அந்த வீட்டின் பெரிய கூடத்தில் ஹோமம் போன்ற நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்க கூடத்தில் இருந்த வேறு சில உறவினர்கள் 'யார் இவன் என்ற யோசனையுடன் பரத்தை பார்த்துக்கொண்டிருக்க,
'அட வாங்க பரத்...' சந்தோஷ மிகுதியில் அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவள் நடக்க, அவனை தள்ளிக்கொண்டு நடந்தான் விஷ்வா.
அம்மா!!! அறைக்குள் அமர்ந்திருந்தார் அவர். விழாவுக்காக தயாராகிகொண்டிருந்தார் அவர். அவர் அருகே வேறு சில பெண்களும் இருந்தனர்.
இன்று தலைவலி கூட கொஞ்சம் குறைந்திருந்தது போலே இருந்தது. காலையிலிருந்தே பரத் வருவானா மாட்டானா என்ற கேள்வி அவரை தவிப்பில் தள்ளி இருந்தது. அவன் வரப்போகிறான் என்ற செய்தியை அவரிடம் சொல்லி இருக்கவில்லை விஷ்வா.
இருவருமாக பரத்தை உள்ளே இழுத்துக்கொண்டு வந்தனர். எழுந்தே நின்று விட்டார் அம்மா.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
'அத்தை... இந்தாங்க உங்க மூத்த பிள்ளை. உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டான் விஷ்வா. இனிமே இவர் உங்க பொறுப்பு. பத்திரமா பார்த்துக்கோங்க. இனிமே இவர் சிரிச்சிட்டே இருக்கணும். சொல்லிட்டேன்..' விளையாட்டாய், ஆள் காட்டி விரல் நீட்டி எச்சரிக்கும் பாவத்தில், உற்சாக தொனியில் சொல்லிக்கொண்டே போனாள் அபர்ணா.
அம்மாவின் காதில் என்ன விழுந்ததோ எது விழவில்லையோ தெரியவில்லை. அசையாமல் நின்றிருந்தார் அவர். பல வருடங்களுக்கு பிறகான இந்த சந்திப்பில் பேச்சிழந்து போயிருந்தான் பரத்
'மூத்த மகனா???' சற்றே வியப்புடன் பார்த்திருந்தனர் அங்கே இருந்த மற்ற உறவினர்கள்.
மகிழ்ச்சி, நிம்மதி, பெருமை என எல்லாவற்றையும் ஒரு சேர அனுபவித்துக்கொண்டிருந்தான் விஷ்வா. நினைத்ததை சாதித்து விட்ட நிறைவு நிரம்பி இருந்தது அவனிடத்தில்
'சரி வாங்க. நாமெல்லாம் வெளியே இருப்போம். பரத் கொஞ்ச நேரம் அம்மாவோட இருக்கட்டும் நான் போய் அப்பாவை அனுப்பறேன்..' சொன்னான் விஷ்வா..
எல்லாரும் அறையை விட்டு வெளியே சென்றிருந்தனர். சில நொடிகள் மௌனத்தின் அரசாட்சி பரவியது அங்கே.
இன்றைய விழாவுக்காக கொஞ்சம் நகைகளை அணிந்துக்கொண்டு தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தாலும் அவர் முகத்தில் நிறையவே சோர்வு படர்ந்திருந்தது. அம்மாவின் கண்களில் கண்ணீர் கோர்க்க ஆரம்பித்திருந்தது. அப்போதுதான் அவர் மனநிலை பரத்திற்கு சட்டென உறைத்தது. அவரை இயல்புக்கு நகர்த்த முயன்றவனாக
'இன்னும் ரெடி ஆகலையா நீங்க??? எல்லாரும் வந்திட்டே இருக்காங்க...' என்றான் புன்னகையுடன்.
இப்படி எதுவுமே நடக்காதது போல் பேசும் மகனிடம் என்ன பேசுவதாம். புரியவில்லை அம்மாவுக்கு.
'இத்தனை தவறுகளை செய்துவிட்டு மன்னித்து விடு..' என்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்ன??? கன்னம் தொட்டிருந்தது அவர் கண்ணீர்.
'என்னாச்சு??? ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க...' 'எதுக்கு கண்ணிலே தண்ணி எல்லாம்.??? பழசு எதையும் யோசிக்காதீங்க..' பரத் சொல்லிக்கொண்டிருக்க,
'கடைசியிலே பையன் மடியிலேதான் உயிர் போச்சு...' அன்று தோழியின் வீட்டில் கேட்ட வார்த்தைகள்தான் மட்டுமே இப்போது அவர் நினைவில்.
'நான் கொஞ்ச நேரம் உன் மடியிலே தலை வெச்சு படுத்துக்கவா பரத்..' மெல்லக்கேட்டார் அம்மா.
'கண்டிப்பா... ' என்றபடி அவன் கட்டிலில் அமர்ந்துக்கொள்ள அவன் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டார் அம்மா.
இப்போதே இப்படியே உயிர் போய்விட்டால் கூட நன்றாகத்தான் இருக்குமென ஏனோ தோன்றியது அம்மாவுக்கு. 'அப்படி எல்லாம் நாம் நினைத்தவுடன் நம் உயிர் போய்விடுமா என்ன???
'என்னாச்சு உங்களுக்கு??? உங்களை நான் எப்பவும் இப்படி பார்த்ததில்லை...' அவனுக்கு முன்பெல்லாம் அவர் மீது எத்தனையோ கோபங்கள் இருந்தது உண்மை. ஆனால் இப்போது அவை எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை அவனுக்கு.
'என்னை நீ முதல்லே அம்மான்னு கூப்பிடு..' என்றார் அவர் 'நடுங்கும் குரலில் 'எனக்கு முதன் முதல்லே அந்த வார்த்தையை அறிமுகப்படுத்தினது நீதானேடா... உன்னை போய் தூக்கி போட்டேனேடா. அதுக்குத்தான் அனுபவிக்கிறேன்.' அவர் குரல் உடைய கொஞ்சம் தடுமாறித்தான் போனான் பரத்.
'அம்மான்னு கூப்பிடுடா..'
'அம்மா... என்னமா உங்களை அம்மான்னு கூப்பிடாம நான் வேறே யாரை கூப்பிட போறேன்...' என்றான் பரத். அவன் குரல் நெகிழ்ந்து கிடந்தது.
'உனக்கு செஞ்ச தப்புக்கெல்லாம் என்னை மன்னிச்சுக்கோடா.. தயவுசெய்து...'
'அம்மா... ஏன் நல்ல நாளிலே இதெல்லாம்.....விடுங்க...... எல்லாம் சரியாயிடுச்சு. இப்போ நான் நல்லாதானே இருக்கேன்.'