16. காதல் பின்னது உலகு - மனோஹரி
தன்னவளிடமிருந்து நிச்சயமாய் இப்படி ஒரு பதில் செயலை யவ்வன் எதிர் பார்த்திருக்கவில்லை. கோபப் படுவாள்….கன்னா பின்னா என திட்டுவாள்…. அல்லது பெரிய மனசு பண்ணி போனா போகுது அப்றமா அடிக்க வேண்டிய விதத்துல அடிச்சுகலாம் என முடிவெடுத்து உர் என்று தூக்கிய முகத்தோடு பைக்கிற்கு வருவாள்…..எப்டியும் போக வேண்டிய வழியெல்லாம் இத்தனை இருட்டா இருக்றதால பைக்ல ஏற மாட்டேன்னு சொல்ல மாட்டாதான்……ஆனா ஒரு வேளை ஈகோ எக்கு தப்பா ஏறி அவ அப்டி எதுவும் சொல்லிட்டா…..அவளை பைக்கில ஏற வைக்றதுக்கு இவன் தயாரா இருக்கனும்… இப்படித்தான் யவ்வன் யோசித்து வைத்திருந்ததே…… ஆனா அவன் நினைச்ச படிலாம் நடக்கிற ஆளா நம்ம வினி?
அவளது அணைப்பில், அந்த ஐ லவ் யூவில் அவனுக்கு ஒரு நொடி என்ன நடக்கிறதென்றே புரியவில்லை….. ஆனால் அதோடு அவள் அழுகிறாள் என்று புரிந்த போது வேறு எதையும் நினைக்க அவனுக்கு பிடிக்கவில்லை… முடியவில்லை….
அவள் அணைப்பிற்கு பதில் செயலாய்….. அவள் அன்பை ஏற்கும் விதமாய்…..அவள் அழுகைக்கு ஆறுதல் தரும் முகமாய் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன்
“வினு….என்னாச்சு வினு?..... சாரி வினு….உன்னை ஹர்ட் பண்ணனும்னு நினைச்சுலாம் நான் எதுவும் செய்யலமா….இது….…” என தவிக்க….அவன் இறுகிய அணைப்பில்…. அவனது மார்பிற்குள் புதைந்திருந்த மனையாளோ இடவலமாக தலையை அசைத்தபடி இன்னுமாய் அழுதாள்.
“சாரி யவி…” இந்த அவளது கேவலுடனான வார்த்தைகள் அணைத்திருந்தவனுக்கு இப்போது தெளிவாக புரிய…. அவள் முன் தலையில் இதழ் பதிக்க இயல்பாய் எழுந்த ஆசையை இடம் கருதி கைவிட்டான்.
“சாரி கேட்கிற அளவுக்கு நீ எதுவும் செய்துடலையே வினுமா…” அவன் தன் மனம் உணர்ந்ததைத்தான் சொன்னான்…..
அந்த நிமிடமே அனைத்தையும் அவனிடம் சொல்ல வேண்டும் என ஒரு ஆவல் அவளை உந்தித் தள்ள….மெல்ல விழி திறந்து அவள் பார்க்கையில் அவளவன் முகம் தவிர சுற்றி அப்பி இருந்த இருட்டும் தெரிய….
அவள் அழுகை ஒருவாறு அடங்கிப் போனது. ‘இது நின்னு பேசுற இடமோ நேரமோ கிடையாது….’
அவன் மீதிருந்த தன் பிடி தளர்த்தி அவள் விலக……அவனும் அதற்கு அனுமதித்தான்.
“நேரமாச்சு வீட்டுக்கு போகலாமா யவி?.....அங்க போய் பேசுவோம்..” அவன் முகம் பார்க்க முடியாமல் உள்ளே ஏதோ தடுக்க பார்வையை அவனது பைக்கின் மீது வைத்தபடி அவள் கேட்க…..
உரிமையாய் அவள் கைப் பற்றி பைக்கை நோக்கி நடந்தான் அவன்.
பைக்கிலும் அவன் பின் ஏறி அமர்ந்த இவள் வலக்கையை தானே எடுத்து தன் மீது சுற்றிப் பிடித்தபடியே பயணத்தை தொடங்கினான்.
அவன் பிடிக்குள் தன் கையைவிட்டு வைத்த நிலவினியோ அவனுக்கும் தனக்குமான உறவின் அழகை முதன் முதலாக ரசிக்கத் தொடங்கினாள். ஒரு வகையான மௌன பயணம் அது. மோகனமுமானதுதான்.
ஒற்றையடிப் பாதை இல்லைதான் அது. அதைவிட சற்று அகலமானதே…. ஆனாலும் கார் கொண்டு வரும் அளவு அகலமில்லை…. அந்து குண்டும் குழியுமான சாலையில் இத்தனை மணிக்கு இரவில், இப்படி ஒரு பயணத்தில், பயமில்லாமல் அவள் உணரக் கூடும் என சில மணி நேரங்கள் முன்னால் யாராவது இவளிடம் சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டாள் அவள்.
அவன் அருகாமையை….அங்கு அந்தரத்தில் தெரிந்த நட்சத்திரங்களின் அழகை….ஆங்காங்கு கூட்டமாய் குய் என சுற்றிக் கொண்டிருந்த மின்மினிகளின் மிளிர்தலை ரசித்தபடி வந்த வினி அத்தனை நேரம் அவள் கையைப் பற்றி இருந்த யவ்வன் கையை எடுத்துக் கொள்ளவும் தான் நிகழ்வுக்கு வந்தாள்.
எதிரில் கார் ஹெட்லைட் வெளிச்சம்…. இப்போது யவ்வன் பைக்கை நிறுத்திவிட்டான்…
“ஏன்டா இங்க தான் வர்றேன்னு சொல்லி காரை அனுப்ப சொல்லிட்டு வந்திருக்கலாமில்ல…” கேள்வி கேட்கும் குரல் அதிபனுடையது என புரிய இன்னுமாய் தன்னவன் மேலிருந்த கையை எடுத்துக் கொண்டாள் இவள்.
“நீங்க ரெண்டு பேரும் கார்ல வாங்க…..நாங்க பைக்கில வர்றோம்…” அதி சொல்லிக் கொண்டிருக்க இவள் இறங்கிவிட்டாள்.
“சாரிமா….இங்க இருந்து நம்ம ஊர் போற வழியில ரெண்டு இடத்துல நைட் ஆகிட்டுனா பைக்கில வர்ற பசங்கள கூட நிறுத்தி அப்பப்ப வழிப் பறி நடக்குது….” தம்பிக்கு கண்டனப் பார்வை ஒன்றை கொடுத்துவிட்டு இவளிடம் அதி மன்னிப்புக் கேட்ட
இவள் பயந்து விடக் கூடாதென அவன் விஷயத்தை சின்னதாக சொல்கிறான் என்றும்….இவள் கணவனுக்கும் இவளுக்கும் இடையில் தான் வருகிறேன் என்ற உணர்வு இவளுக்கு வந்துவிடக் கூடாதே என அவன் தயங்குகிறான் என்றும் இவளுக்கு புரிகிறது…