“ சாப்பாடு ரெடிடா..டேய் நான் அன்னைக்கு சொன்னதை பத்தி யோசிச்சியா?”
“அது சரி வராது டா”
“ எனக்கு தான் யாரும் இல்லயே வெற்றி.. தனியாதானே இருக்கேன்.. நீ இந்த வீட்டுலேயே தங்கிக்கோயேன் டா…எத்தனை தடவ இதையே சொல்லுறேன்.. எதுக்கு பிடிவாதம் பிடிக்கிற?”
“ப்ச்ச்ச் அதெல்லாம் வேணாம்.. யாராச்சும் உன்ன பத்தி… வேணாம்டா”
“ நீ எல்லாம் வருங்கால டைரக்டர்ன்னு வெளில சொல்லாத.. இன்னமும் பத்தாம்பசலிதனமா யோசிக்கிற? இதையே தான் உன் படத்துல காட்ட போறியா?”
“ஹேய் இந்த முற்போக்கு சிந்தனை எல்லாம் என் படத்துல இருக்கும்.. என் சிந்தனைகளை நான் படத்துல எக்ஸ்பெரிமண்ட் பண்ணிக்கிறேன்.. உன் வாழ்க்கையில நோ எக்ஸ்பெரிமண்ட்.. உனக்கு வரப்போற புருஷன் நம்ம நட்பை புரிஞ்சுக்கலன்னா?”
“புரிஞ்சுக்காதவன் புருஷனாகவே முடியாது”
“ அதையும் பார்க்கிறேன்..ஹா ஹா”
“என்கிட்ட இளிக்காம, உன் ஆளுக்கூட கடலை போடு போ”
காட்சி 5
தோழிகள் சுற்றி அமர்ந்திருக்க, கண்ணீருடன் வீட்டில் நடந்ததை சொல்லி முடித்தாள் அர்ப்பணா. அவள் கண்ணீரில் மற்ற இருவருமே கலங்கிட, நிரூபணா மட்டும் அவளை அலட்சியமாய் பார்த்தாள்.
“ சினிமால நடிக்கிறது ஒன்னும் ஈசி இல்லடீ..இப்போ என்ன அந்த டைரக்டர் உன்னை ஒரு தடவை பார்த்து தானே உன் அப்பாக்கிட்ட பேசினாரு ? உனக்கு நடிப்பே வரலன்னா அவரால என்ன பண்ணிட முடியும் சொல்லு? எதுவுமே நம்ம கைய மீறி போகல.. பயப்படாதே” என்றாள் சாரா..
“சாரா சொல்றது சரிதான்.. அப்படியே உன் அப்பாவும் முடிவை மாற்ற முடியாமல் போனாலும் ஒரே ஒரு படம் தானே டீ ? ஜாலியாதான் இருக்கும்..தைரியமா இரு.. நீ ரொம்ப பயந்தவளா இருக்க..அதுதான் ப்ரச்சனை ! மத்தபடி நீ பயப்படுற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்ல” என்றாள் ஆரத்யா..
இருவரின் நம்பிக்கையான வார்த்தைகளை கேட்டு பெருமூச்செறிந்தாள் நிரூபணா..அவள் செய்கையில் மூவருமே அவளை பார்க்க,
“ இவளுக்கு வினய், வினய்ன்னு ஒரு வில்லன் காதலனாய் இருக்கானே ! அவனை மறந்துட்டிங்களா?” என்றாள்.
“வினய்” என்று அவனது பெயரை சொன்னதுமே பயத்தில் அர்ப்பணாவின் முகம் வெளிறி போனது. அமைதியான சுபாவத்தினால் அவள் இழந்த உரிமைகளில் அவளின் காதலும் அடக்கம். ரசிக்கும் வண்ணம் சொல்வதற்கு அவளின் காதல் இயல்பாய் பூத்த உறவே இல்லை.. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டாத குறையாய் வினய் அவளை மிரட்ட, வேறு வழியில்லாமல் அவனை காதலிக்க ஒப்புக்கொண்டாள் அர்ப்பணா.. அவளின் தந்தையை போலவே வினயும் அவளை அடக்கி வைக்க பார்ப்பவன் தான்.. தந்தையின் முடிவு தெரிந்தால் வினய் என்ன சொல்வானோ ? அடிவயிற்றில் பயம் பரவிட
“ பேசாமல் நான் செத்துடவா?” என்று அர்ப்பணா கேட்க மற்ற இருவரும் அவளை திட்ட ஆரம்பித்தனர்.. நிரூபணா அவளிடம் ஃபோனை கொடுத்து,
“ இப்போவே அவனுக்கு ஃபோன் பண்ணு.. நடந்ததை சொல்லு..” என்று வற்புறுத்தினாள். வழக்கம்போல அவளின் மறுப்பு அங்கேயும் எடுபடாமல் போக வேறு வழியின்றி வினய்க்கு ஃபோன் போட்டாள்.
“ ம்ம் சொல்லு”
“நான் அர்ப்பணா பேசுறேன்”
“உன் ஃபோன்ல ஒபாமாவா பேசுவாங்க..என்ன சொல்லு” அவன் அதட்டலுக்கு பயந்து தான் போனாள் அர்ப்பணா..ஆனால் வேறு வழி இல்லையே ! ஒருவழியாய் திக்கித் திணறி நடந்ததை சொல்லி முடித்தாள்.
“ இப்போ இதுக்கு நான் என்ன சொல்லனும்?”
“வினய்!!”
“ அறிவு இருக்கா உனக்கு?”
“..”
“இல்ல உங்கப்பனுக்கு தான் அறிவிருக்கா?”
“..”
“அழகா இருந்தா, எவன் கூப்பிட்டாலும் போயிடுவியா?”
“ வினய்!!!!” இப்போது உச்ச்ஸ்தாயியில் கத்தியது நிரூபணா!
“ ஆம்பளன்னா,என்ன வேணும்னாலும் கேட்பியா? உனக்கு தைரியம் இருந்தால், அவ அப்பாக்கிட்ட போயி இதே உரிமையோட மிரட்டு ! அப்படி அவ, அப்பாவை பார்க்க உனக்கு தைரியம் இல்லன்னா, இனி உனக்கு அர்ப்பணா மேல எந்த அதிகாரமும் இல்ல.. அதையும் தெரிஞ்சுக்கோ..இனி நீ அவக்கிட்ட பேசவே முடியாது” என்று ஃபோனை துண்டித்தாள் அவள்.
அர்ப்பணா உட்பட மூவருமே அவளை மிரட்சியுடன் பார்த்தனர்.. அவளின் இந்த பேச்சு தான் பல சம்பவங்களுக்கு காரணமாய் விளங்கியது!
ஹாய் ப்ரண்ட்ஸ் .. ஒரு வழியாய் நம்ம கதாப்பாத்திரங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தியாச்சு..! இப்போது தனித்தனி திசையில் பிரிஞ்சு இருக்குற எல்லாருமே மூனு வருஷத்துக்கு அப்பறம் ஒரே சக்தியால் இணைய போகிறார்கள்.. அந்த சக்தி தான் “சினிமா” !! அந்த சக்தி அவர்களை எப்படி எல்லாம் ஆட்டி படைக்க போகிறது என்ற பயணம் தான் “யார் மீட்டிடும் வீணையிது”.. மூன்று வருடங்களுக்கு பின் நடந்த சம்பவங்களை, அடுத்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம்.
-வீணை இசைந்திடும்-
{kunena_discuss:1055}