அவள் தன்னிடமிருந்து நகர்ந்தே அமர்வதைக் கவனித்த குதிரைவீரன் மெள்ள எழுந்து அவளின் வலது பக்கம் போய் அமர்ந்து கொண்டான்.
அபரஞ்சிதா...மெதுவாய் அழைத்தான் குதிரைவீரன்.
அவனை நிமிந்து பார்த்த அபரஞ்சிதாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.அவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
அபரஞ்சிதா அழாதே..ஏன் அழுகிறாய்? என்னவாயிற்று..இப்பொழுது?..
மதிப்பிற்குரியவரே..எனக்கு என்னவாயிற்று என்றா கேட்கிறீர்?நீங்கள் ஏதும் தெரியாதவர் போல் என்னை வினவுவதேன்?நேற்று வரை எனக்கு நேர்ந்த அமங்கல நிகழ்வுகளை நான் எப்படி மறப்பேன்? எனக்கு வாழவே பிடிக்கவில்லை.என்னைப் போன்ற துர்பாக்கியசாலி உலகில் வேறு யாரும் உண்டோ? எனக்கு எவ்வளவு முறை திருமணம் ஆயிற்று என்று என்னாலேயே சொல்ல முடியாது.எந்தப் பெண்ணுக்காவது இப்படி நேருமா?என் தந்தையிடம் என் முதல் கணவன் இறந்த பிறகு மீண்டும் எனக்குத் திருமணம் வேண்டாமென எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்.அவர் என் மீதுள்ள பாசத்தால் எனக்கு என்றைக்காவது நல்லது நடக்காதா?எந்த ஒரு கணவராவது உயிரோடு இருக்கமாட்டாரா?என்ற எண்ணத்தில் தினம் தினம் திருமணம் செய்து வைக்கிறார்.ஆனால் என்பொருட்டு தினமும் ஒரு ஆண் என்னை மணந்து முதலிரவில் இறந்து போவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.இனியும் எனக்கு வாழப் பிடிக்கவில்லை.தயவு கூர்ந்து அதோ சுவற்றில் மாட்டி இருக்கும் வாள் ஒன்றை எடுத்து என்னைக் கொன்றுவிடுங்கள்.இந்தப் பேருதவியை நீங்கள் எனக்கு செய்ய வேண்டுமென உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். என் பொருட்டு நீங்களும் இன்று இவ்வறையில் இறந்துபோவதை நான் விரும்பவில்லை எனச் சொல்லி கைகளிரண்டையும் கூப்பி அவனைத் தொழுது அழுதாள் அபரஞ்சிதா.
அழாதே அபரஞ்சிதா..கொஞ்சம் சமாதானம் ஆவாய்..நான் கேட்கும் கேள்விகளுக்கு தயவு செய்து பதில் சொல்வாய்..என்றான் குதிரைவீரன்.
மௌனமாயிருந்தாள் அபரஞ்சிதா..
அங்கே சில நிமிடம் மௌனம் தொடர்ந்தது...
மௌனத்தைக் கலைத்தான் குதிரைவீரன்..
பெண்ணே...மௌனம் கலைப்பாய்..உனக்கும் உன் முந்தைய கணவன்மார்களுக்கும் நடந்த முதலிரவில் இவ்வறையில் என்ன நடக்கும்? அந்த ஒவ்வொரு ஆணும் எப்படி நடந்து கொள்வார்கள்?அவர்களுக்கு எப்படி மரணம் சம்பவிக்கும்?ஒன்றுவிடாமல் சொல்வாயாக என்றான்..
மீண்டும் தேம்பித் தேம்பி அழுதாள் அபரஞ்சிதா..பிறகு தானே சாமாதானம் ஆகி சொல்ல ஆரபித்தாள்.
ஒவ்வொரு ..நாளும் அன்றைய புதுக் கணவரும் நானும் மஞ்சத்தில் அருகருகே அமர்ந்து பல விஷயங்கள் பேசிக்கொண்டிருப்போம்.அன்னிலையில் அந்த ஆண் என்னை மிக நெருக்கமாக நெருங்கி வர முயற்சிப்பார்.என் கையைப் பிடிக்க முயற்சி செய்வார்.அப்போது திடீரென தாங்கமுடியாத வாசனை ஒன்று இவ்வறை முழுதும் பரவும்.அவ்வாசனையை நுகர்ந்த உடனேயே நான் மயங்கிச் சாய்ந்துவிடுவேன்.அதன் பிறகு இவ்வறையில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.மயக்கம் தெளிந்து நான் விழித்துப் பார்க்கையில் என் கணவராகிய அந்த ஆண் இறந்து கிடப்பார்.ஒவ்வொரு நாளும் முதலிரவு அறையாகிய இவ்வறையில் இதுவே நடக்கிறது.இதுபோல் நடக்க நான் என்ன பாபம் செய்தேனோ?இன்று உங்களுக்கும் இதுபோல் மரணம் சம்பவிக்க நான் அனுமதியேன்.எனவே நீங்கள் என்னைத் தொட முயலாதீர்கள் என்று சொல்லி அழுதாள் அபரஞ்சிதா.
அபரஞ்சிதா கூறியவற்றைக் கேட்ட குதிரைவீரன் சிந்தனை வயப்பட்டான்.பின்னர் என்ன நினைத்தானோ தான் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து கீழே இறங்கி மஞ்சத்தில் கிடந்த தலையணைகள் சிலவற்றை எடுத்து ஒன்றின் பின் ஒன்றாய் அடுத்தடுத்து ஒருவர் படுத்திருப்பது போல் வரிசையாய் வைத்துவிட்டு
அபரஞ்சிதாவின் இடப் பக்கம் வந்து அமர்ந்து கொண்டான்.அப்படி அமர்ந்து கொண்டவன் சட்டென அபரஞ்சிதாவைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள முயற்ச்சித்தான்.
அடுத்த வினாடி தாங்க முடியாத வாசனை ஒன்று அறை முழுதும் பரவ ஆரம்பித்தது.அபரஞ்சிதாவின் கண்கள் செருக ஆரம்பித்தன.உடல் குலுங்கியது.தொப்பென்று மஞ்சத்தில் மல்லாந்தபடி மயங்கிச் சாய்ந்தாள் அபரஞ்சிதா.
ஒரு வினாடியும் தாமதிக்காமல் குதிரைவீரன் மஞ்சத்திலிருந்து எழுந்து அறையின் கோடியில் தொங்கிக்கொண்டிருந்த திரைச் சீலையின் பின்னே போய் ஒளிந்து கொண்டான்.உடல் முழுதையும் திரைச் சீலைக்குப்பின் ஒளித்துக்கொண்டவன் கொஞ்சமாய்த் தலையை மட்டும் நீட்டி மஞ்சத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.
அப்படிப் பார்த்தவன் கண்களில் மஞ்சத்தில் நடந்த அந்தக் காட்சி பட்டபோது பார்த்த அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து வெளியே தெறித்து விழுந்துவிடும் போலாயின.அவனை அறியாமல் அவன் வாய்.. ஆ.. என சப்தமெழுப்ப முயன்றபோது அவனது இடது கை அவனது வாயை அனிச்சைச் செயலாய் சப்தம் வெளியே வராமல் இறுக மூடியது.அவனது வலது கை சுவற்றில் பெருக்கல் குறிபோல் மாட்டி வைத்திருந்த இரு வாள்களில் ஒன்றைச் சப்தமின்றி எடுத்து அதனை இறுகப் பற்றி அவ்வாளை தயார் நிலையில் வைத்துக் கொண்டது.மஞ்சத்தை நோக்கி ஓடிவரத் தயாரானான் குதிரைவீரன்.
குதிரைவீரன் அதிர்ச்சிக்குள்ளாகும்படி அங்கே அந்த முதலிரவு மஞ்சத்தில் அப்படி என்னதான் நிகழ்ந்தது..?...
அப்படி மஞ்சத்தில் என்ன நிகழ்ந்தது?அடுத்தவாரம் பார்ப்போமா..? நன்றி..
தொடரும்...
{kunena_discuss:956}