வளர்மதி சுஜாதாவின் நிலையை நினைத்து கவலை கொண்டாள்... பிருத்வி மற்றும் பிரணதியிடம் யுக்தாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவளை தனியாக விடாமல் நீங்கள் இருவரும் அவளுடன் விளையாட வேண்டும் என்றும் கூறினாள்.
பிரணதி சின்னப் பெண் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்தாள்.... ஆனால் பிருத்வி அன்றிலிருந்து யுக்தாவிடம் ஒரு நல்ல நண்பனாக இருக்க முயற்சித்தான்.
பள்ளியில் இருந்து வந்ததும் அவளுடன் பொழுதை கழிப்பான்... எல்லா விஷயங்களையும் அவளுடன் பகிர்ந்து கொள்வான்... பிருத்வி, யுக்தா என்ற அவள் பெயரை சுருக்கி யுகி என்றே அழைப்பான்...
யுக்தாவும் சில நாட்களிலேயே மாற தொடங்கிவிட்டாள்... பிருத்வி அவளுக்கு ஒரு நல்ல நண்பனாக மாறிவிட்டான், பிறகு பிரணதியும் அவர்களோடு இணைந்து கொண்டாள்... யுக்தாவை பழைய மாதிரி பார்த்ததும் தான் சுஜாதாவிற்கு சந்தோஷம்.
You might also like - Kanaamoochi re re... A romantic comedy...
பிறகு பரிட்சை முடிந்து வரும் விடுமுறை நாட்களில் யுக்தாவை கிராமத்திற்கு அழைத்துச் சென்றாள் சுஜாதா... இருவரும் இப்போது பிரிவை ஏற்றுக் கொள்ள பழகியிருந்தனர்... விடுமுறை நாட்கள் வரை ஒன்றாக விளையாடுவதும் மீண்டும் யுக்தா சென்னைக்கு கிளம்பும் போது அழாமல் விடைபெறுவதும் என்று இப்போது இவர்கள் நிலை மாறியிருந்தது, அவர்கள் ஒன்றாக இருக்கும் நாட்களில் யுக்தா கவியிடம் பேசும் விஷயங்களில் பாதி பிருத்வியை பற்றியே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடம் கழிந்தது, மாதவன் இந்தியா வந்தார், சுஜாதா மற்றும் யுக்தாவை அழைத்துச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை கவனித்தார், இந்த நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
கேசவன் ஒரு விபத்தில் மாட்டி இறந்து போனார், கேசவனின் இறுதி சடங்குகள் முடிந்தது... இப்போது சாவித்திரியையும் சங்கவியையும் எப்படி தனியாக விட்டு விட்டு செல்வது என்று குழம்பினர் மாதவனும் சுஜாதாவும்...
இப்போது எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் இவர்களை அழைத்துச் செல்ல முடியாது அதனால் கொஞ்ச நாள் கழித்து அவர்களை அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தனர், ஆனால் சாவித்திரி இங்கிருந்து வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்,
சங்கவியும் அம்மாவை விட்டு வர முடியாது என்று மறுத்துவிட்டாள்... யுக்தாவும் சாவிம்மா தனியாக இருக்க வேண்டாம்... சங்கவி அவருடனே இருக்கட்டும் என்று கூறினாள், இரண்டு வருடங்களுக்கு முன் இவர்கள் இருந்ததுக்கும் இப்போது இவர்கள் பக்குவமாக இருப்பதை பார்த்த பெரியவர்களுக்கு சந்தோஷம்.
பின் இவர்களின் விளைநிலங்களை குத்தகைக்கு விட்டு அதில் வரும் வருமானமும்... சென்னையில் இருக்கும் இவர்கள் வீட்டில் வரும் வாடகை பணமும் இவர்களுக்கு வருமாறு ஏற்பாடு செய்துவிட்டு அருகில் இருந்த தன் தங்கையிடமும் தங்கை கணவரிடமும் இவர்களை பார்த்து கொள்ளுமாறும் கூறிவிட்டு கனத்த மனதுடன் வெளிநாடு செல்ல முடிவெடுத்தார் மாதவன்.
இவ்வளவு நாள் நினைத்தப் போது ஒருவரையொருவர் பார்த்து கொள்ள முடியும்... ஆனால் இப்போது அப்படியில்லை என்பதால் அழுகையுடனே விடைப் பெற்றனர் யுக்தாவும் கவியும்.
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து நியூயார்க் செல்ல தயாராகி கொண்டிருந்தனர்... இப்போது யுக்தாவிற்கு சங்கவியை மட்டுமல்ல... பிருத்வியையும் பிரிந்து போக வேண்டும்... இப்போது பிரிவின் வலி யுக்தாவிற்கு அதிகமாக இருந்தது.
விமான நிலையத்தில் பிருத்வியை பிரிந்து போகப் போவதை எண்ணி யுக்தாவிற்கு அழுகை வந்துவிட்டது... அவள் பிருத்வியிடம்...
"பிருத்வி... எனக்கு உன்னையும் கவியையும் விட்டு போக கஷ்டமாயிருக்கு... இனி உங்களை அடிக்கடி பார்க்க முடியாதுல்ல.."
"யுகி.... நீ அழக்கூடாது எப்பவும் ஸ்டார்ங் கேர்ள்..ஆ.. இருக்கனும்... இங்கப் பாரு உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு..."
அவன் கொடுத்த அந்த பரிசு ஒரு அழகிய கரடி பொம்மை .... ஒரு நாள் அனைவரும் வெளியில் போயிருந்த போது கடையில் ஒரு அழகிய கரடி பொம்மையை பார்த்து அதை வாங்க ஆசைப்பட்டாள் யுக்தா... ஆனால் பிரணதியும் அதுதான் வேண்டும் என்று அடம்பிடித்தாள்.... சுஜாதாவும் யுக்தாவிடம் இருந்து அதை வாங்கி பிரணதியிடம் கொடுத்துவிட்டாள்,
யுக்தாவிற்கும் விட்டுக் கொடுக்கும் பழக்கமிருக்கிறது ஆனால் கேசவன் ஏதாவது வாங்கி வந்தார் என்றால் அதில் யுக்தாவிற்கு தான் முதலிடம் இந்த விஷயத்தில் சங்கவி என்றுமே வருத்தப்பட்டதில்லை... இதை நினைத்து யுக்தாவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.