அந்த நினைவில் தனக்குதானே புன்னகைத்து கொண்டபடியே அந்த பளப்பள பத்திரிக்கையை புரட்டிக்கொண்டே வர வந்தது அவன் தேடிய பக்கம்!!! விழிகள் அந்த பக்கத்தில் இருந்த அந்த புகைப்படத்தில் நிலைக்கொள்ள வாயிலிருந்த இனிப்பு ஒரு நொடி உள்ளிரங்க மறுத்தது.
'அப்பா அமர்ந்திருக்க அவரை இருகரங்களால் அணைத்தபடி அவர் பின்னால் இவன் நிற்கும் புகைப்படம்' இமைகள் கீழிறங்க மறுக்க அதையே சில நொடிகள் பார்த்துவிட்டு நிமிர்ந்தான் அவன்.
'ஸ்கை'ஸ் லவர்..' என்ற தலைப்பில் ஆங்கிலதில் வெளியாகி இருந்தது அவனது பேட்டி. அவனை பற்றிய சின்ன அறிமுகத்திற்கு பிறகு,
'அது ஏன் இந்த விமான துறையை தேர்ந்தெடுத்தீங்க..' பேட்டியின் முதல் கேள்வி.
'சின்ன வயசிலே இருந்து...'
'சின்ன வயசிலே இருந்து விமானி ஆகணும்னு ஒரு கனவு அப்படித்தானே???' கேள்வி தொடர
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
'இல்ல சின்ன வயசிலே இருந்து எனக்கு உயரம்னா பயம் அதனாலே...'
'வாட்???' கேள்வி கேட்பவர் வியக்க, அழகான ஆங்கிலத்தில் அவனது பதில்,
'எஸ்.. என்னோட பயங்களை நானே தூக்கி போட்டு வெளியே வரணும் அப்படிகிறது எங்கப்பா எனக்கு கத்து கொடுத்த பாடம். எல்லா பயத்தையும் உடைச்சிட்டு வெளியே வந்து, பாரதி சொன்ன மாதிரி விட்டு விடுதலையாகி, வானத்திலே ஏறி பறந்து பார்த்த பிறகுதான் எனக்கு புரிஞ்சது வானம் முழுக்க என்னுடைய மேக காதலிகள் எனக்காக காத்திருக்காங்கன்னு.... ஹா ஹா.... ஹா.....'
'அப்போ பூமியிலே உங்களுக்கு எத்தனை காதலிகள்???'
'நீங்க வேறே அப்படி யாரும் கிடையாதுங்க... அப்படி யாரவது இருந்தா மேலே இருக்கிற என் காதலிகள் கோவிச்சுப்பாங்க... அப்புறம் அவங்களுக்கு யார் பதில் சொல்றது???'
'ஹா ஹா ஹா...... உங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்க...'
'எங்க குடும்பத்திலே என்னையும் சேர்த்து இன்னும் நிறைய பேர்.. நான் ... அப்பா.... அப்பா... அப்பா ... அப்பா... அப்பா...'
'புரியலை சார்...'
'எனக்கு எல்லாமே எங்க அப்பாதான்...'
'பொதுவா பையன்களுக்கெல்லாம் எல்லாம் அம்மாதான் பிடிக்கும் இல்லையா? பல பசங்க அப்பாகூட சண்டைதான் போடுவாங்க. நீங்க எப்படி இப்படி வித்தியாசமா..'
'ஹா... ஹா... ஹா ....'
'இதுக்கும் சிரிப்புத்தானா??? எல்லாத்துக்கும் நான் இருக்கேன்ன்னு தைரியம் கொடுத்த அப்பாவா அவர். அதனாலே தான் அவர் உங்களுக்கு ஸ்பெஷலா'???
'எல்லாத்துக்கும் நான் இருக்கேன்னு அவர் எப்பவும் சொன்னதே இல்லை. அப்படி அவர் சொல்லி வளர்த்து இருந்தா இப்போ நான் வாழ்ந்திட்டு இருக்கவே மாட்டேன்..(சில நொடி மௌனம்)
'உன் நிழல் கூட இருட்டிலே உன்னை விட்டு ஓடி போயிடும் நீதான் உனக்கு எப்பவும் துணைன்னு சொல்லி சொல்லி வளர்த்தார். என் பையன் கண்ணிலே தண்ணி வருதேன்னு அவர் எப்பவுமே கவலை பட்டது இல்லை. என் கூட சேர்ந்து அழுததும் இல்லை. என் கண்ணீருக்கான காரணத்தை என் வாழ்க்கை பாதையிலிருந்து விலக்கித்தான் பழக்கம் அவருக்கு.......... அதற்கு மேல் அந்த பேட்டியை படிக்க முடியாமல் அவன் கண்களை மறைத்தது அவனது கண்ணீர்.
'விவேக் அழாதேடா.... ச்சே வெக்கமா இல்லை ...அழாதே.....' அப்பா அதட்டுவதை போலே ஒரு பிரமை. அவனருகில் இருந்த அந்த ரோஜாப்பூக்கள் அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தன.
'என் கண்ணீருக்கான காரணத்தை என் வாழ்க்கை பாதையிலிருந்து விலக்கித்தான் பழக்கம் அவருக்கு!!!'
கைக்குட்டையை எடுத்து கண்ணீரை ஒற்றி எடுத்துக்கொண்டான். எப்போதும் என்னை அதட்டிவிடுவதே வேலை இவருக்கு. இப்போது எனது கண்ணீருக்கான காரணத்தை எனது வாழ்க்கை பாதையிலிருந்து நீக்கி விட முடியுமா இவரால்??? அவன் அப்படி யோசித்த மறுநொடி ஒலித்தது அவனது கைப்பேசி.
அதில் ஒளிர்ந்தது ஏதோ ஒரு லேண்ட் லைன் எண். அது எந்த ஊர் என்றெல்லாம் கவனிக்க தோன்றவில்லை அவனுக்கு. தலையை உலுக்கி மனதை நிலைப்படுத்திக்கொண்டு அழைப்பை ஏற்றான் விவேக்.
'விவேக் ஸ்ரீனிவாசன்!!!'
மறுமுனை அந்த பெயரை எதிர்ப்பார்க்கவில்லை போலும். மௌனம் அங்கே!!!
ஹலோ விவேக் ஹியர்..'
'நான் தாமோதரன் பேசறேன்..' சற்றே ஓய்ந்து தளர்ந்த குரல் அந்த பக்கம்.
சில மணி நேரங்கள் முன்பாக மதுரையில் கல்யாண மண்டபத்தில் வடை தட்டிக்கொண்டிருந்தாரே அதே தாமோதரன்!!!
'சொல்லுங்க உங்களுக்கு யார் வேணும்...' என்றான் இதம் பரவும் குரலில்.