(Reading time: 14 - 27 minutes)

மா யாழினிதான் என்னை மாற்றினா.. மனசுல இருக்குறதை வாய்விட்டு சொல்லாமல் மறைச்சு வைச்சா யாருக்குமே புரியாது.. அப்பப்போமனசுல தோன்றிடும் விஷயத்தை வாய்விட்டு சொன்னால் மனசுல பாரம் இருக்காதுன்னு அவதான் சொல்லி தந்தா.. இதுல என்ன தப்பு இருக்கு?”

“ புரியாது டா.. உனக்கு என் நிலைமை புரியாது.. உனக்கு ஒரு பையனோ பொண்ணோ இருந்து அவங்களுக்கு ஆசை ஆசையாய் கல்யாண ஏற்பாடு பண்ணி, சொந்த பந்தத்துக்கு எல்லாம் பத்திரிக்கை வெச்சு, கடைசி நிமிஷத்துல சரியான காரணம் கூடசொல்லாமல் கல்யாணத்தை நிறுத்தினால் அது எவ்வளவு பெரிய அவமானம்ன்னு அனுபவிச்சு பாரு புரியும்.. அக்கம்பக்கம் தலைக்காட்ட முடியாமல் நான் கூனிகுறுகி நின்னதும், பதில் சொல்ல முடியாமல் தவிச்சதும் உனக்கென்னடா தெரியும்?”

“ கல்யாணம் நின்னது தப்புதான்பா.. உங்க பக்கம் நியாயம் இல்லன்னு நான் சொல்லவே இல்லை..ஆனா, சொந்த பந்தம் கொடுத்த வலிக்கு என் வாழ்க்கையை நீங்க பலி கொடுக்குறிங்களே அதுதான் ஏற்றுக்க முடியல. மூனு வருஷம் ஆச்சு.. எல்லாம் மாறிடுச்சு.. இப்போ தலை நிமிர்ந்து தானே இருக்கீங்க ரெண்டு பேரும்? அன்னைக்கு உங்களை பார்த்து கேள்வி கேட்டவங்க எல்லாம் எங்க ? அவங்கவங்க வேலையை தானே பார்த்துட்டு இருக்காங்க ? ஆனா நீங்க ? மகனையும் மருமகளையும் பிரிஞ்சு வாரத்துக்கு ஒரு தடவை கோவிலில் என்னை பார்த்துட்டு இருக்கீங்க..! அதுவும் பார்க்கும்போதெல்லாம் சண்டை.. மூனு வருஷத்துல இவ்வளவு திட்டியும் கூட என் மேல கோபம் போகலை..அப்படித்தானே அப்பா?”

“..”

“ உங்களுக்குத்தான்பா புரியல.. என் வலியும் வருத்தமும்..”

“..”

“ நான் வரேன்மா..இதுக்கு மேலயும் இங்க நின்னு பேசினால் சண்டைதான் வரும்.. உடம்ப பார்த்துக்கோங்க ரெண்டு பேரும்.” என்றவன் அவரின் கன்னத்தை பாசமாய் வருடிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான். இப்படி அடிக்கடி நடக்கும் வாக்குவாதம் அவனுக்கு ஒன்றும் புதிதல்ல..நடந்ததை நினைத்து மனம் உடைந்து போனாலும், ஒருமுறை கண்மூடி யாழினியின் புன்னகை முகத்தை நினைத்துக் கொண்டான். “ எல்லாம் என்னவளுக்காக” என்று தன்னைத்தானே சமாதானம் செய்து நடந்தான் அவன்.

“ டீச்சர்.. டீச்சர்” . தனது அறைக்கு சென்று கொண்டிருந்த யாழினி மாணவியின் குரலை கேட்டு திரும்பினாள். “ என்ன சங்கீதா?”

“டீச்சர் உங்க ஹேண்ட்பேக்.. எங்க க்லாஸ்ல விட்டுட்டு போயிட்டிங்க..இந்தாங்க..”

“ ஓ.. தேங்க்ஸ் மா.. நீ க்லாஸுக்கு போ” என்றவள் தன்னையே கடிந்து கொண்டாள். “ ச்ச.. என்ன இது பொறுப்பில்லாமல்.. ? நிதானம் இல்லாமல் எப்படி வேலை செய்ய முடியும் ? இப்போதைக்கு நமக்கு கண்டிப்பா ப்ரேக் தேவை” என்று பேசிக்கொண்டவள், அரை நாள் விடுப்பு எடுத்துகொண்டு வீட்டிற்கு சென்றாள். பேங்க் மேனஜரான மோகன் வேலைக்கு சென்றிருந்ததால் பூட்டிய வீட்டை அவளே திறந்து உள்நுழைந்தாள். அப்போதுதான் அதை கவனித்தாள்.. புகழின் கார் இன்னமும் வாசலில் நின்றது.. அப்படியென்றால் அவனும் வீட்டிலா இருக்கிறான்? அல்லது வெளியே சென்றிருக்கானா? சாப்பிட்டானா தெரியலயே!” என எண்ணிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ஆபத்துக்கு பாவமில்லை..” என்று நினைத்து அவன் பெயரை அழைத்து தேடத் தொடங்கினாள்.

“ புகழ்.. புகழ்… எங்க இருக்க நீ?” . பலமுறை அழைத்தும் பதில் இல்லாத சூழ்நிலை அவன் வீட்டில் இல்லை என்பதை உணர்த்தியது. வின்னென தலை வலி எடுத்தது அவளுக்கு. காஃபியை போட்டுக்கொண்டு தனது அறைக்குச் சென்றமர்ந்தாள். அவள் கண்ணில் பட்டதுநேற்றிரவு அவர்கள் படித்துகொண்டிருந்த அதே டைரி.தற்பொழுது தனக்கும் மாற்றம் தேவை என்பதினால், அதை எடுத்து புரட்ட ஆரம்பித்தாள். தன் நினைவுகளை அசைப்போடத் தொடங்கினாள். அதே நேரம் புகழும் குமரனுடன் பேசிட, தமிழும் நடந்ததைப் பற்றி நினைக்க, நாமும் கடந்த காலத்தை நோக்கி போவோம்..!

(அன்று)

டிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தனர் தமிழும் யாழினியும். யாழினி, வீட்டில் தனதறையில் இருந்தாள். தமிழோ இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தான். இருவருமே எரிச்சலான மனநிலையில்தான் இருந்தனர். யாழினியின் எரிச்சலுக்கு காரணம் சாட்சாத் நம்ம தமிழ்தான்..

ஆனால் தமிழோ யாழினியின் நினைவே இல்லாமல் இருந்தான். அந்த தனியார் மருத்துவமனையில் தமிழ் பணிபுரிய ஆரம்பித்து சரியாய் ஒரு வருடம்தான் ஆகி இருந்தது. எந்த ஒரு புது இடத்திலும் தன்னைப் உடனே தயார்படுத்திகொண்டு சகஜமாகிவிடுவது அவனுக்கு கைவந்த கலை என்பதினால், அந்த மருத்துவமனையில் சுட்டிக்காட்டப்படும் திறமைசாலிகளில் அவனும் ஒருவனாய் இருந்தான்.

அன்றைய தினம், அவனது வேலையுடன் சேர்த்து, ஒரு ரத்ததான முகாம் ஏற்பாட்டிலும் அவனுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்ததால், ஓய்வெடுக்க கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருந்தான் தமிழ். அவ்வேளையில் தான் அவன் யாழினியை சந்தித்தான். தலையும் வாலும் புரியாமல் தன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போனவளை பார்த்ததும் அவனுக்கு கோபம்தான் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.