“தெரியலை சார், அதப்பத்தி ராமுக்கிட்டதான் கேக்கணும்”, என்று கூற, தலையசைத்து அவனை தொடர்ந்து கூறுமாறு சொன்னான் மதி.
“ராமு வந்து சொன்ன... விமலா பண்ற வேலை, அப்பறம் அவளுக்கு உதவற ஆளுங்களோட பலம் இதெல்லாம் கேட்டதுல இருந்து அப்பா, அம்மா ரெண்டு பேருமே ரொம்பக் கவலைப்பட ஆரம்பிச்சுட்டாங்க. எங்க நாங்க போலீஸ் ஸ்டேஷன் போனா அதனால எங்க உயிருக்கே ஆபத்து வருமோன்னு பயந்த அப்பா, மறுநாள் நான் ஆபீஸ் போனபிறகு, ராமு கொடுத்த எவிடென்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு போய் அவங்க வீட்டுல கொடுத்துட்டு, இனி இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு, எந்த விதத்துலயும் எங்களைத் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டு வந்துட்டாங்க”, ஸ்ரீதர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நடுவில் குறுக்கிட்டார் அவன் தந்தை.
“எனக்கு பயம் சார். நாங்க எல்லாம் சாதாரண மனுஷங்க. எங்களுக்கு மொதல்ல எங்கக் குடும்பம்தான் முக்கியம், அப்பறம்தான் சமூக சேவை எல்லாம். ஸ்ரீதர், ராமு எல்லாம் இளம் தலைமுறைங்க. அதனால ஒரு வேகத்துல போலீஸ்க்கு போறேன்னு கிளம்பிட்டாங்க. ஆனா அவங்க வந்து அடிச்சுப் போட்டுட்டு போனா எங்களை என்னன்னு கேக்கக்கூட ஆளில்லாத நிலைமை”
ஸ்ரீதரின் அப்பா கூறியதும் புரிந்ததற்கு அறிகுறியாக தலையசைத்தான் மதி.
“நீங்க அவங்க வீட்டுக்குப் போய் உண்மைய சொன்ன உடனே அவங்க ரியாக்ஷன் எப்படி இருந்தது”
“நானும் என்னோட மனைவியும்தான் அவங்க வீட்டுக்கு போய் இருந்தோம். நான் விமலா அப்பாக்கிட்ட அவர் பண்ற வேலையை சொல்லி ஏன் மறைச்சாங்க அப்படின்னு கேட்டேன். நான் பேசறது எதுவுமே தங்கச்சிக்குப் புரியலை. அது எங்களை அதிர்ச்சியோடதான் பார்த்துது. ஆனா விமலாவும், அவங்க அப்பாவும் நாங்க பேச ஆரம்பிச்ச உடனேயே உஷார் ஆகிட்டாங்க. மொதல்ல அது எல்லாம் உண்மையே இல்லை. வேணும்னே நாங்க கல்யாணத்தை நிறுத்த இந்த மாதிரி எல்லாம் பண்றோம் அப்படின்னு கத்தினாங்க. அப்பறம் நாங்க அப்படி நாங்க பொய் சொல்றா மாதிரி இருந்தா வாங்க இப்பவே போலீஸ் ஸ்டேஷன் போகலாம்ன்னு சொன்னப்பறம்தான் அடங்கினாங்க. அப்பறம் மூணு பேரும் மாத்தி மாத்தி எங்கக்கிட்ட கெஞ்சி, இனி இதுப் போல எல்லாம் எந்த கெட்ட வழிக்கும் போகப் போறது இல்லை. நாங்க திருந்திட்டதாலதான் விமலாக்குக்கூட கல்யாணத்துக்கு பாக்க ஆரம்பிச்சோம்ன்னு அந்த ஆள் அழுது பொறண்டு சொன்னாரு. அந்தாள் சொன்னதை நாங்க நம்பாட்டாலும், எங்க வரைல எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு சொல்லிட்டு வந்துட்டோம். வீட்டுக்கு வந்தப்பறம் ஸ்ரீதரையும், ராமுவையும் கூப்பிட்டு விஷயத்தை சொல்ல ரெண்டு பேருமே ஏன் இப்படி பண்ணினீங்கன்னு திட்டினாங்க. குற்றவாளியை விட அவனை காப்பாத்தறவன்தான் பெரிய குற்றவாளி அப்படின்னு கத்தினாங்க. ஆனால் நான் அவங்க ரெண்டு பேர்க்கிட்டயும் இதப்பத்தி இனி பேசவேண்டாம்னு சொல்லிட்டேன். அதே மாதிரி அவங்க விமலா வீட்டுக்கு எதிரா எந்த விஷயத்துலயும் ஈடுபடக்கூடாதுன்னும் சொல்லிட்டேன். அவங்க அம்மாவும் இந்த விஷயம் எதுவுமே நமக்கு வேண்டாம், நிம்மதியா இருந்தா மட்டும் போதும்ன்னு ஒரே அழுகை. ஸ்ரீதர்க்கு இஷ்டம் இல்லாட்டாலும் அவங்க அம்மா அழறதைப் பார்த்து, சரிப்பா நாங்க எதுவும் பண்ணலைன்னு சொல்லிட்டான். இதுல ராமுத்தம்பிக்கு வருத்தம்தான். ஏன்னா அந்தப் பையன் ஏகப்பட்ட கஷ்டங்கள் பட்டுத்தான் அத்தனை விஷயமும் கலெக்ட் செய்திருக்கு. இப்படி எல்லாம் வேஸ்ட்டா போச்சேன்னு ஒரே கோவம். ஸ்ரீதர்தான் அந்தத் தம்பியை சமாதானப்படுத்தி அனுப்பி வச்சான்”
“அப்பாக்கிட்ட அவங்களுக்கு எதிரா எதுவும் பண்ண மாட்டோம்ன்னு சொன்னாலும், மூணு நாள் கழிச்சு ராமுக்கு உடம்பு சரியான பிறகு அவனைப் பார்த்து போலீஸ் ஸ்டேஷன் போலாம்ன்னு சொன்னேன். அதுக்கு அவன் ஒரு மாசம் விட்டுடுலாம். இப்போ அவங்க உஷார் ஆகி இருப்பாங்க. எது செஞ்சாலும் அதுல இருந்து ஈஸியா வெளிய வர அத்தனை வேலையும் பண்ணி இருப்பாங்கன்னு சொன்னான். நானும் சரின்னு விட்டுட்டேன். நாங்க விட்ட அந்த நேரம்தான் தப்பாப் போச்சு. விமலா டிவிக்கு போய் தப்பை எங்கப் பக்கம் திருப்பி விட்டுட்டா”
“அதெல்லாம் எதுவும் தப்பாகலை ஸ்ரீதர். நாம உண்மைய ஆதாரத்தோட நிரூபிச்சுடலாம். விமலா மட்டும் இல்லாம, அந்த டிவி சானெல் மேலயும் நடவடிக்கை எடுக்கலாம், கவலைப்படாதீங்க. நீங்க உங்க நண்பர் ராமுவுக்கு போன் பண்ணி அவரோட மாமாப் பையன் போன் நம்பர் வாங்குங்க. நானே நேரடியாப் பேசறேன். சாவித்திரிமா, உங்க வழியாவும் எனக்கு ஒரு ஹெல்ப் வேண்டி இருக்கு”
“சொல்லுங்க சார் எதுவா இருந்தாலும் பண்றேன்”
“உங்க பொண்ணு மொபைல்ல இருந்து எனக்கு அந்த போட்டோஸ் வேணுமே. உங்களால அதை எடுக்க முடியுமா?”
“சார் அது லேட்டஸ்ட் மாடல் போன். எனக்கு அதை உபயோகப்படுத்த தெரியாதே”
“அக்கா போன்ல இருந்து நான் எடுக்கறேன் சார். அது எப்படின்னு நானும் அம்மாவும் பார்த்துக்கறோம்”
“சரி முடிஞ்சா பாருங்க. முடிஞ்சவரை மாட்டிக்காம இருங்க. அவங்க கொஞ்சம் அலெர்ட் ஆனாக்கூட கஷ்டம்”
“இல்லை சார், அவளுக்கு சந்தேகம் வராதபடி செய்யறேன்”