(Reading time: 16 - 32 minutes)

31. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

குழந்தை பிறந்து சில வாரங்களிலேயே, திலீப்பின் மனம் முற்றிலும் துவண்டு போயிருந்தது…

பின்னே, திலீப்பினை பார்க்கும் இடத்திலெல்லாம் அவமானப்படுத்த ஒரு சிலர் வரிந்து கட்டிக்கொண்டு காத்திருந்தால் அவன் தான் பாவம் என்ன செய்வான்?...

அத்தனை இகழ்ச்சியமான பேச்சுக்களையும் அவன் தன் மனதிற்குள்ளேயே சுமந்து கொண்டு சரயூவிடத்திலும், தன் குழந்தைகளிடத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே இருந்தான்…

ஆனால் அதையும் வெளிக்கொண்டுவரத்தான் வீட்டிற்குள்ளேயே ஒரு பெரிய நல்ல உள்ளம் காத்திருக்கிறதே….

அதை அறியாது அவனும் தனக்குள்ளேயே தன் மனக்கஷ்டத்தை புதைத்துக்கொண்டு சிரித்து நடமாடினான் வெளியே…

தனது துக்கத்தை சரயூவிடத்தில் சொல்லி, அவளையும் ஏனோ காயப்படுத்த விரும்பவில்லை அவன்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ஹ்ம்ம்…. அவன் அப்படி தன் மனைவி வருத்தப்படக்கூடாது என்றெண்ணி மறைத்து வைத்திருந்த காலம் போய் அவனே அவளை வார்த்தைகளால் கொடுமைப்படுத்தும் காலமும் அடுத்து வர இருக்கிறது என்பதை அவனுமே அந்த நேரத்தில் அறியாது தான் இருந்தான்…

திலீப்பை பொறுத்தவரை, அவன் நன்றாக பேசும் ஒரே ஆள் சரயூ மட்டும் தான்… தந்தை ஆகட்டும், தங்கை ஆகட்டும், தம்பி ஆகட்டும்… யாரிடமும் நின்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு மேல் அவன் பேசியதே கிடையாது…

ஏனோ அவனின் அம்மாவிற்கு அடுத்தபடியாக அவன் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வது சரயூவிடம் மட்டும் தான்…

துக்கம் என்று ஒன்று அதுவரை பெரியதாய் அவன் வாழ்வில் வந்ததில்லை அதுவும் சரயூ வந்த பிறகு… எனினும் இப்போது அவன் கொண்டிருக்கும் காயத்தை அவளிடம் பகிர்ந்து கொள்ளவும் அவன் திணறவே செய்தான்…

அந்த தருணத்தில் தான், சுதீப் வந்தான் ஊருக்கு… குழந்தை பிறந்ததும் சுதீப்பிற்கு லீவ் கிடைக்கவில்லை… ஆறேழு மாதங்கள் கழித்து அவன் பிரேமிதாவை பார்க்க வந்திருந்தான்…

வா, எப்படி இருக்குற என்ற வார்த்தைகளோடு சரி… அதற்கும் மேல் திலீப் அவனிடம் பேசவில்லை…

பிரேமிதாவை தூக்கி அவன் கொஞ்சிடுகையில், சரயூ அவனிடம் நலம் விசாரிக்க ஆரம்பிக்க, அவனும் அதற்கு பதில் சொல்லிவிட்டு, எதார்த்தமாக அவன் அடுத்து சொன்ன விஷயம் தான் திலீப்பின் மனநிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது….

“அண்ணி… பாப்பா… அப்படியே அண்ணன் தான்…. செம க்யூட்டா இருக்குறா… பையனா மட்டும் பொறந்திருந்தாளோ அப்படியே அண்ணன் ஜெராக்ஸ் தான் போங்க… ஹ்ம்ம்… ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு….”

அவன் சொன்னதும் பட்டென்று சுதீப்பை திலீப் பார்க்க, அதை விசாலம் கவனித்துவிட்டாள்…

சரயூ, சுதீப் சொல்லியதற்கு பதிலாய் விளையாட்டுக்கு அடுத்து பேச ஆரம்பிக்க, அங்கே வெளுத்தே போனது திலீப்பின் முகம்…

“என்ன பண்ண?... உங்க அண்ணனுக்கு ரெண்டுமே பொண்ணு தான்னு கடவுள் அன்னைக்கே எழுதி வச்சிட்டார் போல… இதுல ஜஸ்ட் மிஸ் ஆகிட்டுன்னு நாம வருத்தப்பட்டு தான் என்ன ஆகப்போகுது?...”

போலியாய் சலித்துக்கொள்பவளை போல் அவள் சொல்ல, திலீப்பின் வெளிறிய முகத்தை கண் கொட்டாமல் பார்த்து ரசித்தாள் விசாலம்…

ஊரே தன்னை குறை சொன்னபோதும் கூட மனதிற்குள் வெம்பி போய் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தவனால், இன்று கட்டின மனைவியே தன்னை குறை சொல்வது போல் நேர்ந்த நிலையை அவனால் அவ்வளவு எளிதாக தாங்கிக்கொள்ள முடியவில்லை…

அதற்கும் மேல் அங்கிருப்பது முள் மேல் இருப்பது போலவே தோன்ற, சட்டென்று எழுந்து மாடிப்படி ஏறினான் திலீப்…

“என்ன அண்ணி அண்ணன் எழுந்திரிச்சு போறார்?...”

சுதீப் கேட்க, “அதுவா… ஃபீலிங்க்ஸில் போறாரா இருக்கும்… அதான்…” என சிரித்துக்கொண்டே அவளும் சொல்ல, அவனும் அவள் ஏதோ அண்ணனை வைத்து விளையாடுகிறாள் என்றெண்ணிக்கொண்டு சிரித்தான் பதிலுக்கு…

இந்த சிரிப்பும், அவர்களின் பேச்சும் மேலே போய்க்கொண்டிருந்த திலீப்பின் காதுகளில் விழ, தன்னையும் அறியாமல் அவன் விழிகள் கலங்கியது வேகமாய்…

அதைக் குரூரமாய் ரசித்துக்கொண்டே விசாலம் சமையலறைக்குள் செல்ல, அவளின் பின்னாடியே சென்ற சரயூ, காபியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வர, அங்கே திலீப் இல்லை…

“அதுக்குள்ள எங்க போனார்?...” என அவள் தேடிய நேரம், பிரேமிதா அழ ஆரம்பிக்க,

“நீ பாப்பாவை பாரு… நான் போய் தம்பிக்கு காபி கொடுக்குறேன்….” என விசாலம் கூற, சரி என தான் போட்ட காபியை அவளிடம் கொடுத்துவிட்டு பிரேமிதாவை தூக்கிக்கொண்டு அவள் செல்ல, விசாலம் திலீப்பைத் தேடி மாடிக்குச் சென்றாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.