(Reading time: 12 - 24 minutes)

யாத்ரீகா தலைகுனிந்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் செல்வதையே ஏக்கத்தோடு பார்த்தவர்,குனிந்து தான் அணிந்திருந்த உடையை பார்த்தார்.

அதில் ஒரு பெண்ணின் கேசம் அலங்கரிக்கும் ஆபரணம் ஒன்று சிக்கி இருந்தது.

"எவ்வாறு இது வந்தது?"-என்று சிந்தித்தப்போது ஊகித்துக்கொண்டார்.அஸ்வம் மீது ஏறிய சமயம் தான் இதன் காரணம் என்று!!ஒரு புன்னகையோடு அதனை தன் கரத்தினில் புதைத்தவர் கோட்டையை நோக்கி புறப்படலானார்.

குளக்கரையைவிட்டு சில தொலைவு ஓடியவளை,"சகி!"என்ற குரல் தடுத்தது.

பதற்றத்தோடு அவளருகே ஓடி வந்தாள் பிருந்தா!

"நீ எங்கு சென்றாய்?உனை நான் எங்கெல்லாம் தேடினேன் என்பதை அறிவாயா!மிகுந்த அச்சம் கொண்டேன்!எங்கு சென்றாய் நீ!"-யாத்ரீகா ஏதும் பேசாமல் மௌனித்தாள்.

பதற்றத்தில் தனது ஆருயிர் தோழியை அணைத்துக் கொண்டாள் பிருந்தா!!

"அரண்மனையில் இருக்கும் உன் தந்தைக்கு இச்செய்தி சென்றிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்!"-பிருந்தா பேசியப்படி இருக்க,அவளது கவனமோ எங்கோ இருந்தது.

தன்னிச்சையாக யாத்ரீகாவிடமிருந்து புன்னகை வெளியானது!!அந்தப் புன்னகையில் மறைந்திருந்த நாணத்திற்கு காரணம் தான் யார்??

"என்ன நேர்ந்தது உனக்கு?ஏன் மௌனம் சாதிக்கிறாய்?"

"இல்லை..எனக்கு ஒன்றும் நேரவில்லை!களைப்பாக உணர்கிறேன்!இல்லம் செல்லலாம் வா!"

"ஆகட்டும்!விரைந்து வா!"-தன் தோழியோடு நடந்தவள்,ஒருமுறை திரும்பி யாரையோ அல்லது எதையோ தேடினாள்.

எண்ணிய தேடல் கரம் சேராததால்,அவள் முகம் ஏமாற்றத்தை வெளியிட்டது.

"நீங்க இன்னும் தூங்கலையா?"-யாத்ராவின் குரல் செவிகளில் விழ திடுக்கிட்டு அப்புத்தகத்தை மூடினான் ஆதித்யா.

"அது..நான்!!"

"ராத்திரி ரொம்ப நேரம் முழிக்காதீங்கன்னு எத்தனைமுறை சொல்றது!என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"-அவள் குரலில் சிறு கோபம் தெரிந்தது.

அவள் அருகே வருவதற்குள்,ஆதித்யா அவள் முன் சென்று நின்றான்.

"அது!தூக்கமே வரலை செல்லம்!"

"ஏன்?என்னாச்சு?"

"உன்னால தான்!"

"நீங்க தூங்காம என் மேலே பழி போடாதீங்க!போங்க!போய் தூங்குங்க.."

"கொஞ்ச நேரம் ஹனி!"

"இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேணாம்!போங்க!"-அவனோ அவள் பேச்சை கேட்பதாக இல்லை.

அவளை சமாதானம் செய்ய வேறு ஆயுதத்தை அவன் கரம் ஏந்த நேர்ந்தது.

அவள் மிரட்டியப்படி இருக்க,சட்டென அவள் கன்னத்தை பற்றினான் ஆதித்யா.அதுவரை பேசியப்படி இருந்தவள் சட்டென அமைதியானாள்.

"ஐ லவ் யூ ஹனி!"-அந்த வாக்கியத்தில் அவளது இறுக்கம் தொலைந்துப் போனது!!

முகத்தில் சிறு நாணம் குடிக்கொள்ள,அவள் மௌனமானாள்!!

"இப்போ என்ன நான் தூங்கணும் அவ்வளவு தானே!வா!வந்து தூங்க வை!"-என்று அவள் மெத்தையில் அமர வைத்து,அவள் மடிமீது சிரம் சாய்த்துக் கொண்டான்.

ஒவ்வொரு ஆணின் அதிகப்பட்ச ஆசையும் இது என்றே கூறுகிறார்கள்!!தன் மனதிற்கு பிரியமானவளின் அன்பு எந்நிலையிலும் மாறாமல் சம அளவினதாய் இருக்க வேண்டும் என்பதே அனைத்து ஆண்களின் எண்ணமாம்!!துன்பம் வரும்போதும் இன்பத்தில் திளைத்திருக்கும் போதும்,பொய் கூறும்போதும்,மறதியின் போதும் எந்நிலையிலும் அவளிடமிருந்து கோபம் வெளிப்பட்டாலும் அதில் காதலும் கலந்திருக்க வேண்டும் என்பதே ஒரு ஆணின் அதிகப்பட்ச வேண்டுதல்!!ஒரு பெண்ணின் அன்பு எந்த அளவு பவித்ரமானதோ அதற்கு துளியும் சளைத்ததல்ல ஒரு ஆணின் அன்பு!!அதனை விளக்கும் ஒரே சாட்சி அவன் சிலநேரம் வெளிப்படுத்தும் உரிமை குடிக்கொண்ட கோபம் நிறைந்த காதலே!!!

மனதின் காதலானது பெருக்கெடுக்க அவனது செய்கைகள் யாவும் ரசனை மிகுந்த ஒன்றாகவே தோன்றியது அவளுக்கு!!

அவளது விரல்கள் அவனது கேசத்தை கோதியவண்ணம் இருந்தது.

இத்தனை வருடங்கள் ஆகியும் அவனது காதல் தனது எல்லையை தாண்டாமல் கண்ணியமாக அவளுக்கு பாதுகாப்பை நல்குகிறது என்பதே அந்தக் காதலின் ரகசியத்தினை,அவனது அன்பினை,அவனது ஆண்மையை அவளுக்கு விளக்கியது.அவன் அதிகப்பட்சமாய் அவளிடம் யாசித்தது அவனது தாயின் மற்றொரு புதல்வியை மற்றும் அவனுக்கான அடுத்த தாய்மையை அவ்வளவே!மற்றப்படி,எந்த ஒரு எண்ணமும் அவன் இதயத்தை வியாபிக்கவில்லை.

இறைவனால் அளிக்கப்பட்ட ஆண்மை என்னும் பண்பு!ஒரு ஸ்திரியை பாதுகாப்பதற்காகவே அன்றி பலவந்தப்படுத்த அல்ல என்னும் நிதர்சனம் தன்னை அவன் நன்றாக உணர்ந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.