“ அது உன் திறமைக்கு கிடைச்ச அங்கீகாரம் கண்ணா..இந்த மூனு வருஷத்துல எவ்வளவு மாற்றங்கள் ? நீ எத்தனை பேருக்கு அபிமானவன்னு தெரியுமா உனக்கு?”
“ விட மாட்டிங்களே .. இப்போ என்ன நான் கிளம்பனும் அவ்வளவு தானே? இந்த மருந்தெல்லாம் கரெக்டா சாப்பிடுங்க.. கிளம்புறேன்” என்றான் சத்யா பிடிவாதமாய். மகனின் அன்பில் நெகிழ்ந்தது தாயுள்ளம். அவனை சீக்கிரமாய் அனுப்பவேண்டும் என்பதற்காகவே மாத்திரைகளை வேகமாய் சாப்பிட்டார் சுலோட்சணா..
“ சந்தோஷமா?”
“ ம்ம்ம்..ரொம்பவே..நான் வரேன்மா.. “ என்றவன் தெய்வமாய் மாறிவிட்ட தனது தந்தையின் புகைப்படத்தின் முன் சிறிது நேரம் கும்பிட்டு விட்டு அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“வரேன்மா”
“ உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் கண்ணா”
“ ஏன் மாமியார் மருமகள் சண்டை போட ஆசை வந்துருச்சா? “
“ஒரு வாட்டி அர்ப்பணாவை வீட்டுக்கு கூட்டிட்டு வா டா” அவள் பெயரை கேட்டதுமே கண்கள் மின்னிட பெரிதாய் புன்னகைத்தான் சத்யன்.
“ என்னம்மா கிசுகிசு எல்லாம் அதிகமாய் படிச்சு நம்ம ஆரம்பிச்சுட்டிங்க போல?”
“ச்ச அப்படி இல்லடா.. பாவம் அந்த பொண்ணு.. போன வாரம் அவளோட இண்டர்வியூ பார்த்தேன்.. பார்த்ததுல இருந்து அந்த பொண்ணு கண்ணுக்குள்ளயே நிற்கிறாள்”.. அன்னையின் வார்த்தைக்கேட்டு மந்தகாசமாய் புன்னகைத்தான் சத்யன்.
“அவதானே? ம்ம் நிப்பா நிப்பா.. ரெண்டு கண்ணுலயும்” என்று கண்ணடித்துவிட்டு வெளியேறினான்.. வாசலை தாண்டியதுமே அவன் முகத்தை கடுமை படர்ந்தது. வழக்கமாய் அணியும் கருப்பு கண்ணாடியை மாட்டிக் கொண்டு வீட்டை ஒருமுறை கண்காணித்தான். தனக்கென பெர்சனல் மேனஜரையோ, ட்ரைவரோ நியமிக்கவில்லை அவன்.. சற்றுமுன் அன்னையுடன் பேசியது இன்னும் நினைவில் நிற்க, அர்ப்பணாவை முதன்முறையாய் பார்த்த நாளை எண்ணி கொண்டான் சத்யன். காரில் சூழ்ந்திருந்த இருள் அவனது புன்னகை வெளிப்படுவதற்கு உதவியாய் அமைந்தது.
பிரபல ஸ்டார் கௌரவின் வாரிசாக சத்யன் நடிக்க வேண்டிய முதல் படத்தின் முதல் காட்சி அது. பொழுதுபோக்குக்காக கூட ஷூட்டிங் பக்கம் தந்தையுடன் போனதில்லை அவன். அதனால் அங்கு நடக்கும் அனைத்தையும் பார்வையால் அளந்து கொண்டிருந்தான். மனதில் கொஞ்சமாய் தயக்கம் இருந்தாலும் அதன் சாயலை கொஞ்சமும் வெளிக்காட்டாமல் இருந்தான் அவன்.
அது ஒரு திகில் படம். சத்யனும் அர்ப்பணாவும் இணைந்து நடித்த ஒரே படம். ஆனால், அந்த ஒரு படம் முடிவதற்குள் இருவரும் அதிகமாகவே கிசுகிசுக்கபட்டனர்.
அன்று முதல் காட்சியின் கதைப்படி, அந்த வீட்டினுள் திகிலுடன் அர்ப்பணாவும் சத்யனும் எதிரெதிர் திசையில் இருளில் நடந்துவர வேண்டும் என்று உதவி இயக்குனர் சொல்லி இருக்க, அது போலவே இருவரும் நடித்து கொண்டிருந்தனர். கும்மிருட்டில் இலக்கே இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் அர்ப்பணா. அந்த சூழ்நிலையே அவளுக்கு ஒரு மாதிரியான பயத்தை கொடுக்க,நடுக்கத்துடன் நடந்தாள் அர்ப்பணா. இயக்குனருக்கோ தான் எதிர்ப்பார்த்ததை போலவே அவள் முகத்தில் தோன்றிய எதார்த்தமான உணர்வுகளை கண்ட மகிழ்ச்சி.. இருட்டில் தள்ளாடி நடந்தவள், தன்னெதிரே ஆறடி உயரத்தில் ஓர் உருவத்தை திடீரென பார்க்க
“ஆ” என்று அலறியபடி அவன் கைகளிலேயே பூமாலையாய் விழுந்தாள். “கட்” என்ற இயக்குனரின் எரிச்சலான குரலில் சத்யனும் நிகழ்காலத்திற்கு வந்திருந்தான்.
அவனை கேள்வி கேட்கும் தைரியம் அந்த யூனிட்டில் யாருக்குமே இல்லை. அவனின் அணுகுமுறை அப்படி.. எனினும் ரசிகர்கள் மத்தியில் அவன் சூப்பர் ஹீரோ என்ற ஸ்தானத்தை பெற்றதினால் வாய்ப்புகள் எனும் கதவு அவன் விரல் ஸ்பரிசத்துக்காக காத்திருந்தன.வழக்கம் போல இயக்குனர் வெற்றியிடம் ஜாடை காட்டிட, சத்யனை நோக்கி ஓடினான் அவன். அடுத்த மூன்று மணி நேரம் இயந்திரம் போல ஓடிக் கொண்டிருந்தனர் அனைவரும்.
ஒருவழியாய் அன்றைய படப்பிடிப்பு இனிதே முடிந்தது. இயக்குனரிடம் மட்டும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கிளம்பியிருந்தான் சத்யன். ஒவ்வொரு யூனிட்டிலும் ஒவ்வொருவராய் கிளம்ப ஆரம்பிக்க இயக்குனரிடம் பேசிக்கொண்டிருந்தனர் கண்மணியும் வெற்றியும்.
“ சீக்கிரமே படம் முடிய போகுது.. அடுத்த ஸ்க்ரிப்ட் ரெடி ஆகிட்டு இருக்கு.. ஆனா வெற்றி அந்த படத்துக்கு நீ அசிஸ்டண்ட் இல்லை” என்றார் அவர் கறாரார்.
“ என்னாச்சு சார்?”
“ என்ன என்னாச்சு சார் ? மூனு வருஷம் ஆச்சுடா நீ என்கிட்ட ஜாய்ன் பண்ணி.. அடுத்த தடவை உன் பெயரை நான் டைரக்டர்ன்னு தான் பார்க்கனும்”
“ சார்.. இது அவ்வளவு சீக்கிரம் சரி ஆகுமா தெரியல?”