02. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி
கடற்கரை சாலையோரம் சீறி பாய்ந்தது அந்த வெள்ளை நிற கார். அன்று பௌர்ணமி இரவு போலும்! வான்மகள் நிலவெனும் காதலனின் பூரண காதலில் திளைத்து பிரகாசமாய் பார்ப்பவர் கண்களை வசீகரித்து கொண்டிருந்தாள். காரின் ஜன்னல் கதவை இறக்கி விட்டு கடற்கரையின் உப்புக் காற்றை ரசித்து கொண்டிருந்தாள் அந்த பெண்.
“ அண்ணா.. காரை நிறுத்துங்க!”
“ஏன்மா? ஷூட்டிங் ஸ்பாட் இது இல்ல.. இன்னும் கொஞ்சம் தூரம் போகனும்..அங்க பாருங்க” என்று ட்ரைவர் கைக்காட்டிய திசையில் கூட்டம் சற்று அதிகமாய் தென்பட்டது. அவரின் பதிலில் சட்டென எரிச்சலுற்றாள் அவள்.
“எனக்கு தெரியாதா அண்ணா? நீங்க என்னை இறக்கி விட்டுட்டு போங்க..நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்” என்றவளின் குரலில் தொனித்த கோபத்தை உணர்ந்தவர் உடனே காரை நிறுத்தினார்.
“ சரிம்மா..கொஞ்சம் சீக்கிரம் வந்துடுங்க.. டைரக்டர் சார்,நான் வெறும் காரோடு வர்றதை பார்த்தா கோபப்படுவாரு. ஏற்கனவே” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே “எனக்கு எல்லாம் தெரியும்.. நீங்க கவலை படாமல் போங்க.. இல்லன்னா இங்கயே வைட் பண்ணுறதுன்னா பண்ணுங்க” என்றவள் அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் இறங்கினாள்.
“ பீச்சுக்கு வந்துட்டு இந்த கண்மணி கால் நனைக்காமல் போயிட்டா, கடல்மாதா மனசு நொந்திட மாட்டாங்களா?” என்று வசனம் பேசிக்கொண்டே கடலை நோக்கி ஓடினாள் அவள். அவள் ஓடிய வேகத்தில் அங்கிருந்த சிலர் அவளையே பார்த்தனர். “தற்கொலை செய்ய முயற்சிக்கிறாளோ” என்ற சந்தேகத்துடன் அவளை கவனித்தனர்.
“ அம்மா… உன்னையும் என்னையும் பிரிக்க பார்க்கிறார் அந்த ட்ரைவர் ..என்னன்னு கொஞ்சம் கேட்டு வை!” என கடலன்னையிடம் கட்டளையிட்டாள் கண்மணி. செயற்கை வாழ்வியலில் மூழ்கி போயிருக்கும் மாந்தர்களில் இன்னமும் தன்னை உண்மையான அன்போடு தன்னை நாடி வரவும் ஜீவன் இருக்கிறதே என்ற சந்தோஷத்தை கடலன்னை அலைகளால் அவளின் பாதத்தை முத்தமிட்டு கொண்டிருந்தார். அந்த திவ்யமான சூழ்நிலையில் தன்னை தொலைத்தவளாய் கண்மூடி நின்று கொண்டிருந்தாள் கண்மணி. அவளின் கவனத்தை கலைக்கவே அவளின் செல்ஃபோன் சிணுங்கவும், “ வந்தாச்சு மம்மி அடுத்த டாச்சர்” என்று கூறி கொண்டே அவளை ஃபோனை எடுக்க திரையில் “ டைரக்டர்” என்ற பெயரை பார்த்ததுமே அவள் கண்களில் மரியாதை கூடியது. உடனே ஃபோனை எடுத்தாள்.
“ ஹலோ சார்”
“ ஏம்மா, எங்க போயிட்டீங்க ரெண்டு பேரும்? இங்க எல்லா வேலையும் நானே பார்த்து முடிச்சிடவா? உங்களுக்கும் ஏதும் சேவை செய்யனுமா?” காட்டமாய் ஒலித்தது அவரின் குரல். அவரின் கோபம் அவளுக்கு முதல் அதிர்ச்சியெனில், வெற்றி அங்கு இல்லை என்பது அவளுக்கு இரண்டாம் அதிர்ச்சி.!
“அய்யோ சார்.. நோ கோபம்..நீங்கதானே சொல்லுவிங்க செய்யுற வேலையை பிடிச்சு செய்யனும்னு? சொல்லிட்டு நீங்களே கோபமா வேலை பார்க்கலாமா? இதோ வந்துட்டோம்.. நான் உங்களை பார்த்துட்டேன் இதோ” என்று பேசி ஃபோனை வைத்தவள் கண்ணெதிரில் இருந்த அந்த கூடத்தை நோக்கி மூச்சிரைக்க ஓடிவந்தாள்.
அன்றைய காட்சி பதிவில் செயற்கை மழை தேவை என்பதினால், அதன் ஏற்பாடு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. நடிகர்களுக்கான கேரவன் ஒரு பக்கம் நிற்க, அங்கு பார்வையை செலுத்தியவள் “ச்ச வழக்கம் போல லேட்’ என்று முணுமுணுத்தாள். பார்வையால் அங்கு நடப்பது அனைத்தையும் கவனித்தவள் பதட்டமாய் நின்று கொண்டிருந்த கமலை நோக்கி ஓடினாள். கமல், ஒளிப்பதிவு பிரிவில் உதவியாளராய் இருக்கிறான். வெற்றி, கண்மணி இருவரையும் விட வயதில் இளையவனாய் இருப்பதினால் அவன் மீது அவர்களுக்கு தனி பாசம், அக்கறை.
“ கமல்” என்று சத்தமாய் அழைத்தவள் யூனீட்டில் இருந்த சிலர் தன்னை பார்ப்பதை உணர்ந்து இயக்குனரின் பார்வையில் படாமல் அவனை இழுத்து கொண்டு மறைவில் நின்று கொண்டாள்.
“ கமல்”
“அக்கா”
“எங்கடா உன் அண்ணன்.. இன்னைக்கு என்ன ட்ராமா பண்ணுறான் அவன்? இந்த ஷூட்டிங் ஸ்பாட்ல ஓடி ஓடியே நான் இளைச்சுருவேன் போல” என்று மூச்சு வாங்க பேசினாள் அவள்.
“ ஐட்டம் சாங்குக்கு நான் உதவி செய்ய மாட்டேன்.. நான் இல்லாம பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு அங்க உட்கார்ந்து சுண்டல் சாப்பிடுறாரு பாருங்கக்கா” என்று அவன் கைக்காட்டிட
“ நான் பார்த்துக்குறேன்.. நீ கொஞ்சம் சமாளி” என்றவள் மீண்டும் ஓடி போய் வெற்றியின் அருகில் தொப்பென அமர்ந்தாள்.
“ஹேய் வா கண்ணு.. இப்போத்தான் வந்தியா?”
“ம்ம்ம்ம் …இல்லைடா காலையிலேயே வந்துட்டேன்”
“ ஒஹோ அப்பறம் என்ன விஷயம்?”
“விஷயமா?” என்று பற்களை கடித்தபடி முறைத்தவள்,