"தெரியலை ரகு. இப்போ இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது. அதை எப்படி எதிர்கொள்ள போறேனும் எனக்கு தெரியாது. இந்த நிமிஷம் இப்போ நம்ம பெரியம்மா முகத்துல பார்த்த அந்த நிம்மதி மற்ற எல்லோர் முகத்துலையும் வரணும். அது மட்டும் தான் என் மனசுல இப்போ ஓடிட்டு இருக்கு. " என்ற சரண் அப்போது தான் மதியின் ஞாபகம் வந்தவனாக மொபைலை எடுத்து பார்க்க அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இந்த விஷயத்தை அவனிடம் யார் சொல்வது. அப்படியே அவனிடம் இதை சொன்னாலும் எது வரை சொல்ல வேண்டும் . ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. சில நிமிடம் யோசித்தவன், ரகுவிடம் உணவு பொட்டலங்களை கொடுத்து எல்லோருக்கும் கொடுக்க சொல்லிவிட்டு ஹோட்டலில் ரூம் புக் பண்ணிவிட்டு வருவதாக கூறி சென்றான்.
அருகிலிருந்த ஹோட்டலுக்கு சென்றவன் அங்கிருந்த ரிஷப்ஷனில் மூன்று அறைகளுக்கான தொகையை செலுத்தி தன்னுடைய மொபைலிலும் சிறிது சார்ஜ் ஏற்றிக்கொண்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தவன் தன்னுடைய மொபைலை ஆன் செய்ய அதற்காகவே காத்திருந்ததை போல மதியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மதியிடம் பேச வேண்டியதை ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்ததால், அழைப்பை ஏற்றவன் குரலில் எந்த உணர்வையும் காட்டாமல் இயல்பாக "ஹலோ மதி எப்படிப்பா இருக்க " என்று கேட்டான்.
அந்த கனவிற்கு பின் மனதில் ஒரு வித சஞ்சலத்துடனே இருந்த மதிக்கு மதுவிற்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றிய நொடியில் இருந்து சரணுடன் பேச முயன்று தோற்றவன் இப்போது சரணின் இயல்பான பேச்சை கேட்கவும் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
"நான் நல்லா இருக்கேன் மச்சான். எங்க புடிக்கவே முடியலை. ரெண்டு நாளா டிரை பண்ணிட்டு இருக்கேன். எங்க போனிங்க." -மதி
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
"சாரிப்பா. கொஞ்சம் அவசரமான காண்ட்ராக்ட். அதான் பெங்களூரு வந்திருந்தேன். கெளம்பும்போது சொல்ல முடியலை. " -சரண்
"சாரியெல்லாம் எதுக்குப்பா. " என்ற மதி சரணிடம் தன்னுடைய மனசஞ்சலத்தையும் அதனால் சரணை தொடர்பு கொள்ள முயன்றதையும் சொல்ல ஒரு நிமிடம் பேச்சற்று தான் போனான் சரண். இவனின் அன்பு எவ்வளவு வலியது என்பதற்கு இதற்கும் மேல் என்ன சான்று வேண்டும். இப்படியொரு அன்பை பெற என் தங்கை நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் அதை மதியிடம் வாய்விட்டும் சொன்னான்.
"ஹ்ம்ம் நீ இப்படி சொல்ற. உன் தங்கையோ பதிலே சொல்ல மாட்டேன்கிறா. என் காதலை சொல்லும் போது காதையும் வாயையும் மூடிக்கிட்டு கணால மட்டும் பேசுனா. இப்போ அங்க உக்காந்துகிட்டு அந்த கண் பேசற வார்த்தையும் புரியாத தூரத்துல இல்லை இருக்கா. " என்று மதி கூற யாருடைய கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் தான் உன் மது இருக்கிறாள் என்று சொல்ல முடியாமல் இதற்க்கு மேலும் தன்னால் சமாளிக்க முடியாது என்று தோன்றவும் யாரோ அழைப்பதாக கூறி அழைப்பை துண்டித்தான் சரண். தன்னுடைய மன பாரத்தை இறக்கி வைக்க யாரை தேட முடியும் ஒருவனால் இவ்வுலகில் தன துணையை அன்றி. திவ்யாவை அழைத்தான் அடுத்த நொடி. மதுவை காணாமல் இவர்கள் சென்ற அந்த நொடி முதல் உண்ணாமல் உறங்காமல் போனின் பக்கத்திலேயே தவம் கிடந்தாள் தன தோழியின் நிலையறிய.
சரணின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும் நொடியும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றவள் "மது எப்படி இருக்கா சரண் " என்ற அவளின் குரலை கேட்ட அடுத்த நொடி தன் மனதின் பாரங்களை எல்லாம் கொட்டி தீர்த்தான் தன் காதலியிடம். மறுமுனையில் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே " திவ்யா " என்று சரண் அழைக்க விசும்பல் சத்தம் மட்டுமே வந்தது மறுமுனையில் இருந்து.
"திவ்யா அழாத. ப்ளீஸ். சாரி நான் என் மன பாரத்தை எறக்கி வெக்கிறதா நினச்சு உன்னை கஷ்டபடுத்திடேன் சாரி மா." என்று சரண் வேதனையுடன் கூற, அந்த நொடி தனுடைய ஆறுதலை தேடி அழைத்தவனிடம் தானும் அழுது அவனின் வேதனையை அதிக படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்வு தோன்ற அவளின் கண்களை துடைத்து கொண்டு சரணின் மனதை இலகுவாக்க அவனிடம் பேசினாள்.
"இல்லை சரண் அவளுக்கு ஒன்னும் ஆகாது. அவ சின்ன இரும்பை கூட நசுக்க மாட்டா. அவளை கடவுள் கைவிட மாட்டார். இப்போ அவ எழுந்து வரட்டும். அதுக்கு அப்பறம் நாம மத்ததை பார்க்கலாம். மதிகிட்ட பேசுனிங்கலா? " -திவ்யா
"பேசுனேன் ஆனா உண்மையை சொல்லல. அவனால தாங்க முடியாது. மது எழுந்ததும் சொல்லிக்கலாம். " என்று கூறியவன் சிறிது நேரம் திவ்யாவுடன் பேசிவிட்டு மருத்துவமனையை நோக்கி சென்றான்.
எவ்வளவோ கூறியும் மது கண்விழித்ததும் செல்வதாக கூறி அனைவரும் அங்கிருந்து நகர மறுத்துவிடவே வேறு வழியின்றி அனைவரும் அங்கிருக்க அனுமதித்தனர் மருத்துவமனையில்.
"சார் அவங்களுக்கு நினைவு திரும்பிடுச்சு. ஒரொருத்தரா பாருங்க. அதிகம் பேச வேண்டாம். " என்று நர்ஸ் வந்து கூறவும் நான் போயி அன்னையை கூட்டிட்டு வரேன் என்று பாலசண்முகம் ஓட, சிவசண்முகம் தன் மகளை காண உள்ளே சென்றார். தங்களின் மகள் கசங்கிய மலராக அங்கே கிடப்பதை அருகிலிருந்து கண்டவருக்கு தன்னுடைய கட்டுபாட்டையும் மீறி கண்கள் கலங்கியது.