(Reading time: 26 - 51 minutes)

மெதுவாக அவளை விட்டு விலகி, விஷ்வாவின் அருகில் சென்று நின்றுக்கொண்டான் பரத். தன்னால் அவள் வாழ்வில் எந்த குழப்பமும் வருவதை எப்போதும் விரும்பியதில்லையே அவன். இந்த நொடி வரையில் அருண் மீது பொறாமை கொஞ்சம் கூட வந்ததில்லை பரத்துக்கு.

நடக்க முடியாத படியால் சக்கர நாற்காலியில் வந்திருந்தாள் இந்துஜா. சந்தோஷமாக அவர்களை நோக்கி ஓடினாள் அபர்ணா. அருணின் அம்மா அவள் கன்னம் வருட, அதற்குள் அவள் அப்பாவும் வந்து அவர்களை வரவேற்க,

இந்துஜாவை அவன் அம்மா அபர்ணாவுக்கு அறிமுக படுத்தி வைக்க, பரஸ்பரம் புன்னகைத்துக்கொண்டனர் இருவரும்.

ஆனால் அருண் முகத்தில் மட்டும் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லை. காரணம் அபர்ணாவுக்கு தெரியாமலும் இல்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அவன் அன்று சொன்னதை இவள் ஏற்றுக்கொள்ளவில்லை. வெளிநாடு செல்வதாக இல்லை என உறுதியாக மறுத்திருந்தாள் அலுவலகத்தில். அவள் கொடுத்த ராஜினாமாவை திரும்ப பெற்றுக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் இந்த பத்து நாட்களில் அவள் அலுவலகம் பக்கமே செல்லவில்லை.

நிச்சியமாக அவனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரியும் அவளுக்கு. நான்கைந்து நாட்களாக அவன் அவளுடன் சரியாக பேசுவதும் இல்லை.

எல்லாரும் மணமேடையை நோக்கி செல்ல அருண் சற்றே தனியே பின் தங்க அவனருகில் சென்று நின்றாள் அபர்ணா.

'ஹாய் அருண்..'

'ம்..'

'இன்விடேஷன் எல்லாம் பார்த்தீங்களா. நல்லா இருக்கில்ல. நாங்க எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பிச்சிட்டோம்..'

'ம்...'

என்ன எல்லாத்துக்கும் ம்..ம்...ங்கறீங்க.. நான் எவ்வளவு சந்தோஷமா பேசறேன்...'

'ஸோ.. நீ... யூ...எஸ்... போக மாட்டே இல்லையா???' அவன் குரல் கொஞ்சம் மரத்துப்போய் இருந்தது.

'என்னாலே முடியாது ப்ளீஸ்.... அதை விட்டுடுங்க.. அருண்... நாம வேறே ஏதாவது நல்லதா பேசுவோமே ப்ளீஸ்... ஆங்... சொல்ல மறந்துட்டேன்... நான் ரெண்டு பாட்டு.. பாடி..' அவள் சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்து நகர்ந்திருந்தான் அருண். ஒரு பெருமூச்சுடன் அவன் சென்ற திசையையே பார்த்திருந்தாள் அபர்ணா.

மணமேடையில் மந்திரங்கள் ஒலித்துக்கொண்டிருக்க விஷ்வாவின் அருகில் நின்று அவன் முகத்தையே பார்த்திருந்தான் பரத். இந்துஜாவை பரத் பார்த்ததில்லை. ஆனாலும் அருணுடன் அவள் வந்ததும், சக்கர நாற்காலியில் அவள் அமர்ந்திருந்ததும், எல்லா புள்ளிகளையும் ஒன்றிணைத்து இவள் தான் இந்துஜாவென புரிந்துக்கொண்டிருந்தான் பரத்.

அவளை பார்த்த மாத்திரத்தில் மிகமிக அழகான தவிப்பு விஷ்வாவின் முகத்தில். அதனோடு சேர்த்து அதை சட்டென வெளிக்காட்டிக்கொண்டு விடாத ஒரு பாவமும்!!! புன்னகைத்தான் எழுந்தது பரத்துக்கு.

சற்றே ஓரமாக இருந்த இந்துஜாவின் பார்வையுமே நேரே அவனைத்தான் வருடியது.சில நொடிகள் கடக்க அலட்டிக்கொள்ளாமல் வெகு இயல்பாய் அங்கிருந்து நழுவி அவளை நோக்கி நடந்தான் விஷ்வா. தம்பியை தூரத்திலிருந்து ரசித்துக்கொண்டிருந்தான் அண்ணன்.

'அமையட்டும்!!! இவனுக்காவது நினைத்தபடி வாழ்க்கை அமையட்டும்.'

'ஹாய்..' என்றான் விஷ்வா இதமாக. பதிலாக புன்னகைத்தாள் அவள்.

'வலி பரவாயில்லையா இப்போ.. ' ஒரு மருத்துவனாக அவளை ஆராய்ந்தன அவன் விழிகள். பதிலாக ஒரு தலை அசைப்பு.

'இங்கே கொஞ்சம் கூட்டமா இருக்கு. நீ ரூமுக்கு வரியா. அங்கேயே உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கொண்டு வர சொல்றேன்.' தான் இதுவரை யாரிடமும் இத்தனை மென்மையாக  பேசியதில்லையோ என அவனுக்கே தோன்றியது.

அதற்கும் சரி என அவள் தலை அசைக்க அவளது சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு நடந்தான் விஷ்வா. அறைக்குள் சென்று அவள் சக்கர நாற்காலியின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் விஷ்வா.  சில நொடிகள் எதுவுமே பேசாமல் அவளையே பார்த்திருந்தான் அவன்.

நிஜமா நல்லா இருக்கே இல்ல நிலாப்பொண்ணு??? தலையசைப்பு அவளிடம்.

'சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.  உன்னை டான்ஸ் ஆட வெச்சிட்டுதான் நான் நிம்மதியாவேன். டொன்ட் வொர்ரி..' அவன் சொல்ல அவள் அழகாய் புன்னகைக்க அவள் கையை பிடித்து காரணமே இல்லாமல் நாடி பரிசோதித்தான் விஷ்வா.

'இப்போது எதற்கு நாடி பரிசோதிக்கிறானாம்??? என் கையை பற்றிக்கொள்ளத்தானே விழைகிறது அவன் மனம்.???' நன்றாக புரிகிறது பெண்ணுக்கு.

அந்த நேரத்தில் சட்டென அந்த அறைக்குள் அபர்ணா நுழைய கொஞ்சம் திகைத்துதான் போனாள் அவள்.

'ஓ... சாரி...' அவள் சட்டென சொல்ல

'ஹேய்.. கம் ஆன் எதுக்கு சாரி.. உள்ளே வா.. இவங்க அருண் சிஸ்டர்..'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.