அவர் வந்து என்னப் பிரச்சினை என்றுக் கேட்டு அறியவும் யோசிக்கலானார். சாராவோ ஏன் அண்ணி அவன் இங்கேயே நம்ம வீட்டுலயே இருக்கட்டும் , நான் அவனைப் பார்த்துக்கிறேன் என்று தீர்வை முன் வைத்தாள்.
" அவன் என்னைய விட்டுட்டு இருக்க மாட்டானே" என்று சொன்னார், அது என்னவோ உண்மைதான் என சாராவும் சொல்லிக் கொண்டாள். அம்மா தன்னைக் கவனிக்காமல் தம்பியைக் கவனிக்கிறவளாக இருந்தாலும் தாயின் அருகாமையில் இரவு தூங்குவதிலேயே அவனுக்கு நிறைவாகி விடும். அவன் தாயை விட்டு அது வரை எங்கும் சென்றது இல்லை.
அது வரை யோசித்துக் கொண்டு இருந்த தாமஸின் ஆலோசனையோ வித்தியாசமாக இருந்தது.
"நீங்க இப்படியெல்லாம் யோசிச்சிட்டு இருக்காதீங்க அக்கா, இப்போ அவன் படிப்பு தான் முக்கியம். உங்க கூடவே வச்சிட்டு இருந்தீங்கன்னா அவன் ஃப்யூச்சர் என்னவாகும். எனக்கு தெரிஞ்ச ஒரு ரெசிடென்ஸியல் ஸ்கூல் இருக்கு, எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இப்போ தான் அதைபத்திச் சொல்லிக் கிட்டு இருந்தாரு.படிப்பு விளையாட்டுன்னு கத்துக்க ரொம்ப நல்ல இடமாம்,அங்க மட்டும் அவனைப் போட்டுட்டீங்கன்னு வைங்க அவன் படிப்பை பத்தி நீங்க கவலையே பட வேண்டாம்.மச்சாண்ட கேட்டுட்டு சொல்லுங்க., அட்மிஷனுக்காகவெல்லாம் நீங்க கவலைப் பட வேண்டாம், எனக்குத் தெரிஞ்ச ஆள் இருக்காங்க" என்றார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
தன்னைவிட்டு ஐந்து நிமிட தூரத்தில் இருக்கிற தன் அத்தை வீட்டுக்கே போய் தங்காத பிள்ளையை கண்காணாத இடத்தில் கொண்டுப் போய் விடுவதா என அவருக்கு மனம் பதறியது. இங்கே ஆலோசனைச் சொன்னதோடு நில்லாமல் இப்போ போன் போட்டால் கிடைப்பாங்கள்ல என்றுச் சொன்னவராக தானே ராஜிற்கு போன் போட்டு விஷயத்தைச் சொன்னார்.
அவர் ரூபனின் படிப்பை முன் நிறுத்திய விதத்தில் இவர்களுக்கு பதில் சொல்ல முடியாததாயிற்று, இறுதியில் அனைவரும் இணைந்து அந்த முடிவை எடுத்தனர். ரூபனின் அழுகையை யாரும் பொருட்படுத்தவில்லை.
"அவன் ஆம்புளப் புள்ள, அதெல்லாம் இருந்துகிடுவான்"...என எல்லோரும் சொன்னாலும் அவன் ஒரு குழந்தைதான் என யாருக்கும் அப்போது நினைவில்லை. தன் தாயின் சேலையை வாசம் பிடித்து உறங்க ஆசைப்பட்ட அவனுக்கு கட்டாயமான பிரிதல் கொடுக்கப் பட்டது.
முன்பின் தெரியாத இடத்தில், சூழ்நிலையில் அவனால் ஒன்றவே இயலவில்லை. முதல் இரண்டு வருடங்கள் அவன் எப்படித்தான் கடந்தானோ தெரியாது. இரவில் தனிமையில் தாயின் சேலையைத் தேடுபவன் தனக்கு கிடைத்த தனிமைக்கு பழகிக் கொண்டான். தனக்கு இயல்பாகவே ஆர்வமூட்டும் படிப்பில் மூழ்கிப் போனான், அதிகமாக பிறரோடு அளவளாவும் பழக்கமில்லாததால் தாமரையிலைத் தண்ணீர் போல நண்பர்களோடு பழகிக் கொண்டு தன்னுடைய கவனத்தை எல்லாம் படிப்போடு விளையாட்டிலும் பதித்தான்.
அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, ரூபனின் குடும்பத்தினர் அப்பர் மிடில் கிளாஸ் என்றால், அவன் சேர்ந்த ஹாஸ்டல், அதிலிருந்த வசதிகள், படிப்புகள் எல்லாம் மிகவும் உயர் தரமானவை, பெரும் பாலான பணக்கார மக்களின் பிள்ளைகளின் அங்குப் படித்துக் கொண்டிருந்தனர். தன்னை பலரும் தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளாததும், தன்னுடன் நட்பு பாராட்டதுமான அந்த சூழ்நிலை அவனுக்கு துயரமாகவே இருந்தது. இரண்டும் கெட்டான் நிலை என்பது இதுதானோ? தன்னுடைய குடும்பத்தினர் தனக்காக மிகவும் அதிகமாக செலவழிக்கிறார்கள் என்று அவனுக்கு புரிந்து இருந்ததாலேயே அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் அவனை உந்திக் கொண்டிருந்தது.
ஆனாலும் ஏனோ தனிமை அவனைத் துரத்திக் கொண்டிருந்தது.லீவுகளில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அங்கு அவனால் ஒன்ற முடியாமல் போயிற்று, அப்பாவின் லீவுகளும், இவனின் லீவுகளும் மாறாகவே அமைந்து இருந்தன. அவர் தன்னுடைய லீவுகளில் வரும் போதெல்லாம் ஒரு நாள் வந்து அவனைப் பார்த்துச் செல்வார்.
அம்மாவிற்கோ எப்போதும் ஏதாவது வேலை, ஆண்பிள்ளை வளர்ந்த பின்னர் செல்லம் கொஞ்சக் கூடாது என யார் சொன்னார்களோ? அதிகப் பட்சம் அவன் தலையை வருடி உனக்கு சாப்பிட என்ன வேண்டும் என்றுக் கேட்பாள். "அம்மா, உன் மடியில் நான் கொஞ்சம் படுத்துக் கொள்ளவா?" எனக் கேட்க இவனுக்கு வாய் வராது.லீவுக்கு வீட்டிற்கு வந்த பிள்ளை வயிற்றை வித விதமாக கவனிப்பதிலேயே அவள் நேரம் போய் விடும்.
அண்ணன் தன் படிப்பிலேயே எப்போதும் மூழ்கி இருப்பதும், தம்பி தன் வயது தோழமைகளோடு விளையாடுவதுமாக இருக்க அவனுக்கு உற்றத் தோழி அவன் ஜாக்கி அக்கா தான்.
தான் அங்கு பார்த்த விஷயங்களை, தன்னை வசதிக்குறைவானவன் என்றுத் தாழ்வாகப் பேசும் உடன் படிக்கும் மாணவர்களைப் பற்றிச் சொல்லி வருந்தும் போதெல்லாம் அவள் தான் அவனுக்கு ஆறுதல் சொல்வாள், உற்சாகமூட்டுவாள். ஒவ்வொரு வருடமும் சிறந்த மாணவன் பரிசை வாங்கி வந்து காட்டும் போது எல்லோரையும் விட அதிகமாக மனம் மகிழ்வாள்.