்.. ராணி பிங்க் கலரில், நீல பார்டருடன் ஆன, லேசான பட்டு புடவையில் , ரிச்சாக ஒர்க் செய்திருந்த மேட்சிங் பிளவுசுடன் மகா லக்ஷ்மி மாதிரி இருந்தவளுக்கு, .. அந்த ஃபேன்சியான டெம்புள் ஜீவல்லரியும், பொருத்தமான குடை ஜிமிக்கியும் அவள் அழகை மேலும் எடுத்துக் காட்டியது.
லேசாக வயிறு மேடுட்டிருந்தாலும், அந்த தாய்மை அடைந்திருப்பது கூட அவளுக்கு அழகாகவே இருந்தது.. அடிக்கடி சாலையில் ஒரு கண்ணும், அவளையும் பார்த்துக் கொண்டு வண்டி ஒட்டுபவனை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் துளசி.. அவனுமே அன்று கோவிலுக்குப் போவதால், மெல்லிய கரை இட்ட பட்டு வேஷ்ட்டியில் , பொருத்தமான ஷர்ட்டுடன் இருந்தான்.. கல்யாண மாப்பிள்ளை போல் இருப்பவனை, பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி.
இவர்கள் இருவரையும், பார்த்துக் கொண்டுதான் இருந்தார் பின் சீட்டில் அமர்ந்திருந்த சியாமளா.. ஓரக் கண்ணால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதைக் கண்டவர், தன் கணவருக்கு கண் ஜாடைக் காட்டினார்.. இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.. ' கூடிய விரைவில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள்.. துளசிக்குத்தான், என்ன குறை.. எதோ பாட்டிக்காக இப்படி வாடகைத் தாயாக இருக்க சம்மதித்தாலும், அது கூட கரணை திருமணம் புரிந்தே செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறாள்.. கரண் இறந்தாலும் பரவாயில்லை, விதவையானாலும், நேர்மையான முறையில் குழந்தையை சுமக்க விரும்பியிருக்கிறாள்.. நல்லப் பெண்..என்ன இவர்கள் ஏதோ ஒன்று செய்ய , நடந்தது வேறாகி விட்டது.. எல்லாம் நன்மைக்கே.. எப்படியும், சரணது குழந்தை என்றே உலகம் சொல்லும்.. ஏன் இவள் சரணுடன் இணையக் கூடாது??.. பார்ப்போம், நம்மால் ஆன முயற்சியை செய்வோம்.. என் மருமகள் இனி இவள் மட்டுமே'.. சிந்தனையின் பிடியில் சிக்கிருந்த சியாமளாவை, "அம்மா , இறங்குங்கள்.. கோவில் வந்து விட்டது" என்ற சரணின் குரல் நிகழ்வுக்கு அழைத்தது.