அடுத்து அவள் நிக்கியைப் பார்க்க நேரிட்ட போது கேட்ட முதல் கேள்வியே அதுதான்.
“கதவ எப்டி திறந்தீங்க?”
“ம்…எல்லா ரூம்லயும் கதவை தவிர இப்டி வெளிய வர்றதுக்கு வேற வழி இருக்குது….”
“அப்டி என்ன வழி? அங்க எதுவும் இல்லையே…”
“ஆன்…அத நான் உன்ட்ட சொல்லிட்டா அதையும் சேர்த்து நீ பூட்டிட மாட்டியா….சோ சொல்ல மாட்டேன்….” அவன் போய்விட்டான்.
அதன் பின்பு இவள் அறைகளுக்கு தாழ் போடும் பழக்கத்தையே விட்டுவிட்டாள்.
இவளை நம்பி அவன் சொல்ல மாட்டேன் என்றபோதும் ஏனோ அவன் மீது அவளுக்கு ஒரு வித நம்பிக்கை தோன்றியது.
அவளை பாதுகாத்துக் கொண்டிருப்பது கதவு பூட்டுகள் அல்ல அவனது சுய கட்டுப்பாடு என்பதாலா?
அன்று அவிவிர்கு தேவையான எல்லாம் செய்து அவனைப் பள்ளியில் கொண்டு போய் விட்டதும் அவள் தான். மாலை பிக் அப் செய்யப் போனதும் அவளேதான். பின் இதுவே வழக்கமானது.
சில வாரங்கள் கடந்திருக்கும். ஒருவித ரிதம் வந்திருந்தது வாழ்க்கையில். காலையில் எழுவதும் அவிவை கிளப்பி பள்ளியில் விடுவதும்……மதியம், மாலை இரவு என ஒரு ஷெட்யூல்…
அன்றும் அவிவை அழைக்கவென மாலை அவள் பள்ளிக்கு சென்றாள். பள்ளி நேரத்துக்கு சற்று முன்பாகவே அங்கு வந்து சேர்ந்துவிட்டாள். அவிவின் வகுப்பறை முதல் தளத்தில். தரை தளத்தில் பெற்றோர் காத்திருக்க என இருந்த அந்த பகுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் இவள்.
“இங்கயாவது அட்மிஷன் கிடைக்குமான்னு தெரியலைடா….அலஞ்சு அலஞ்சு நொந்துட்டேன்….” யாரோ ஒரு ஆண் குரல் இவள் பின்னால்.
அட்மிஷனுக்கு அலையுற அப்பாவி அப்பா போலும்.
“அதெல்லாம் இங்க கிடைக்கும்….உனக்கெல்லாம் தர மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க…..இந்தா இவள மாதிரி மேரேஜ் இல்லாம குழந்த வச்சுகிட்ட மார்டன் மாதவிக்கே சீட் தரப்ப உனக்குல்லாம் இல்லைனு எப்டிடா சொல்லுவாங்க…?”
தீ ஈட்டியாய் அவ்வார்த்தைகள் குத்த திரும்பிப் பார்த்தாள்.
மதுரன்.
“என்னடி லுக்கு?” எகிறினான் அவன்
“டேய் வாடா போவோம்….உன் ரேஞ்சுக்கு இதுல்லாம் தேவையா….?” மதுரன் அருகிலிருந்தவன் அவனைப் பிடித்து இழுத்தான்.
“ஏன்டா பயப்படுற…..? இவ ஒன்னும் செய்ய மாட்டா…..கல்யாணம் செய்துட்டான்னு பார்க்கியா….? அதெல்லாம் அந்த இளிச்சவயானை ஏமாத்த…..மத்தபடி மேடத்துக்கு இன்னும் மதுர் மேல ஒரு கண்ணு தெரியும்ல….”
இளித்தபடி இவள் அருகில்…..மிக அருகில் வந்தான் மதுர். அவன் பார்வை, அவன் நோக்கம்….ஓங்கிய இவள் கை அவன் கன்னத்தில் இறங்கும் முன் அதை செய்திருந்தது நிக்கியின் கை.
அதோடு நில்லாமல் படு வேகமாக மதுரனை கழுத்தோடு பிடித்து இழுத்து, சுவரோடு சாய்த்து கழுத்தை நெரித்தான். மதுரனோ கழுத்தை நெரிக்கும் நிக்கியின் கையை தன் இரு கைகளால் பிரித்தெடுக்க போராடினான்.
“நீ அளவுக்கு மீறிப் போறடா நாயே…..என் வைஃப் விஷயத்துல இன்னொரு தடவ தலையிட்ட…. தலையிடுறதுக்கு தலை இல்லாம போய்டும்….” நிக்கி கர்ஜித்தான்.
“போடா…பெருசா சொல்ல வந்துட்ட…..பெரிய பத்தினி இவ….அவள சொன்னா அப்டியே என் தலை வெடிச்சிட போகுது…..” இன்னும் கூட மதுரன் திமிறாய் நக்கலடித்தான்.
இப்பொழுது நிக்கி மதுரனின் முகத்தில் அறைந்த அறையில் அவன் உதடு கிழிந்து ரத்தம். “அன்னைக்கு அவ அண்ணண் உன் தலைல வச்ச பிஸ்டல் மறந்துட்டுப் போல….”
“அப்ப கூட அவ அண்ணன் வந்தாதான் உண்டு….நீ ஒன்னையும் கிழிக்க போறது இல்லைல…அப்றம் என்ன சும்மா சீன் போட்டுகிட்டு இருக்க…..ஓ… மேடத்துட்ட மார்க் வாங்கனும்ல…..பார்த்துகிட்டு இருக்கால்ல அவ…..சரி சரி சீன் போட்டுக்கோ….அப்பவாவது அவளுக்கு மதுர் மேல உள்ள மயக்கம் போகுதான்னு பார்ப்போம்….பாரு அவளுக்கும் கல்யாணம் ஆகிட்டு…எனக்கும் ஆகிட்டு……ஆனா இன்னும் நான் போற இடத்துக்குல்லாம் கரெக்டா டைம் பார்த்து வந்து நிக்றதை….…..தொல்லை தாங்கலை…”
மதுரன் இன்னுமின்னுமாய் கீழ் தரமாய் பேசிக் கொண்டு போக
முதலில் நிகழ்ச்சியின் அதிர்ச்சியில் நின்ற இசை அடுத்து என்ன செய்ய என புரியாமல் தவித்திருந்தவள் இப்பொழுது போய் நிக்கியின் கையைப் பிடித்தாள்.
“இல்ல நிக்கி…அப்டில்லாம் எதுவும் இல்ல….நான் ப்ளான் செய்தெல்லாம் சீக்ரம் வரலை….யாரையும் பார்க்கனும்னுலாம்….” அழுகையாக வந்தது இசைக்கு.
“ஷட் அப்…” இப்பொழுது மதுரனை விட்டுவிட்டு இவளைப் பார்த்து கர்ஜித்த நிக்கி இவளது கையைப் பிடித்தான்.
“அவன் உளர்றான்னு நீ வேற அதுக்கு பதில் சொல்லிகிட்டு….சூரியனைப் பார்த்து நாய் குறைக்கலாம்….ஆனா அதுக்கெல்லாம் சூரியன் விளக்கம் சொல்ல கூடாது….ஐ நோ யூ…” அவளைப் பிடித்து இழுக்காத குறையாக கூட்டிக் கொண்டு அவிவின் வகுப்பிற்கு சென்றான்.
பள்ளியிலிருந்து அவிவுடன் அவர்கள் கிளம்பிச் செல்வதை ஒருவிதமாய் பார்த்தபடி நின்றிருந்தான் மதுரன்.
அந்த தாடிக்கார அண்ணன் என் தலைய எடுத்துடுவானா? அப்டினா…..????
மதுரன் தன் வீட்டிற்கு அருகில் போய் காரை நிறுத்தினான். தன் மொபைலில் ப்ரீத்தா எண்ணை அழைத்தான். அவள் இவன் வீட்டு படுக்கை அறையிலிருந்து அழைப்பை ஏற்றாள்.
“ப்ரீ அம்மா பார்க்காம நான் உள்ள வரனும்…”
“ஒரு நிமிஷம் இருங்க பார்த்து சொல்றேன்…..”
மெல்ல வந்து வீட்டை நோட்டம் பார்த்தவள் “அம்மா அவங்க ரூமுக்கு போயாச்சு…..கதவை திறக்கிறேன்….அமைதியா வாங்க….”
குசு குசு என சொல்லியபடி சத்தமின்றி கதவை திறந்தாள்.
மௌன படம் போல் உள்ளே நுழைந்த கணவனின் உதடைப் பார்க்கவும் ப்ரீதா முகம் போன விதத்தில் அவள் வாயை சட்டென தன் கையால் பொத்தினான் அவன். பின் மெல்ல அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அவள் விசும்புவது புரிய, அவளை அணைத்தபடியே வீட்டு கதவை பூட்டி விட்டு அவளுடன் மாடியிலிருந்த தன் அறைக்குள் நுழைந்தான்.
“என்ன ப்ரீ இதுக்கெல்லாம் அழுதுகிட்டு….”
அவள் இப்பொழுது இவனை அணைத்தாள்.
“நீயே இப்டி அழுதா நான் என்ன செய்வேன்….?”
அவன் மார்பில் புதைந்திருந்த அவள் தலை இடமும் வலமுமாக ஆடியது. நிமிர்ந்து கண்ணை துடைத்துக் கொண்டாள் ப்ரீத்தா.
“இனி அழலை…சொல்லுங்க என்னாச்சு….?....இன்னைக்கு அக்காவ பார்த்தீங்களா?”
“ம்…..குழந்தைய பிக் அப் பண்றதுக்கு ரெண்டு பேருமா வந்திருந்தாங்க…..நிக்கி தான் அடிச்சது…….”
“ரொம்ப வலிக்காப்பா….” மெல்ல அவன் காயம்பட்ட உதடைக் கைக் கொண்டு தொட்டாள்.
“ப்ச்..அது ஒன்னும் இல்ல ப்ரீ….ஒரு ஸ்டிச் போட்றுக்கு… சீக்ரம் ஆறிடும்…ஆனா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…..மார்டன் மாதவி அது இதுன்னு என்னல்லாமோ பேசிட்டேன்….”
அவனைப் பிடித்திருந்த அவள் அணைப்பு இறுக அவன் மார்பில் மீண்டுமாய் புதைந்து கொண்டாள். “சீக்ரம் எல்லாம் சரியா போய்டும்பா”
“ம்….நானும் அப்டித்தான் நினைக்றேன்…..இன்னிக்கே ரெண்டுபேரும் ஒருத்தர் கைய ஒருத்தர் பிடிச்சுட்டுத்தான் போனாங்க…”
“சூப்பர்..அப்டின்னா மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்….பிறகென்ன?”
“அது ஒருவகையில உண்மைதான்…பட் எனக்கு இப்ப புதுசா வேற ஒரு கேள்வி”
“என்னதுப்பா?”
“அந்த தாடிக்கார அண்ணன் என் தலைய எடுத்துடுவான்னு நிக்கி மிரட்டினான்….அப்டின்னா?”
“அப்டின்னா??????”
தொடரும்
{kunena_discuss:878}