26. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி
அடுத்த ஒரு மணி நேரத்தில், டாக்டர் மாலதி பின் தொடர, சாரதாவை அழைத்து வந்து அவளுக்கு ஒதுக்கியிருந்த கட்டிலில் படுக்க வைத்தவர்கள், அவள் அருகே அந்த சின்ன பெண் சிசுவை கிடத்தினர்.
துக்கம் பொங்க, துணியில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அந்த ரோஜாக் குவியலை, மெல்ல தடவியபடி கண்ணீர் வகுத்தபடி இருந்தாள் சாரதா.
"மாமி, நீங்கதான் உங்க பெண்ணை தேற்றனும்.. என்ன செய்வது நாலும் பெண்ணா ஆயிற்று.. சாரதாவுக்கு ரொம்ப உடம்பு வீக்கா இருக்கு.. இனிமேல் அவங்க உடம்பும் தாங்காது.. போதும்ன்னு உங்க மாப்பிளைக்கு சொல்லுங்க?... ஆண் குழந்தையே வேணும்னனு அடுத்து அடுத்து முயற்சி பண்ணி கடைசியில பாருங்க இப்போ எல்லாமே பெண்ணா ஆச்சு.. போகட்டும், இனி மேல் அவ குழந்தையை நல்லபடியா பார்த்துக்க வேண்டாமா?... அவ போயிட்டா எல்லாம் சரியாயிடுமா என்ன?.. இந்த குழந்தைகளுக்காக அவ உயிரோட தான் இருக்கனும்.. அந்த அம்பாளே வந்து பிறந்திருக்கான்னு நினைச்சிகட்டும்.. எல்லாம் அவா பார்த்துப்பா".. என்ற டாக்டர் மாலதி,

"உங்க பொண்ணோட ஹஸ்பெண்டுக்கு முதல்ல தகவல் சொல்லி அனுப்புங்கோ" என்றவர்,
தடுப்புக்கு அடுத்த பக்கம் இருந்த தனது நண்பர் விஸ்வனாதனை பார்க்க சென்றார்.
கமலாவுக்கு இன்னமும் அழுகை நின்ற பாடில்லை.. விஸ்வநாதனுக்கும் மனமே சரியில்லை.. குழந்தையை பார்ப்பாரா இல்லை கமலாவைத் தேற்றுவாறா?. என்ன சொன்னாலும் திரும்பவும் சுற்றி வளைத்து 'குழந்தை பிழைக்குமா?.. இல்லையென்றால் தான் உயிரோடு இருக்க மாட்டேன்' என்று புலம்பி கொண்டே இருந்தால் அவர் மட்டும் என்ன செய்து விடக் கூடும்.
டாக்டர் மாலதி உள்ளே நுழையக் கண்டவர், "மாலா அந்த பெண்ணுக்கு இப்போ எப்படி இருக்கு?"
"என்ன சொல்ல விசு.. அவளை பார்த்தால் ரொம்பப் பாவமா இருக்கு.. லேபர் ரூமிலிருந்து வெளியே வர மாட்டேன்னு ஒரே பிடிவாதம்.. அவள் நிலமை அப்படி.. அவ்வளோ அழகா இருக்கு குழந்தை.. அதை பார்த்து பார்த்து அழறா.... என்னதான் இருந்தாலும் பெத்த மனமாச்சே..", என்று அலுத்துக் கொண்டார்.
பின்னர், "விசு.. அந்த குழந்தைகள் ஹாஸ்பிடலிலிருந்து ஃபோன் வந்தது.. நிலமை ரொம்ப மோசம்.. ஒன்னும் பிரயோஜனம் இல்லை..வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும், இதற்கு மேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..கடவுள் மனசு வைத்தால் மட்டுமே அது பிழைக்க முடியும்.. நம் மருத்தவத்தில் எத்தனை சாத்தியமோ அனைத்தும் செய்தாகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள்...ஐ ஆம் ரியல்லி சாரி.. என்னால் எதுவும் செய்ய முடியலையே என் நன்பனுக்குன்னு கஷ்டமா இருக்கு.. கமலாவை நீ தான் தேற்றனும்", என்று சொல்லிவிட்டு கமலாவைப் பார்த்தார்.
இந்த சம்பாஷனை ஆரம்பிக்கும் போதே கமலாவுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் போய் விட்டது.. எங்கும் சூனியம் படர்வதைப் போல் உணர்ந்தவள்.. இனிமேல் இந்த உயிர் இருந்து தான் என்ன பயன் என்று நினைத்து சட்டென்று மெல்ல அருகிலிருந்த மேஜை மேல் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை யாரும் அறியாமல் எடுத்தவள் தன் மணிக்கட்டை மெல்ல அறுக்க தொடங்கி இருந்தாள்.. ரத்தம் கீழ சொட்டத்தொடங்கியது..
"என்ன கமலா நான் சொல்வதை கேட்டாய் தானே.. விசுவும் பாவம் நீயும் உன் மனசை...", என்று பேச ஆரம்பித்தபடி அவளைப் பார்த்த மாலதிக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற அடுத்த நொடி கட்டிலின் அந்தப் பக்கத்திலிருந்த கையில் பெருகிய ரத்தத்தை கண்டவர் பதறி,
"விசு.. லுக் ஹியர்.. உன் மனைவி செய்திருக்கும் காரியத்தை பார் ", என்று சொல்லி, சட்டென்று அவள் கைகளை அழுத்தி பிடித்தபடி "நர்சை உடனே ஸ்டிறெச்சர் எடுத்து வரச் சொல்லு", என்று ஆணை பிரப்பித்தபடி அருகிலிருந்த பஞ்சால் ரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றார்..
விஸ்வனாததன் உடனே வெளியே ஓடி நர்சையும் ஸ்டிரெட்சரையும் எடுத்து வந்தவர், அடுத்த நொடி தான் மருத்தவர் என்பதையும் மறந்து சாராசரி கணவனாக பதறியபடி கமலாவை படுக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றார்.
ஒரு வழியாக ரத்தப்போக்கை கட்டுபடுத்தி தையல் போட்டு.. கிழிந்த நாராய் கமலாவை சிறிது போரட்டத்திகு பின் காப்பாற்றி மீண்டும் அறைக்கு அழைத்து வந்த போது வெகு நேரம் ஆகி விட்டது..
இந்த அமளிதுமளியில் கமலாவின் குழந்தை வேறு வந்துவிட்டது.. ஒல்லியாய் பூஞ்சையாய் மூச்சு விடத் திணறி கொண்டு இருந்தது.. ஒரு தனியறையில் அதனருகே ஒரு நர்ஸ் அமர்ந்து கொண்டு அதற்கு செயற்கை சுவாசம் அளித்து கொண்டிருதாள்.
இந்தப்பக்கம் சாரதா அந்தப்பக்கம் கமலா இருவரின் மனமும் தங்கள் குழந்தையையே சுற்றி வந்து கொண்டிருந்தது..
சாரதா வெகு நேரம் அழுதபடி இருந்தாள், அவள் தன் குழந்தையின் முகத்தைப் பார்ப்பது அழுவதுமாக பொழுதை கழித்தவள் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தளாள்..
"அம்மா டாக்டரை கொஞ்சம் கூப்பிடேன்", என்று தன் தாயை பணித்தாள்
அவள் தந்தையும் அம்மாவுடன் வெளியே சென்றார். அடுத்த சில நிமிஷங்களின் டாக்டர் தொடர வந்தனர் இருவரும்.