(Reading time: 25 - 50 minutes)

35. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ட்ச பிரஜாபதி கை காட்டிய திசையில் பார்த்த அனைவரும் வியந்து போயினர்…

உலகையை காத்தருளுகின்ற பரந்தாமன் தனக்கு பிரியமான, ஐந்து தலை நாகத்தினையே தன் படுக்கையாக்கி அதன் மீது பள்ளி கொண்டிருக்க, அவரின் பாதங்களுக்கு அருகில், அவரது துணைவி லட்சுமி தேவி வீற்றியிருக்க, என பிரம்மாண்டமாய் பல அடி உயரத்தில் காட்சியளித்தது அந்த சிற்பம்…

அங்கிருப்போர் வியந்து நிற்கையிலே, அந்த அவையின் ராஜகுரு காசியப்பரும், அவருக்கு அடுத்த குருவான பிருகுவும் அந்த சிற்பத்தினைப் பார்க்க, அவர்களின் கண்கள், சற்றே சுருங்கவும் செய்தது…

“இந்த சிற்பத்தை தான், யாம் புதிதாக உருவாக்கியுள்ள அந்த கோவிலில் நாளை பிரதிஷ்டை செய்ய உள்ளோம்…”

தட்ச பிரஜாபதி பெருமையுடன் கூற, அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது… காசியப்பரையும், பிருகுவையும் தவிர….

ஒருவரை ஒருவர் அவர்கள் இருவரும் முகம் பார்த்துக்கொள்ள, அதில் இருந்த அர்த்தம் அவர்களுக்கு மட்டுமே புரிந்தது….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "விவேக் ஸ்ரீநிவாசன்" - இனிய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

றுநாள், வெகு விமரிசையாக சிலை பிரதிஷ்ட விழா கோலாகலமாக நடைபெற, செதுக்கிய அந்த சிலையை, இருபதுக்கும் மேற்பட்டோர் கயிற்றினைக் கட்டி இழுத்து வந்தனர் மெதுவாக….

தட்ச பிரஜாபதி தன் குடும்பத்துடன் கோவிலின் உள்ளே செல்ல, சிலையை இழுத்து வந்தவர்களும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே செல்ல முயல, அவர்களால் முடியவில்லை…

“என்ன இது?...” என திரும்பி பார்த்தால், சிலை கோவிலின் உள்ளே பிரவேசிக்கவில்லை…

எவ்வளவோ முடிந்த மட்டும் முயன்றும், சிலையை அந்த வாசலைவிட்டு உள்ளே இழுக்க முடியவில்லை…

இறுதியில் பிரஜாபதியிடம் தகவலை சொல்ல, அவர் வந்து பார்த்தவிட்டு மேலும் சில ஆட்களை அனுப்பினார் சிலையை கோவிலின் உள்ளே கொண்டு வருவதற்கு…

இருபது முப்பது ஆன போதும் முடியவில்லை… முப்பது, நாற்பதாகி, அதன் பின் ஐம்பது ஆன போதும் சிலையை சிறியதாக கூட அசைக்க முடியவில்லை யாராலும்…

அனைவரும் தோல்வியோடு தட்ச பிரஜாபதியின் முன்னே தலை கவிழ்ந்து நிற்க,

பிரஜாபதியின் அருகே வந்த பிருகு, “பிரஜாபதி தட்சரே… சிலை உள்ளே வர மறுக்கிறதென்றால், சிற்பம் இன்னும் நிறைவடையவில்லை என்று அர்த்தம்… அது தங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்… அதனால்…” என சொல்லி முடிக்கும் முன்பே,

“தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு தெரியும் பிருகு மகரிஷி… என்னைப் பொறுத்தவரை சிற்பம் இதை விட சிறப்பாக அமைய முடியாது என்பதே என் கருத்து… பரந்தாமனின் மனதை குளிர்வித்தால் சிலை தானாக உள்ளே வந்துவிடும்…” என்றார் பிரஜாபதி…

“அது அவ்வளவு எளிதான செயல் அல்ல பிரஜாபதி அவர்களே… அந்த நாரயணின் உள்ளத்தை குளிர்விப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்லவே…”

“அது எமக்கும் தெரியும் பிருகு மகரிஷி…”

“தெரிந்தும் ஏன் இந்த பிடிவாதம் பிரஜாபதி?...”

“இது பிடிவாதம் இல்லை… நான் கட்டிக்காக்கும் குல கௌரவம்….”

“வாதம் செய்யும் தருணம் இது அல்ல பிரஜாபதி… நல்ல நேரம் முடிவதற்குள் சிலையை கோவிலுக்குள் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்… இல்லையேல் அது நல்லதன்று….” எச்சரித்தார் குரு காசியப்பர்…

“அதுமட்டுமின்றி, இறைவனின் மனதை குளிர்விக்க இரண்டே வழி தான் இருக்கிறது…” என அவர் கூறியதும்,

“என்ன அது?...” என்று வினவினார் பிரஜாபதி…

“ஒன்று, சிற்பம் முழுமை பெற வேண்டும்…”

“அது முழுமையடைந்துவிட்டது… இன்னொரு உபாயத்தை கூறுங்கள்…” சட்டென கூறினார் பிரஜாபதி…

அவரின் அந்த உறுதி மகரிஷிகளை மலைக்க வைத்தது… எனினும் ஒரு முடிவுடன் கூறினர் இன்னொரு உபாயத்தை…

“இன்னொன்று வேறு ஏதுமில்லை… அது…. நாராயணி யாகம்….”

“நாராயணி யாகம்…. ஹ்ம்ம்… அதற்கான ஏற்பாடுகள் தொடங்கட்டும்...”

பிரஜாபதி தன் உத்தரவைப் பிறப்பிக்க, “நாராயணி யாகம் நடத்துவது தாங்கள் நினைப்பது போல் அவ்வளவு இலகுவான செயல் அல்ல பிரஜாபதி…. அதற்கு 1008 தாமரை மலர்கள் வேண்டும்…. அதைக்கொண்டே நாராயணனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்… அப்பொழுது தான் நாராயணி யாகம் முழுமை பெறும்…” என்றார் பிருகு மகரிஷி…

“யார் அங்கே… இப்பொழுதே சென்று தாமரை மலர்களை கொண்டு வாருங்கள்…” பிரஜாபதி தன் பணியாட்களிடம் கூற,

“தந்தையே… நான் சென்று மலர்களைக் கொண்டு வருகிறேன்…” என்றாள் சதி யாரும் எதிர்பாரா வண்ணம்…

மகள் வார்த்தையைக் கேட்டதும், அவரின் முகத்திலிருந்த இறுக்கம் மறைந்து, புன்னகை உதயமானது…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.