“ஓகே, இனி சாவித்திரி நீங்க வராதீங்க. அடிக்கடி வெளிய வந்தீங்கன்னா உங்கக் கணவருக்கு சந்தேகம் வந்திடும். அதனால எதுனாலும் நான் ரூபாக்கிட்ட பேசிக்கறேன். ரூபா நீங்க காலேஜ் போயிட்டு உங்களோட லஞ்ச் ஹவர்ல எனக்கோ, இல்லை ஸ்ரீதர்க்கோ டெய்லி கால் பண்ணுங்க. நாங்க உங்களுக்கு அப்டேட் பண்றோம். நீங்க போட்டோ அவ போன்ல இருந்து எடுத்த உடனே என் நம்பருக்கு அதை மெசேஜ் பண்ணிட்டு மெஸேஜை அவங்க போன்ல இருந்து டெலீட் பண்ணிடுங்க”
“சரி சார் நீங்க சொன்னா மாதிரியே பண்ணிடறேன். நான் நாளைக்கு மதியம் காலேஜ்லேர்ந்து உங்களை கூப்பிடறேன் சார்”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ராமுவை அழைத்த ஸ்ரீதர், அவனிடம் அன்று நடந்ததை சொல்லி, அவன் மாமாப் பையனின் விவரத்தைக் கேட்க, அவன் இங்குதான் இருப்பதாகவும், வேண்டுமென்றால் நேரில் வருவதாகும் கூற, அந்த விஷயத்தை மதியிடம் கூறினான் ஸ்ரீதர்.
“ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்க ஒண்ணு பண்ணுங்க ஸ்ரீதர். எனக்கு இப்போ கமிஷ்னரோட மீட்டிங் இருக்கு. சாயங்காலம் ஒரு எட்டு மணிக்கு நீங்க இங்க வர முடியுமா”
“கண்டிப்பா சார், வரலாம். ஒண்ணும் பிரச்சனை இல்லை”
“சரி, நீங்க ராமுக்கிட்ட பேசி முடிஞ்சா அவரும் அந்த நேரம் வரமுடியுமான்னு கேளுங்க, அதே மாதிரி அந்த எவிடென்ஸ் எல்லாம் அவங்கக்கிட்ட இருந்தா அதையும் எடுத்துட்டு வர சொல்லுங்க”
“அது இருக்குமான்னு தெரியலை சார், ஏன்னா அவர் எல்லாத்தையும் எங்கக்கிட்ட கொடுத்துட்டார்”
“இல்லை ஸ்ரீதர், இதுதான் அவருக்கு முதல் கேஸ் அப்படின்னு சொல்றீங்க. பொதுவா, அப்படி எல்லாத்தையும் காப்பி பண்ணாம உங்கக்கிட்ட கொடுத்து இருக்கமாட்டார். எதுக்கும் கேட்டுப் பாருங்க”
“சரி சார், முடிஞ்சவரை நான் ராமுவோட, அவன் மாமாப்பையனையும் வர சொல்றேன். அவர் வந்தா அவர் கண்டுபிடிச்ச விஷயத்தை இன்னும் கொஞ்சம் டீடைல்லா சொல்லுவார். இப்போ கிளம்பறோம் சார்”, என்று கூறி ஸ்ரீதர் கிளம்ப, ரூபாவும் அவளின் கைப்பேசி எண்ணை மதியிடம் கொடுத்துவிட்டு, அவனின் எண்ணை வாங்கிக்கொண்டாள்.
“சாவித்திரிமா நீங்க ரெண்டு பேரும் இனி வீட்டுல கொஞ்சம் கவனமா இருங்க. இந்த விஷயத்தைப் பத்தி நீங்களும், ரூபாவும் அவங்க ரெண்டு பேர் இருக்கும்போது பேசாதீங்க. முடிஞ்சவரை நீங்க முன்னாடி எப்படி இருந்தீங்களோ அதே மாதிரி இருங்க”,என்று கூற, சாவித்ரி சரி என்று கூறி விடைபெற்றாள்.
“தங்கச்சி நாங்க கால் டாக்ஸி கூப்பிட்டு இருக்கோம். உன்னையும், ரூபாவையும் உங்க வீட்டுக்கு ரெண்டுத் தெரு முன்னாடி விட்டுட்டு போறோம். இந்த வெயில்ல நீங்க பஸ்ல போய் கஷ்டப்பட வேண்டாம்”, ஸ்ரீதரின் தந்தை சொல்ல, இத்தனை நல்ல உள்ளங்களை தன் கணவரும், மகளும் கஷ்டப்படுத்துகிறார்களே என்று வருந்தினார்.
“இல்லைண்ணே நாங்க பஸ்லயே போயிடறோம். ஒண்ணும் கஷ்டம் இல்லை”, என்று கூற, அதை மறுத்து, அவர்களை தங்கள் செல்லும் கால் டாக்ஸியில் ஏற்றி அவர்கள் வீட்டிற்கு இரண்டு தெருவிற்கு முன்னால் விட்டு சென்றார்கள்.
ரூபாவும், சாவித்ரியும் வீட்டிற்குள் நுழையும்போது விமலாவும், அவள் தந்தையும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“காலைல போனவ, மணி என்ன பார்த்த இல்லை. விளக்கு வைக்கற நேரம் ஆகிடுச்சு. இப்போத்தான் வர்றதா?”
“நாங்க என்ன பக்கத்துல இருக்கற கோவிலுக்கா போயிட்டு வந்தோம், அத்தனை தூரம், அதுவும் நாலு பஸ் மாறி போயிட்டு வர்றதுக்குள்ள நேரம் ஆகிடுச்சு”
“அதுக்குத்தான் உன்னை போக வேண்டாம்ன்னு சொன்னேன். கேட்டியா. அது சரி, உன் மூஞ்சி ஏன் இப்படி இருக்கு”
“அம்மா கோவிலுக்கு போனதுலேர்ந்து சாமி முன்னாடி உக்கார்ந்து ஒரே அழுகைப்பா. இப்போவும் திரும்பி வரும்போதும் அழுதுட்டேதான் வந்தாங்க”
“ஏன், இந்த அளவு ஒப்பாரி வைக்கற அளவு என்ன ஆச்சு?”
“இன்னும் என்ன ஆகணும், நீங்க ரெண்டு பேர் பண்ற வேலை, நம்மளை எங்கக் கொண்டு போய் நிறுத்தப்போகுதுன்னு நினைச்சா பயமா இருக்கு”
“இங்கப்பாரு நேத்தே உனக்கு சொல்லிட்டேன். உன் வேலைய மட்டும் பாரு. தேவையில்லாம எங்க விஷயத்துல தலையிடாதேன்னு. இங்க நடக்கற விஷயம் ஏதானும் கொஞ்சம் வெளிய போச்சுன்னு தெரிஞ்சாக்கூட ஆத்தாளையும், மகளையும் வீட்டை விட்டு வெளிய தொரத்திடுவேன் புரியுதா”,என்று ரூபாவின் தந்தை மிரட்ட, தலை ஆட்டியபடியே உள்ளே சென்றாள் சாவித்ரி.
“அப்பா, எனக்கு என்னோவோ அம்மா மேல சந்தேகமா இருக்குப்பா. வெளியவே போகாதவங்க இப்போ ரெண்டு நாளா, போயிட்டு போயிட்டு வர்றாங்க. மாமாக்கிட்ட ஏதானும் விஷயம் சொல்லி இருப்பாங்களோ”
“ச்சே ச்சே அப்படி எல்லாம் பண்ண மாட்டாம்மா. என் மேல எப்பவுமே பயம் ஜாஸ்தி. ஏன் ஆபீஸ் விஷயத்துல நான் மாட்டின அப்போக்கூட அவளோட தம்பிக்கிட்ட மட்டும்தான் சொன்னா. அவனோட பொண்டாட்டிக்குக்கூட தெரியாம பார்த்துக்கிட்டா. இப்போக்கூட பாரு வீடு அவப்பேருல இருக்கு. ஆனா நான் வீட்டை விட்டுத் துரத்திடுவேன்னு சொன்ன உடனே பயந்துட்டு உள்ள போய்ட்டா பாரு. அதனால நீ கவலைப்படாம இரு”, என்று தன் மனைவியின் மாற்றம் தெரியாமல், விமலாவை சமாதானப்படுத்தினார் அவளின் தந்தை.
தொடரும்
{kunena_discuss:857}