(Reading time: 24 - 48 minutes)

சோ நான் பேசனும்னு நீ எதிர் பார்க்ற…அப்டின்னா நான் உன்ட்ட இனி பேசவே மாட்டேன்…’ மனதிற்குள் மானசீகமாக உறுதி எடுத்தாள் சங்கல்யா. இப்பொழுது இவள் மார்பிற்கு குறுக்காக கைகளை கட்டி வலக்கையால் இடக்கையை தேய்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்வையோ ஜோனத்தை தவிர்த்து எங்கோ ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“அம்மா பிடிவாதமா இப்டி செய்ய சொல்லிட்டாங்கமா…”

‘போடா பொய் சொல்லி….உங்க அம்மாவ ஏவி விட்டதே நீ தானே…’ மனதிற்குள் குமுறினாள்.

“இது உன்னை எந்த வகையிலும் பாதிக்காம பார்த்துகிறது என் பொறுப்பு…”

‘அப்ப அனவரதன் மிரட்னது பாதிப்பே இல்லன்றியா? நீயெல்லாம் வாக்கு கொடுத்து …நானெல்லாம் அதைக் கேட்க வேண்டி இருக்குது…’ இன்னும் பார்வையை கூட அவன் பக்கமாக திருப்பவில்லை அவள். மனதிற்குள் மட்டும் தான் பதிலுக்கு பதில்

“ நீ அம்மா அழுத்தி கேட்டதால வேற வழி இல்லாம சம்மதம் சொல்லிருப்ப…ஆனா அது அம்மாவுக்கு தெரியாதுல்ல…”

‘நீ ஏன் அம்மாட்ட சரின்னு சொன்ன அதானாலதான் இப்டி ஆகிட்டு’ன்னு   அவன் காரணம் சொல்வான் என இவள் நினைத்திருந்த நினைவில் எதிராட்டம் ஆடின அவன் வார்த்தைகள்.

எல்லாவற்றிலும் இவள் நினைவுக்கு எதிராய் இருப்பதே இவனது வேலை போலும்.

எந்த காரணத்திற்காயும் அவன் முன் அழக் கூடாது என அவள் நினைத்திருக்க இப்பொழுது கண்ணில்  நீர் குபுக்.

அவள் கண்ணில் நீரைப் பார்த்ததும் சட்டென அவள் அருகில் வந்துவிட்டான் ஜோனத். நீண்டு அவளைப் பிடித்து ஆறுதல் சொல்ல எண்ணிய கையை கட்டிப் போட வேண்டிய கலையை கற்றுக் கொண்டிருந்தான் அவன்.

“ப்ளீஸ் அழாத…நேத்தும் அழுத…பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்குது…”

‘ஓ அதான் இப்டி உடனே ஓ………டி வந்துட்டீங்க போல…? காலைல இருந்து ஆளக் காணோம் இந்த பக்கம்’ மனதிற்குள்ளே அவனுக்கு எதிர் கேள்வி கேட்டவளுக்கு  சட்டென உறைக்கிறது. ‘ஓ மை காட்……இவன் வரலைனா இவ்ளவு நேரம் இவ வருத்தப் பட்டுகிட்டு இருக்கா?’

அவனோ இவள் மனதிற்குள் கேட்ட கேள்வியை காதில் வாங்கியவன் போல் பதில் சொன்னான்.

“இன்னைக்கு நைட் நம்ம டீம் இங்க்லண்ட் கிளம்புது…..சோ அது விஷயமா இவ்ளவு நேரம் பிசி….நைட் 11 .30 க்கு ஃப்ளைட்…திரும்பி வர கிட்டதட்ட ஒன் மன்ந்த் ஆகும்…வரவும் எல்லா இஷ்யூவையும் முடிச்சுடுவோம்…ஒகேவா?”

இன்டியன் டீம் இங்க்லண்ட் கிளம்பும் விஷயம் இவளுக்கும் தெரியும். ஆனால் அது இவ்வளவு நேரம் தோன்றவில்லை.  அவனை திரும்பிக் கூடப் பார்க்காமல் அறையின் ஓரத்திலிருந்த ஜன்னல் அருகில் சென்று அதன் வழியே வெளிப் புறத்தை வெறித்தாள்.

சற்று நீண்ட மௌனம்.

“ஓகே உனக்கு என்னத்தான் பிடிக்காது…எங்கம்மாவ பிடிக்குமே….அவங்கள பார்த்துக்கோ….ஃபார் அ மன்ந்த் என் தொல்லை உனக்கு இருக்காது…”

அவன் திரும்பிச் செல்லும் சத்தம் கேட்டும் வெகு நேரம் அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை.

ஆனால் சற்று நேரம் கழித்து வானத்தில் எங்கோ ஃப்ளைட் சத்தம் கேட்க ஏன் என்று புரியாமல் வந்த ஏமாற்ற உணர்விற்கு உட்பட்டு படுக்கையில் படுத்து அழுகையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்.

சற்று நேரம் கழித்து மீண்டும் அறைக்குள் ஆள் வரும் காலடி ஓசை. அவன் திரும்பி வந்துவிட்டானா ? இவள் அறைக் கதவை இன்னும் பூட்டவே இல்லையே…… திரும்பிப் பார்த்தால் உள்ளே நின்றிருந்தது அரண்.

அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அரணிடம் என்ன காரணம் சொல்ல முடியும்?

அவனோ இவளை பரிவாய்ப் பார்த்தான். “முதல் தடவை டூர் கிளம்புறப்ப சுகவியும் இப்டித்தான் அழுதா…இன் ஃபேக்ட் அவ டென்னிஸ் விளையாடுறதையே இதாலத்தான் விட்டா….…கஷ்டமாத்தான் இருக்கும்..பட் சூன் யு’ல் பி ஆல்ரைட்….”

‘ஓ ஜோனத் லாங் ட்ரிப் போனதை நினச்சு அழுறேன்னு புரிஞ்சிகிட்டான் போல…’

“ப்ரபு கூட ஏர்போர்ட் வரைக்காவது போய்ருக்கலாமில்லையா…? அவன் அப்டிதான் சொல்லிகிட்டு இருந்தான்…நீ தான் வரலைனு சொல்லிட்டியாமா?”

சட்டென இவளுக்கு ஐடியா வருகிறது. வெளியே சென்று திரும்ப வழி கிடைத்துவிட்டது.

“அண்ணா நீங்க என்ன ஏர்போர்ட் வரைக்கும் கூப்டுட்டு போய்ட்டு வர முடியுமா?” இவள தனியா வெளிய விடாம இருக்க நிச்சயமா இந்த ஜோனத்தும் அந்த அனவரதனும் ஏதாவது செய்து வச்சிருப்பாங்க…

அரண் கூடனா ஈசியா வெளிய போய்டலாம்…ஏர் போர்ட் கூட்டத்தை யூஸ் செய்து வேலைய முடிச்சுட்டு, அரண் கூடவே திரும்பி வந்து கமுக்கமா உட்கார்ந்துகிடலாம். திட்டம் தீட்டியது அவள் மனது.

எதிர்ப்பின்றி பாசக்கார அண்ணனாய் சம்மதித்தான் அரண்.

அடுத்து கிளம்பித் தாயாராகிறேன் என்ற பேரில் எளிதாய் அரண் அறையிலிருந்து டைரி, ஃபோட்டோஸ் என சுருட்ட முடிந்ததை  சுருட்டினாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏர்போர்ட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் சங்கல்யா அரணுடன்.

ஏர்போர்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்திய அரண், காரில் இருந்து இவளை இறங்க அனுமதிக்கவே இல்லை.

“வேண்டாம் லியா, எதுக்கு தேவை இல்லாம…இப்ப அவனே இங்க வருவான்…” ஜோனத்திற்கு அவன் மொபைலில் அழைத்தான்.

“ம் வந்துட்டோம்….” ஏர் போர்ட் பார்க்கிங்கில் இவர்கள் கார் எங்கு நிற்கிறது என அரண் ஜோனத்திற்கு அடையாளம் சொல்ல சொல்ல அதைக் தன் மொபைலில் டெக்‌ஸ்ட் செய்து அந்த பிபூள்  ரிப்போர்டருக்கு அனுப்பினாள் இவள்.

அருகிலிருக்கும் காருக்கு அடியில் இவள் கொண்டு வந்தவைகளை வைத்துவிட்டுப் போய் விடுவதாக குறிப்பிட்டாள்.

அரண் கவனம் தவறிய நேரம் அடுத்த காருக்கு அடியில் இந்த பார்சலை வைத்தால் போதும் வேலை முடிந்துவிடும் தானே…

இப்பொழுது ஜோனத் இவர்கள் காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறான்.

அரண் சில நிமிடங்கள் ஜோனத்திடம் பேசிவிட்டு கீழே இறங்கிக் கொள்கிறான்.

‘ஐயோ…இப்ப இவன்ட்ட என்ன சொல்லனும்? எதாவது சொல்லனுமே…? இல்லனா சந்தேகம் வந்துடுமே…இவ இங்க எதுக்கு வந்தான்னு…’

அரணுடன் வரும் போதும் காரை டிரைவ் செய்தது அரண், இவளோ பின் சீட்டில் இருந்தாள். இப்போது ஜோனத்தும் முன் இருக்கையில் இருக்க இவள் பின் சீட்டில்.

சங்கல்யாவின் பிடிவாதம் பற்றி அறிந்தவன் அல்லவா ப்ரபாத், அவள் கடைசி வரை கதவை திறந்தே விடவில்லையே அன்று ட்ரெய்னில்….இன்று எப்படி இவனைத் தேடி வந்துவிட்டாள்?

‘ம்..அவளுக்கு இப்ப இருக்க இந்த எங்கேஜ்மென்ட் பத்தின கோபத்துல அவ எங்க இவனத் தேடி வர?...வீட்டுக்குள்ள அடைஞ்சுகிடக்க பிடிக்காம வெளிய வந்தாலும் வந்துருப்பா..’

“உனக்கு பீச் பிடிக்கும்னு சொன்னல்ல…போற வழியில அரண பீச் கூட்டிட்டுப் போய்ட்டு போக சொல்லட்டுமா…? கொஞ்சம் ரிலாக்‌ஸா ஃபீல் பண்ணுவ…” எடுத்தவுடன் இப்படித்தான் கேட்டான் ப்ரபாத்.

‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டுனு சொல்லுவாங்களே…அது இதுதான்… என்னமா சீன் போடுறான்…’ அதை இப்படிக் காரணப் படுத்தினாள் சங்கல்யா.

இப்பொழுது ப்ரபாத் முகத்தில் சிறு புன்னகை. “என்னை இப்டி பார்துகிட்டே இருக்கவா  இவ்ளவு தூரம் வந்த?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.