வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 10 - வத்ஸலா
உள்ளுக்குள் ஏதோ ஒன்று நெருடுவது போன்ற உணர்வில் சற்றே விலகி அமர்ந்தான் விஷ்வா. ஒரே நிமிடத்தில் அவன் முகத்தில் நிகழ்ந்த பலவித மாற்றங்களை படிக்க தெரியாதவள் இல்லை இந்து. ஆனால் எதனால் இந்த மாற்றம் என்பது தான் அவளுக்கு புரியவில்லை.
வெகு இயல்பாக அவளது ரிப்போர்ட்ட்டுகளை ஆராயும் பாவனையில் எழுந்து அவளை விட்டு மெல்ல விலகினான் விஷ்வா.
'என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் நான்??? என்ன முட்டாள்தனம் இது??? நேற்று பார்த்து இன்று காதலா??? எப்படி அவளுடன் இப்படி நெருங்கி அமர்ந்திருக்கிறேன்!!! தேவை இல்லாமல் அந்த பெண்ணின் மனதிலும் ஆசை விதைகளை தூவிக்கொண்டிருக்கிறேன்!!!' அருண் இவளது அண்ணன் என்றால்.... இது எதுவும் சரியாக வராதே!!!'
யோசித்துக்கொண்டிருந்தவனின் பார்வை பெயரளவில் அவளது ரிப்போர்ட்ட்டுக்களை மேய்ந்துக்கொண்டிருந்தது.
அன்று அபர்ணா என்ற பெயரை சொன்னதும் சட்டென தனது இத்தனை நாள் தவத்தை மறந்து 'விஷ்வா...' என்றழைத்த பரத்தின் நினைவுகள் அவனை உறுத்தின.
'முதலில் சரியாக வேண்டியது பரத்தின் வாழ்க்கை. அதன் பிறகே என்னுடைய சந்தோஷங்களை பற்றி நான் யோசிக்க வேண்டும். இப்போது இதெல்லாம் வேண்டாம்!!!'
இதனிடையில் அம்மாவின் முகமும் கண்முன்னே வந்து போனது.
'சரியாகட்டும். முதலில் எல்லாம் சரியாகட்டும்!!! முடிவு செய்துக்கொண்டவனாக தீர்கமான சுவாசத்துடன் நிமிர்ந்தான் விஷ்வா.
கொஞ்சம் தவிப்பேறிய கண்களுடன் அவள் அவனை பார்க்க இந்த பார்வையை எப்படி சமாளிக்க என்று சில நொடிகள் தடுமாறித்தான் போனான் அவன்.
'இவளை பார்த்தால் மனமே எனக்கு கட்டுப்பட மறுக்கிறதோ???' இல்லை இது சரி இல்லை!!!' இனி அடிக்கடி அவள் முன்னால் வருவதை தவிர்க்க வேண்டுமென்றே தோன்றியது அவனுக்கு.
'உங்க அம்மாக்கு உனக்கு அடி பட்டிருக்குன்னு சொல்லிட்டியாமா??? என்றான் நிதானமான குரலில்
அவள் சொன்னதில் இருந்து அவளுடைய அம்மா வந்துக்கொண்டே இருக்கிறார் என புரிந்தது.
'ஃபைன்... நான் அப்புறம் வரேன்.....டேக் கேர் .' அவள் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு நகர்ந்திருந்தான் அங்கிருந்து!!!.
இரவு நேரம் ஒன்பதை தாண்டி இருக்க..
வீட்டுக்கு கிளம்பி இருந்தான் விஷ்வா. அவளை பார்க்காமல்!!! அவள் அறைக்குள் செல்லாமல்!!!
'முடியும்!!!! முடியணும்!!! ஆட வைப்பேன்!!! கவலைப்படாதே' நேற்று அழுத்தம் திருத்தமாக சொன்னேனே. இப்போது என்ன செய்வது??? யோசித்தவனின் கை தன்னாலே அந்த எண்ணை அழுத்தின.
அது டாக்டர் புவனா!!!
அவனுடன் அதே மருத்துவமனையில் பணி புரியும் ஒரு மருத்துவர்தான் அவள். வயதில் அவனை விட ஐந்து ஆறு வருடங்கள் மூத்தவள்!!! கொஞ்சம் சீனியர் டாக்டர். சராசரி உயரத்தை விட சற்றே உயரமாக இருப்பாள் புவனா. அவள் அணியும் காட்டன் சேலையும் அவளது மூக்கு கண்ணடியுமே அவளுக்கு தனி கம்பீரத்தை கொடுக்கும்..
அவனை அவள் டாக்டர் என்று அழைத்ததாக சரித்திரமே கிடையாது. எப்போதும் விஷ்வாதான்!!!
சரியாக சொல்ல வேண்டுமென்றால் டாக்டர் புவனா என்றால் விஷ்வாவுக்கு கொஞ்சம் மரியாதை கலந்த பயம்தான். ஆனால் அதே நேரத்தில் அவள் மீது விஷ்வாவுக்கு நம்பிக்கையும் அதிகம். அவன் இல்லை என்றால் இந்துவிற்கு புவனாவே சரியான மருத்துவர் என்று தோன்றியது அவனுக்கு.
'அது எப்படியோ புவனா டாக்டர் கை பட்டாலே நமக்கு எல்லாம் சரியாகிடுது,,,; இப்படி நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கிறான் விஷ்வா.
'டாக்டர் ... லீவ் முடிஞ்சு எப்போ ஜாயின் பண்றீங்க..' கொஞ்சம் தயக்கத்துடனே கேட்டான் விஷ்வா.
'ரெண்டு நாள் வீட்டிலே அம்மா கையாலே சாப்பிட்டு தூங்கிட்டு வரலாம்னு பார்த்தா... நிம்மதியா இருக்க விட மாட்டியே நீ. என்ன பிரச்சனை???' புவனா கேட்க...
எப்போதும் தான் அணிந்திருக்கும் கண்ணாடியை சற்றே கீழிறக்கி கோபத்துடன் அவனை ஊடுருவும் புவனாவின் கண்கள் கண் முன்னே வந்து போல் இருந்தது விஷ்வாவுக்கு.
'இல்லை டாக்டர்... அது...'
'அதான் இல்லை இல்ல நான் போனை வைக்கிறேன். நிம்மதியா கார்டூன் பார்க்க விடு விஷ்வா. எப்போ பாரு, கட்டு, சுத்தியல், எக்ஸ்ரே..... .முடியலை என்னாலே ..'
'டாக்டர் ப்ளீஸ்... ஒரு பேஷன்ட்... எனக்கு கொஞ்சம் வேண்டப்பட்டவங்க... அவங்களை நீங்க கொஞ்சம். பெர்சனாலா அட்டென்ட் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும்...'
'ஹேய்..... உனக்கு வேண்டபட்டவங்கன்னா நீ பார்க்க வேண்டியது தானே மேன்??'