“ சத்யா, ப்ளீஸ் கண்ணா.. அம்மா சொன்னா கேட்க மாட்டியா?” தனது கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தி மகனைப் பார்த்தார் அவனின் தாயார். அன்னை “ப்ளீஸ்” என்று கெஞ்சியப்பின்னும் கோபத்தை அவனால் எப்படி காட்ட முடியும்? சாப்பிட்டு கொண்டிருந்தவன் பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டான்.
“ சரிம்மா.. உங்க கணவர் தி க்ரேட் ஸ்டார் மிஸ்டர் கௌரவ் வந்தால், என்னை கூப்பிடுங்க.. நான் அவர்கிட்ட பேசனும்” என்றவன் விடுவிடுவென தன் அறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டான்.
சத்யன், பிரபல நடிகர் கௌரவ்- சுலோட்சனாவின் ஒரே மகன். பிரபல நடிகரின் மகன், என்ற அடையாளம் தன்மீது படிந்துவிட கூடாது என்பதில் கவனமாய் இருப்பவன். 21 வயது இளைஞனுக்கென இருக்க வேண்டிய வசீகர தோற்றத்துடன், தந்தையின் சாயலும் அப்படியே இருக்க, இந்த உண்மையை மறைத்து வளர்வது அவனுக்கு மிக கடினம் தான்.
சிகை திருத்த கடைக்கு போகும்போதோ, கடற்கரையிலோ, கோவிலிலோ அவனை பார்ப்பவர்களில் சிலராவது அவனின் பரிட்ச்சயத்தை உணர்ந்துவிடுவார்கள். சிலர் அவனிடம் நேரடியாய் வந்தே
“ நீங்க நடிகர் கௌரவோட சொந்தமா?” என்று கேட்கும்போது அவனுக்குத்தான் தர்மசங்கடமாய் இருக்கும்..இல்லை என்று சொல்லும்போது, மனம் உறுத்தும்.. ஆம் என்று சொன்னால் அடுத்தடுத்த கேள்விகள் அவனை மூச்சு முட்ட வைக்கும்!
“ அவரோட அடுத்த படம் என்ன?”
“ இப்போ எங்க இருக்கார்?”
“ அவருக்கும் அவரது சினிமா நண்பர்களின் உறவு எப்படி?” என சில கேள்விகள் அவனை திணற வைக்க, மேலும் சில கேள்விகளோ அவனை முகம் சுளிக்க வைக்கும்.
“ அவருடைய பையன் எதுக்கு இங்க இருக்கீங்க?”
“ நீங்க எப்போ சினிமாவின் நடிக்க வர்ரீங்க?”
“ உங்கப்பாவுக்கு நிறைய பணம் இருக்காமே.. இண்கம் டெக்ஸ் கட்டுறிங்களா?” என்று கேட்கும்போதெல்லாம் ஒரு சராசரி மகனாய் அவனால் ரசித்திட முடியுமா?
இதைவிட பெரும் சிரமம் அவனது காலேஜ் வாழ்க்கை ! கௌரவ் எவ்வளவோ வற்புறுத்தியும் பிரபலங்களின் வாரிசுகள் படிக்கும் கல்லூரியில் படிக்க மாட்டேன் என்று உறுதியாய் கூறி விட்டிருந்தான் சத்யன். அவன் எங்கே படிக்க வேண்டுமென்பதை அவனே தேர்ந்தெடுத்தான். அப்படியும் கூட, அவன் இதற்கு முன் படித்த கல்லூரியில் அவனது அடையாளம் அனைவருக்கும் தெரிய வந்தது.
அப்படியாய் ஒருநாள் கல்லூரியில், “உனக்கென்னப்பா பெரிய ஹீரோவோட மகன் நீ.. படிப்பே வரலன்னாலும் ஈசியா ஹீரோ ஆகிடலாம்.. உன்னை மாதிரியா எங்கள் வாழ்க்கை?” என்று நண்பன் ஒருவன் பரிகாசிக்க, பிறரும் அதையே ஆமோதிக்கும் விதத்தில் சிரிக்க, அந்த கல்லூரிக்கும் நட்புக்கும் குட் பை சொல்லிவிட்டிருந்தான் சத்யன். அதன்பின் தான், இந்த சூழலில் இருந்து விடுபட, வேறு மாநிலத்தில் படிப்பை தொடர முடிவெடுத்து ஆறு மாதங்கள் நிம்மதியாய் சென்றது.
அந்த கல்லூரியிலும், அவன் தந்தையின் மேனெஜரின் அவசரத்தால், சத்யனின் அடையாளம் அனைவருக்கும் தெரிய வந்தது. இதற்கொரு முடிவு கட்டியாக வேண்டும் என்று எண்ணியப்படி தனது அறையில் குருக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் அவன்.
அவனின் கோபத்தை அறிந்தாலும், எப்போதும் போல முகத்தில் சிரிப்பை ஏந்தியபடி அவன் அறைக்குள் நுழைந்தார் கௌரவ். தோற்றத்தில் சத்யனை விட கொஞ்சம் தான் முதிர்ச்சியாய் தெரிந்தார் அவர்.
“ மை சன்.. ரொம்ப கோபமோ?”
“ ஓஹோ உங்க மேனஜர் அவர் பண்ணதை சொல்லிட்டாரா? அதுதானே பார்த்தேன்.. வீட்டு மனுஷங்களை விட அவர்தானே உங்களுக்கு எல்லாமும்.. உங்கக்கிட்ட நான் பேசனும்னா கூட அவரைத்தானே கேட்கனும்.. !”
“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… சத்யா, நீ புத்திசாலின்னு நான் நம்பினேன்”
“இப்போ உங்க நம்பிக்கை உடையுற அளவுக்கு என்ன கண்டுட்டீங்க?”
“உன் கோபம்.. உன் வேகம்.. இதுதான் என்னை பயப்பட வைக்கிது.. அண்ட் ஐ நோவ்.. என்கிட்ட மட்டும்தான் உனக்கு இவ்வளவு கோபம்.. உன் அம்மாக்கிட்ட இல்லை.. அவக்கிட்ட நீ சிரிச்சு ரசிச்சு கலகலன்னு பேசுறதை நான் பார்த்து இருக்கேன்”
“ அம்மா பாவம்.. அவங்களுக்கு என்னை விட்டா வேற யாரு இருக்கா?”“அப்போ எனக்கு மட்டும்?” ஒரு தந்தையாய் பரிதவிப்புடன் வெளி வந்தது அந்த கேள்வி..
“ உங்களுக்குத்தான் சினிமா இருக்கே அப்பா! எங்களை பத்தி நினைக்க நேரமா இருக்கு உங்களுக்கு? எனக்கு நினைவு தெரிஞ்ச வயசுல இருந்தே என் நல்லது கெட்டதுல அம்மா மட்டும்தான் என்னோடு இருந்துருக்காங்க.. நீங்க இல்லை !”
“ சத்யா!! என் வேலை அப்படிப்பா.. நீ புரிஞ்சுப்பன்னு நான் ரொம்பவும் நம்பினேன்!”