"என்ன கமலா , நான் சரியாக சொன்னேனா?" என கேட்க,
"இன்னிக்கு தாங்க வாழ்க்கையிலே முதன் முறையாக ஒழுங்கா பேசியிருக்கீங்க" என்று சிரிக்காமல் சொன்ன கமலா,
"ரொம்ப நேரமாக பெரிய பேச்சா பேசிட்டீங்க.. கொஞ்சம் தண்ணீர் குடித்து உங்க தொண்டையை நனைச்சுகங்கோ" என்றாள்.
"அடிப் பாவி, நான் என்ன மேடை பேச்சா பேசினேன்? .. எல்லாம் என் நேரம்..உனக்கு உன் பொண்ணுதான் சரி"
கலகலவென்று சிரித்தாள் பைரவி..
"போதும்ப்பா.. அம்மா உனக்கும் தான்.. இப்ப என்ன ஆச்சு.. என் திருமணத்துக்கு என்ன அவசரம்.. நான் கொஞ்சம் காலம் ஃப்ரீ பேர்டா பறக்கறேன்.. எனக்கும் நீங்க கொடுத்திருக்கும் சுதந்திரத்துக்கு ஒரு தாங்க்ஸ்.. ஆல்ரெடி அஜய் இரண்டு வாட்டி டெக்ஸ்ட் பண்ணிட்டான்.. நான் கிளம்புகிறேன்..பார்க்கலாம் " என்ற பைரவி, தன் அறைக்குள் சென்று டிசம்பர் மாத குளிருக்கு ஏற்ற உடையணிந்து, வின்டர் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு, தயாரானவள், பையை எடுத்து கொண்டு மீண்டும் பெற்றவர்களிடம் விடை பெற்று , காரை கிளப்பி, தனது மெடிக்கல் ரிசர்ச் சென்டரை நோக்கி விரைந்தாள்.
பைரவி அழகானவள்.. அமெரிக்காவில் செட்டிலான இந்திய பெற்றோர்களுக்கு பிறந்தவள்.. இந்திய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பின் பற்றுபவள்.. பிறந்து மட்டுமே இந்தியா என்றாலும், அவள தந்தை அவள் பிறந்ததுமே, அமெரிக்கா வந்தவர், அங்கேயே மருத்துவ பணியில் சேர்ந்தவர், அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே செட்டிலாகி விட்டதனால், இந்தியாவை குறித்து வெறும் வரை பட செய்தி மாத்திரமே அறிந்தவள். அந்த காலத்திலேயே காதல் திருமணம் செய்திருந்த அவள் பெற்றோர், என்ன காரணத்தினாலோ, மீண்டும் இந்தியா பக்கம் செல்லவில்லை.
பைரவிக்கும் அது பற்றி சில சமயம் மனதுக்குள் கேள்வி எழுந்தாலும், பெற்றவர்களிடம் தேவையில்லாமல் கேட்டு அவர்களை சங்கட படுத்த நினைக்காமல், பாசத்துடன் இருக்கும் அவர்களிடம் அவளுமே அவர்கள் அந்தரங்கத்தில் தலையிட விருப்பபடவில்லை.. என்றாவது ஒரு நாள் அவர்களே தங்களது பூர்வீகத்தை பற்றி சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில், அமெரிக்க நாகரீகப்படி பெற்றவர்களுக்கு பெர்சனல் ஸ்பேஸ் கொடுத்து விட்டு நகர்ந்து விடுவாள்.
என்றாவது ஒரு நாள் இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆவல் மாத்திரம் அவளுக்குள் இருந்தது.. ஒரு வேளை அஜய்யை திருமணம் செய்து கொண்டால், இந்திய மண்ணை மிதிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பவன், அவள் ஆசையை நிறைவேற்றுவானோ என்னவோ?.. ஆனால் இந்தியா செல்லுவதற்காக எல்லாம் அவனை திருமணம் செய்ய வேண்டுமா என்றும் அவளுக்கு நினைக்கத் தோன்றியது.
எதையோ யோசித்தபடி வந்தவள், தனது மெடிக்கல் யுனிவர்சிட்டியை வந்து விட்டதை கண்டு, காரை அதற்குரிய இடத்தில் பார்க் செய்து விட்டு, குளிர் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு, தனது ஆராய்ச்சி கூடத்தை நோக்கி சென்றாள். லேப்பிற்குள் நுழைவதற்கு முன், அதற்குரிய ஆவணங்களை செய்து விட்டு, உள்ளே நுழைந்தவள் கண்ணில் முதலில் பட்டான் மார்க்., அவளுடைய சக அராய்ச்சியாளன். புத்தம் புது மலரென உள்ளே நுழையும் பைரவியை கண்டவன்,
"ஹாய் .. பையாராவி.. குட் டு சீ யூ அகைய்ன்" என அவளை தோளோடு சேர்த்தணைத்தான்.
மெல்ல அவன் பிடியில் இருந்து நாசுக்காக விலகியவள், "ஹாய் மார்க்.. குட் மார்னிங் .. ஐயம் பைரவி.. நாட் பையாரவி" என எரிச்சலுடன் திருத்த முயல,
"யா யா.. பயாராவி" என இழுத்தவனை முறைத்தவள், 'இதுக்கு முதலில் சொன்ன பையாராவி தேவலை.. என்னவோ பைராகி என்று சொல்லாமல் இருந்தால் சரி தான்' என நினைத்தவள்,
"என்ன ஆச்சு, இங்கே நின்று கொண்டிருக்கிறாய்?" என்று ஆங்கிலத்தில் கேட்டவளை
"நத்திங்.. நத்திங்.. ஜஸ்ட் சா யூ கமிங்.. யூ ஆர் சோ பியூட்டிபுல்.. கார்ஜீயஸ் பேபி..கேன் வீ கோ பார் அ டேட்" என மார்க் கேட்க,
'டேட்டா.. இவனும் இவன் மூஞ்சியும்.. அசல் பைராகி மாதிரி தாடி மீசையோட பயமுறுத்தறான்..இவன் கெட்ட கேட்டுக்கு என்னோட டேட் வேணுமாம் .. இதை வெளியிலே சொல்ல முடியுமா?' இவனும் தான், நான் இங்கே சேர்ந்ததிலிருந்து தினமும் என்னை கேட்டு நச்சரிக்கிறான்', என மனதில் நினைத்து கொண்டு, எப்பொழுதும் போல,
"சாரி.. நாட் இன்ட்ரெஸ்டட்" என்றவள் , ஏமாற்றத்தில் தொங்கிய அவன் முகத்தை பார்த்தவள், கண்டு கொள்ளாமல், தன்னுடைய சீட்டுக்கு செல்ல,
அவள் பின்னாலேயே வந்த கேத்தரீன், "ஹாய் மார்க் டார்லிங்?" என அவன் கன்னத்தில் முத்தம் இட,
"ஹாய். கேத்தீ பேபி, .. ஒய் டோன்ட் வீ கோ அவுட் பார் அ டேட் டார்லிங்" என அவள் உதட்டில் முத்தமிட்டபடி கேட்டவனை, "ஷூர்" என கட்டி கொண்டாள் கேத்தரீன்.
அவர்களை, கண்டு கொள்ளாமல் தனது சீட்டுக்கு சென்ற பைரவி, இங்கே இதெல்லாம் சர்வ சாதாரணம்..டேட்டிங் செய்வது அவர்களுக்கு ஏதோ காபி குடிப்பது போல.. பிடித்தால் சேர்ந்து இருப்பதும், பிடிக்காவிட்டால் விட்டு விலகுவதும் அவர்களை பொருத்த வரை ஒன்றுமில்லை.
"ஹலோ பைரவி,.. குட் மார்னிங்.. என்ன விளக்கெண்ணையை குடித்தால் போல முகத்தை வைத்து கொண்டு வருகிறாய்?" என்றான் அஜய்.
"ஹாய் அஜய் .. குட் மார்னிங்.. ஒன்றுமில்லை.. மார்க்" என்று நிறுத்தினாள்.
"ஓ.. அஸ் யூஷுவல் இன்றைக்கும் உன்னிடம் டேட் கேட்டானா.. அடாது மழை பெய்தாலும், விடாது உன்னை டேட்டுக்கு அழைக்கிறான்"
"உம்.. சரியான விடாது கருப்பு.. பைராகியாம், பையாராகி.. பேரை கொலை பண்றான்.. என்னை கேட்ட கையோட கேத்தரீனோட டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டான்" என்றவளை,
"அதில் உனக்கு என்ன போச்சு.. அவன் இஷ்டம் அவன் கேட்டான்.. உனக்கு பிடிக்கலை என்று சொல்லி விட்டே..பிறகு என்ன? அவன் வேற ஒருத்தியை சூஸ் பண்ணிவிட்டான்.. அவன் வாழ்க்கை, அவன் இஷ்டம்" என்ற அஜய்யை,
"உன் கிட்ட சொன்னேனே? என்ன சொல்லனும் .. அதை விடு .. நம்ம ஆராய்ச்சியை பார்ப்போம்" என்று நொந்து கொண்டவள், தனது லாப் டாப்பை திறந்து அதில் மூழ்கினாள்.
அடுத்த இரண்டு மணி நேரம் என்ன நடந்தது, எப்படி போனது என்று நம்ம பைரவியை கேட்டால் அவளுக்கு ஒன்றும் தெரியாது. பைரவி எப்பொழுதும் அப்படி தான்.. பாட்டோ, படிப்போ, அல்லது ஆராய்ச்சியோ, எதுவானாலும் அதில் இறங்கி விட்டால் தன் முழு கவனத்தையும் அதில் செலுத்தி அதை முடிக்கும் வரை வேறு எந்த சிந்தனையிலும் ஈடுபட மாட்டாள்.
அன்றும் அப்படித்தான், தன் முழு கவனத்தையும் தன் ஆராய்ச்சியில் செலுத்தியவள் மதியம் ஒரு மணிக்கு அவளை அஜய் அழைத்தவுடன் தான் இந்த உலகுக்கு திரும்பினாள்.
"மேடம், கொஞ்சம் வயிற்றுக்கும் ஏதாவது கொடுக்கலாமா?.. அப்பொழுதிலிருந்து என்னை கவனி என்று என் வயிறு கெஞ்சுகிறது.. வாம்மா, உன்னோட ஆராய்ச்சியை எல்லாம் மூட்டை கட்டு.. சாப்பிட்டு விட்டு, நம்ம பிளான் படி கொஞ்சம் வெளியே சுற்றலாமா?" என கேட்டவனை,
"ஓ.. லஞ்ச் டயமாகிவிட்டதா", தன் கைகளை நெட்டி முறித்து சோம்பல் முறித்த பைரவி,
"அஜய், இன்னிக்கு அம்மா நம்ம இரண்டு பேருக்கும் உனக்கு பிடித்த லைமன் ரைய்சும், உருளை கறியும் வைத்திருக்கிறார்கள்"