05. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ
ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு எண்ணம்,
யுக்தாவின் மனதில் பிருத்வி.. பிருத்வியின் மனதில் சப்னா, சங்கவி மனதில் தேவா... தேவா யுக்தாவை திருமணம் செய்து கொள்ள போகிறான்.
இப்படி இவர்கள் எண்ணங்கள் வெவ்வேறாக இருக்க... இதற்கெல்லாம் அடிப்படை காரணம் தான் என்ன..?? இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் கடந்த காலத்தை அறிந்தால் தான் முடியும்.
மாதவனின் குடும்பம் அடிப்படையில் ஒரு விவசாய குடும்பம். மதுரையை ஒட்டியுள்ள கிராமம் தான் அவர்களின் பூர்வீகம்.
மாதவனின் அண்ணன் கேசவன், தாய் தந்தையரோடு இருந்து விவசாயத்தை பார்க்க.... மாதவன் நன்றாக படித்து சென்னையில் உள்ள ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார், இருவரும் தன் தந்தையோடு சேர்ந்து தன் தங்கை லஷ்மியின் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
சுந்தரத்துக்கும் மதுரையில் வேலை என்பதால் லஷ்மியும் சுந்தரமும் அந்த ஊரிலேயே அவர்களுக்கு சொந்தமான வேறொரு வீட்டில் வசித்தனர்.
தன் மகள் திருமணத்தோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று அதோடு இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார் அவர்களின் தந்தை.
தன் கணவர் இறந்ததும் பாதி பலத்தை இழந்த தங்கம்... பக்கத்து ஊரில் தாய் தந்தையர் இல்லாமல் உறவினர் வீட்டில் வளர்ந்த சாவித்திரியை கேசவனுக்கு மணம் முடித்து அவர்களிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி கொண்டார்.
அவர்கள் திருமணத்தில் லஷ்மி, சுந்தரம் தம்பதியினர் தங்கள் ஒரு வயது மகன் தேவாவோடு கலந்துகொண்டனர்.
ஒரு வருடம் கழித்து மாதவனுக்கு திருமணம் செய்ய வீட்டில் உள்ளவர்கள் நினைத்த போது... சென்னையில் வேலை விஷயமாக சென்ற இடத்தில் சுஜாதாவை சந்தித்த மாதவன் அவளை மணக்க விரும்பினார்.
சுஜாதா வளர்ந்தது எல்லாம் அனாதை இல்லத்தில் தான்... அவளுக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே அந்த இல்லத்தில் தான் வாசம்... அவளுக்கு தாய் தந்தை முகம் கூட நினைவில்லை. அந்த இல்லத்தில் அவளுடன் வளர்ந்த வளர்மதி மட்டும் தான் அவளுக்கு மிகவும் நெருக்கமானவள்.
படிப்பு முடிந்து இல்லத்தில் இருந்து வெளியில் வந்த இவர்கள் இருவரும் ஒன்றாகவே தங்கி வேலை செய்து கொண்டிருந்தனர், செந்திலின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாள் வளர்மதி, அவளை விரும்ப ஆரம்பித்தார் செந்தில், ஆனால் அதை மறுத்துவிட்டாள் மதி,
You might also like - A-Aa-E-Ee... A quick fire feel gud romantic story...
அவளை சம்மதிக்க வைக்க அவர் சுஜாதாவின் உதவியை நாடினார், அநாதை என்ற காரணத்தால் வளர்மதி செந்திலை மணக்க மறுத்துவிட்டாள், அதை சுஜாதா செந்திலிடம் தெரிவிக்க... இப்போது செந்திலின் தாய் தந்தையும் உயிரோடு இல்லாத காரணத்தால் தானும் அநாதை தான் என்று செந்தில் தெரிவிக்க... சுஜாதா உதவியோடு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பிறகு சுஜாதா மற்றும் செந்திலுக்கிடையே அண்ணன் தங்கை என்ற பாசபிணைப்பு உருவானது, திருமணத்திற்கு பின் சுஜாதாவை அவர்களோடு தங்க சொல்ல... சுஜாதா தான் மறுத்துவிட்டாள், இப்போது செந்திலும் வளர்மதியும் தங்கள் ஒரு வயது குழந்தையோடு சந்தோஷமாக வாழ்கின்றனர். சுஜாதா தனியாக இருந்தாலும் அவர்கள் தான் இப்போது அவளுக்கு உறவு.
மாதவனின் விருப்பத்தை சுஜாதா வளர்மதியிடம் தெரிவிக்க... மாதவனும் அவர் வீட்டில் தெரிவிக்க... வளர்மதி செந்தில் முன்னின்று சுஜாதா மாதவன் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
கேசவன் சென்னையிலேயே சொந்த வீடு வாங்கி இருவரையும் குடி வைத்துவிட்டார்.
அவர்களுக்கு திருமணமான சில மாதங்களிலேயே சாவித்திரி கர்ப்பமாக இருக்க... அடுத்த மூன்று மாதங்களில் சுஜாதா கர்ப்பமானாள். பிரசவ காலங்களில் தாயில்லாத தனது இரு மருமகள்களையும் தாயாக இருந்து கவனித்து கொண்டார் தங்கம்.
முதலில் சாவித்திரி பெண் குழந்தையை பெற்றெடுக்க அடுத்த மூன்று மாதத்தில் சுஜாதா பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். இரு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் பெயர் சூட்டு விழா வைக்க முடிவெடுத்தனர்.
சுஜாதாவின் திருமணத்துக்குப் பின் அவளுக்கு நிறைய உறவுகள் கிடைத்தாலும் வளர்மதியின் நட்பு அவளுக்கு ஆயுள் முழுதும் கிடைக்க வேண்டும் என்று சுஜாதா விரும்பினாள், அவளின் பெண்ணை வளர்மதியின் மகன் பிருத்வி ராஜ்க்கு மணமுடிக்க வேண்டும் என்று நினைத்தாள்... எனவே அந்த குழந்தைக்கு சம்யுக்தா என்று பெயர் வைக்கவேண்டும் என்று நினைத்தாள்.
அதை தன் கணவனிடம் கூறிய போது இப்போது தான் குழந்தை பிறந்திருக்கிறது... அதற்குள் தன் மனைவியின் எண்ணம் எதுவரை சென்றிருக்கிறது என்று விளையாட்டாக எடுத்துக் கொண்டார் மாதவன், செந்திலும் வளர்மதியும் மிகவும் சந்தோஷப்பட்டனர், சுஜாதா ஆசைப்படி நடக்குதோ... இல்லையோ... சுஜாதா இப்படி நினைத்ததே அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது.