மூங்கில் குழலானதே – 16 - புவனேஸ்வரி
வேகம்! மனிதனை தன் வசம் இழுத்துக் கொண்டு போகும் தேர் தான் வேகம். மனிதன் என்பவன் கிடைக்கபெற்ற வாழ்வியலை உணரும் சக்தி கொண்டவன். உணர்ந்ததை பயன்படுத்த தெரிந்தவன். பயன்படுத்தியதை மேலும் எப்படி மேலும் மேம்படுத்தலாம் என்று யோசித்து அதையும் செயல்படுத்த தெரிந்தவன்.
காலமும் காலம் தந்த மாற்றமும் மனிதனின் வாழ்வியலை பெரிதும் மாற்றியுள்ளது. இம்மாற்றங்களுக்கு அஸ்திவாரமாக அமைந்த குணங்களில் ஒன்று தான் பொறுமை.
விலங்குக்கும் இல்லாத பொறுமை மனிதனிடமுண்டு. பொறுமையே மனிதனின் தனித்துவம் எனலாம். ஆனால் வெற்றிகளை ஈட்டத் தொடங்கும் மனிதனை வேகம் என்ற சக்தி ஆட்டிப்படைக்க தொடங்குகிறது. மனிதன் தனது இயல்பினையும் மீறி ஒரு ஓட்டப்பந்தயத்தை உருவாக்கி ஓட ஆரம்பித்தான்.
இன்று வாழ்வில், அனுபவிக்க வேண்டிய சின்னஞ்சிறு சந்தோஷங்களைக் கூட ரசிக்காமல் மனிதன் என்ன சுகம் கண்டுவிட போகிறான்? வேகம் எனும் சாரதி, வாழ்வெனும் தேரை செலுத்திச் செல்லும் பாதை அழிவுக்கா? அல்லது செழிப்பிற்கா? சிந்திக்கிறேன் சகிதீபன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு வரிசையில் நின்று கொண்டிருந்தாள் மைத்ரேயி. மிக பொறுமையாய் ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தாள் அவள். யார் முகத்திலும் புன்னகை இல்லை! மலர்ச்சி இல்லை!
பல்லாயிர செல்களினால் உயிர்பெற்ற உயிரினம் மனிதன். எந்தவொரு ஆராய்ச்சியாலும் முழுமையாய் இயக்கி வைத்துவிட முடியாத பேரதிசயம் மனித உடல். படிப்பு, பண்பு, அனுபவம் என்று மனிதன் தன்னை மேம்படுத்திக் கொண்டே தான் இருக்கிறான்.
அப்படிப்பட்ட மனிதன் எத்தனை சக்தி மிகுந்தவனாக இருக்க முடியும்? ஆனால், ஒரு சொல்லோ, செயலோ, மாற்றமோ ஏன் அவனது சந்தோஷத்தை உடனே பறித்து விடுகிறது?
புரியவில்லை அவளுக்கு. சந்தோஷம் என்பது தங்கு தடையின்றி பாயந்து ஓட வேண்டிய நதிதானே?
“ஹும்கும்!!” என்று அழுத்துக் கொண்டு அவள் பாடலை ரசிக்க ஆரம்பித்தாள்.
அதே இடத்தில், தான் இருந்தான் சகிதீபன். பின் வரிசைகளில் நின்று கொண்டிருப்பவர்கள் ஏதாவது உதவி தேவைப்படுகிறதா? என்று கண்காணித்துக் கொண்டிருந்தான். வயதானவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் தந்துவிட்டு வழக்கமான சிலமொக்கை ஜோக்குகளை சொல்லி அவர்களை இலகுவாக்கிடும் பெரும் பொறுப்பை கையில் ஏற்றிருந்தவன், அப்போதுதான் அங்கு காரசாரமாய் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் பார்த்தான்.
“ஹலோ சார்.. எல்லாருக்கும் தான் அவசரம்.. அதுக்காக இப்படித்தான் வார்த்தைய விடுவீங்களா?”
“ நான் என்ன பேசினா உனக்கு என்ன வந்துச்சு ? உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போ” என்று தன்னிடம் பேசிய மைத்ரேயியை பார்த்து யாரோ ஒருவன் கத்திக் கொண்டிருந்தான்.
“ வயசானவரை பார்த்து சாகுற வயசுல உனக்கிது தேவையான்னு கேட்குற?வெட்கமா இல்லையா?” என்று பதிலுக்கு மைத்ரேயி குதிக்கவும், அங்கிருந்தவர்களின் பார்வை அவர்களது மீதுதான் இருந்தது.
“கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரில் காண்கிறேன்!
கதைகளிலே கேட்ட பெண்ணா? திரும்ப திரும்ப பார்க்கிறேன்!
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து தேங்குதே!
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே” என்று சகிதீபனின் இதயம் பாட ஆரம்பித்தது. (மிஸ்டர் ஜீ, உங்க ஆளு என்ன நியூ யோர்க் கொட்டும் பனியில் டான்ஸா ஆடுறாங்க? நடுரோட்டுல சண்டை போட்டுட்டு இருக்காங்க.. கொஞ்சம் நடப்புக்கு வாங்கப்பா!).
தறிக்கெட்டு துடிக்கும் இதயத்தை அடக்க முயற்சித்தான் சகிதீபன். வலது கையை மார்பில் வைத்துக் கொண்டு,
“ராஜா புரியுது! எதிரில நிற்கிறது நம்ம ஆளுதான்.. அதுக்காக இவ்வளவு வேகமா துடிக்காத.. நீ துடிக்கிற சத்தத்துல, இடி இடிக்கிதுன்னு மக்கள் நினைச்சிட போறாங்க” என்று வசனம் பேசியவன் அவர்களை நெருங்கி வந்தான்.
“ சாரி உங்க சண்டைக்கு நடுவில் வருவதற்கு.. கியூ நகரணும்னா நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நகரணும்.. சூழ்நிலையை புரிஞ்சுக்கோங்க!” என்றான் சகி புன்னகையுடன். அவன் கேப் அணிந்திருந்ததினால், சகியின் முகத்தை மைத்ரேயியால் சரியாய் பார்க்க முடியவில்லை.
மேலும், தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தவனை, முறைப்பதுதான் தனக்கு பிரதான கடமை என்பது போல அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளுடன் சண்டையிட்டவன், தோற்றத்தில் கண்ணியவானாகத்தான் இருந்தான்!
பாவம் அவனுக்கு என்ன பிரச்சனையோ! ஏதோ ஒரு கோபத்தில் வார்த்தையைக் கொட்டிவிட்டான். அதை மைத்ரேயியும் பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள்.
“ப்பா.. என்ன ஒரு கோபம் வருது?” துடிக்கும் இதழ்களுடன் முறைத்துக் கொண்டிருந்த மைத்ரேயியை ரசித்தான் சகிதீபன். அந்த வரிசையின்படி அந்த இளைஞன், மையூவின் பின்னால் தான் நின்றிருந்தான். அதனால் மைத்ரேயி இறுதியாய் அவனை முறைத்து பார்த்துவிட்டு முன்னால் நகர்ந்தாள்.