இரவு..
எல்லாரும் உறங்கி விட்டிருக்க அபர்ணாவுக்கு மட்டும் உறக்கம் கிட்டவே இல்லை. இன்னமும் அவளிடம் பேசி இருக்கவில்லை அருண்.
அருண்!!! அவனுடன் பழக ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் இருக்கும். அப்படி ஒன்றும் கண்டவுடன் காதல் எல்லாம் இல்லையே இது??? இருவரும் பேசி பழகிய பிறகு மலர்ந்ததுதானே இது??? அப்போது புரியவில்லையா அவனுக்கு என்னை பற்றி??? என் பழக்க வழக்கங்களை பற்றி???
அவளது மனதின் ஒரு பகுதி அவனது அழைப்பையே எதிர்ப்பார்த்திருந்தாலும் இன்னொரு பகுதி கொஞ்சம் விழித்து பார்த்து கேள்வி கேட்டது.
முதலில் ஒரே அலுவலகத்தில் பணி புரியும் சாதாரண நண்பர்களாக இருவரும் பழகி வந்தாலும், அவனது அம்மாவுக்கு உடல் நலம் இல்லாமல் போன போதுதான் அவனுடன் அதிகமாக பழகும் சந்தர்ப்பம் வந்தது அவளுக்கு.
திடீரென்று அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட, அந்த சூழ்நிலையில் வீட்டில் பெண் துணை என யாரும் இல்லாமல் போக, அவர்களது உறவினர்கள் வரும் வரை முதல் இரண்டு மூன்று நாட்கள் அவனது அம்மாவுக்கு இவளே துணை இருந்தாள்.
அவரது வலியையும் வேதனையும் குறைக்க இவளால் முடிந்ததை செய்து, அவருடனே இரவும் பகலும் இருந்து..
'யூ ஆர் சோ ஸ்வீட் அபர்ணா...' என்றான் அருண்.. 'நீ பேசாம என்னை கல்யாணம் பண்ணிட்டு என்னோடவே வந்திடேன் எங்க வீட்டுக்கு... .உன்னை மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்..' சொல்லியும் விட்டான் அவன்.
உடனே ஒப்புக்கொண்டு விடவில்லை இவள். ஏனோ மறுக்கவும் தோன்றவில்லை.
'என் கல்யாணத்தை பத்தி நான் இன்னும் யோசிக்கவே இல்லை. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்...' என்றாள் அபர்ணா.
'ஷூர்.. சீக்கிரம் நல்ல முடிவா சொல்லு...' என்றான் அவன்.
அதன் பிறகே அவனை அதிகமாக கவனிக்க துவங்கினாள் அவள். அவனுக்கு எல்லாமே அவனது அம்மா. அலுவலகத்தில் இருக்கும் போது மூன்று முறையாவது அழைப்பான் அம்மாவை. அவன் அம்மாவை அவன் நடத்தும் விதமும், அவர் மீது அவன் வைத்திருக்கும் அன்பும்தான் அவளை முதலில் ஈர்த்தது. அவளது அண்ணன் கூட அவளது அம்மாவை இப்படி எல்லாம் தாங்கி அவள் பார்த்ததில்லை. கொஞ்சம் வியப்பாக இருந்தது. அவனது குடும்பமும் அவளுக்கு பிடித்து போனது.
மெது மெதுவாக மனதளவில் அவனுடன் நெருங்கி அவனை ரசிக்க ஆரம்பித்திருந்தாள் அபர்ணா. இவள் அவன் காதலை ஏற்றுக்கொண்ட சில நாட்களிலேயே இது போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பித்திருந்தன. அவன் நினைக்கும் படியெல்லாம் இவள் இருக்க வேண்டும் என நினைக்கிறான் அவன். இவளும் தன்னால் முடிந்ததை செய்த்தான் முயல்கிறாள்.
'அவன் தன் அம்மாவை நடத்தும் விதமும் என்னை நடத்தும் விதமும் வேறு வேறாகதத்தான் இருக்கிறது...' ஒரு பெருமூச்சு எழுந்தது அபர்ணாவுக்கு. 'எது எப்படி என்றாலும் மனம் முழுவதும் நிரப்பி வைத்திருக்கிறேன் அவனை!!! என் வாழ்கை அவனுடன்தான் அமைய வேண்டும்!!! பார்க்கலாம். திருமணதிற்கு பின் மாறக்கூடும் அவன்' யோசித்தபடியே உறங்க முயன்றாள் அவள்.
இரண்டு நாட்கள் கடந்திருக்க...
அஸ்வினியின் உடல் நலம் கொஞ்சம் தேறி இருந்தது. அன்று காலையில் அவளுக்கு டிஸ்சார்ஜ். அவள் பெங்களூரில் தங்கி இருப்பது ஒரு ஹாஸ்டலில். அதனால் மருத்துவமனையில் இருந்து நேராக பரத் வீட்டுக்கு செல்வதாக முடிவாகி இருந்தது.
'ரெண்டு நாள் நம்ம வீட்டிலேயே தங்கிடுங்க அங்கிள். அஸ்வினியும் ரெஸ்ட் எடுக்கட்டும்.' பரத் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை அவள் அப்பா.
'இல்லபா. பிளைட்லே ஊருக்கு போயிடறோம். இவ அம்மா இத்தனை நாள் இவளை பார்க்காம இருந்ததே ஜாஸ்தி. பாவம் அங்கே தவிச்சிட்டு இருக்கா...' என்றார் அவர்.
கடைசியில் அன்று இரவு விமானத்தில் டிக்கெட்டுகளை புக் செய்திருந்தான் பரத். காலையில் பரத் மருத்தவமனைக்கு வந்து அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்வதாக ஏற்பாடு.
அன்று காலையில் திடுக்கென விழித்துக்கொண்டாள் மருத்துவமனையில் உறங்கிக்கொண்டிருந்த அபர்ணா. உடல் முழுவதும் வியர்த்து போயிருந்தது அவளுக்கு. அருகில் உறங்கிக்கொண்டிருந்தாள் அஸ்வினி.
'கனவா??? இது என்ன இப்படி ஒரு கனவு??? வேண்டாம் இது பலித்து விட வேண்டாம். இறைவா இது வேண்டாம்.' படபடத்தது அவள் உள்ளம்.
பாத்ரூமுக்குள் நுழைந்து தண்ணீரை முகத்தில் அள்ளி அள்ளி அடித்துக்கொண்டாள். வந்தது கனவு போலவே தோன்றவில்லை. ஏதோ கண் முன்னே நடந்ததை போல்.... குலை நடுங்கியது அவளுக்கு.