அவரின் வார்த்தைகள் கேட்டு தன்னிலைக்கு வந்தவள்,
“என்ன… என்ன கூறினீர்கள்?.... யாகம் வெற்றி அடையாதா?... ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?...” என சற்றே கோபத்துடன் கேட்க,
“உனது கோபம் நியாயமானது தான்… எனினும் வெற்றி பெற முடியாது என்றறிந்து தான் உன் தந்தை இந்த யாகத்தை நடத்துகிறார்…. அதுதான் உண்மை…”
“அது தான் ஏன் என்று கேட்கிறேன்… யாகத்தினை நிறைவு செய்ய மலர்கள் தேவை… அதை நானும் என் சகோதரிகளும் கொண்டு சேர்த்துவிடும் பட்சத்தில், யாகம் எப்படி பூர்த்தியடையாமல் போகும்?... என் தந்தையையும் எப்படி தோல்வி நெருங்கும்?...”
“நிச்சயமாய் யாகம் முழுமை பெறாது… ஏனெனில் அந்த பரந்தாமனுக்கு தெரியும் என்ன காரணம் என்று…”
“அதைத்தானே நானும் கேட்கிறேன்… சொல்லுங்கள்…”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
சதியின் தீர்க்கமான குரல் அவருக்கு புன்னகையைத் தந்தது…
“உன் தந்தை பிரதிஷ்டை செய்த சிற்பம் இன்னும் முழுமை பெறவில்லை… அது எப்போது முழுமை பெறுகிறதோ அப்பொழுது தான் சிற்பம் கோவிலுக்குள் நுழையும்….”
“என்ன கூறுகிறீர்கள்?... முழுமை பெறவில்லையா?... அது எப்படி சாத்தியமாகும்?... தந்தை, ஸ்ரீவிஷ்ணுவின் சிற்பத்தை முழுமையடைந்த பின்னர் தானே பிரதிஷ்டை செய்யவே எண்ணம் கொண்டார்… எனில் சிற்பம் எவ்வாறு முழுமை பெறாமல் போகும்?...”
அவள் தனது கேள்வியை முன்வைக்க,
“உனது கேள்விக்கான பதில் உன் கண்முன்னே தான் இருக்கிறது…” என்று அவர் அந்த மலையை கை காட்ட, அவள் திகைத்தாள்…
“செல் மகளே… அந்த மலையின் மீது உன் கரத்தினை பதித்து கண்களை மூடு… உன் கேள்விக்கான விடை கிட்டிடும்… செல்….”
அவர் சொல்ல, அவள் நகராமல் நின்றாள்…
“காரணத்தை கேட்டாய்… அதற்கான உபாயத்தை நான் கூறினேன்… அவ்வளவுதான்… செல்… மகளே… அதன் மீது கைவைத்து உன் கேள்வியை நீ கேள்… விடையை நீயே தெரிந்து கொள்வாய்...”
அவர் நிதானமாக கூற, அதற்கு மேலும் தாமதிக்காமல் அவள் அந்த லிங்க மலையின் அருகே சென்றாள் மெதுவாக…
அருகினில் வந்தவள், அதன் மீது கரத்தினைப் பதிக்க, இனம் புரியா ஒரு மகிழ்ச்சி அவள் மனதில் வந்து மோதியது இனிதே….
அதில் லயித்துக்கொண்டே அவள் தனது கண்களை மூடிட, சட்டென அவளின் கண்களுக்குள் வந்து நின்றது பிரஜாபதி தட்சன் பிரதிஷ்டை செய்ய இருக்கும் அந்த நாராயணனின் சிற்பம்….
அவரின் ஒரு கரம் மலர் தாங்கியிருக்க, இன்னொரு கரம் நாகத்தின் படுக்கைக்கு கீழே வந்து நிற்க, அதனடியில், ஓர் வெற்றிடம் இருந்தது…
அந்த வெற்றிடமானது சற்று நேரத்திலேயே சிவலிங்கத்தை காண்பித்து, விஷ்ணுவின் கரங்களிலிருந்து வந்த ஓர் மலரானது அந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து மறைய, விழியினை பெரும் அலைப்புறுதலோடு அசைத்தவள், பட்டென விழி திறந்து தனது கரங்களை எடுத்துக்கொள்ள, அங்கம் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது அவளுக்கு…
“என்ன இது?... அந்த சிற்பத்தின் அடியில் எதுவோ ஒன்று…. அது என்ன?....”
அவள் வாய்திறந்து தனக்குள் கேட்டுக்கொண்டிருக்கையிலே,
“விடை தெரிந்து கொண்டாயா மகளே…” என்ற சத்தத்தில் திரும்பினாள் அவள் பதறியபடி…
“இதெல்லாம் பொய்… என்னை ஏமாற்ற செய்யும் சதி… நான் இதனை நம்பமாட்டேன்…” அவள் சீற்றத்துடன் கூற,
“அனைத்துமே எழுதப்பட்ட ஒன்று மகளே… தட்சன் நடத்தும் யாகம் தோல்வியடையும் என்பதும் எழுதப்பட்ட ஒன்றே… அது போல் நீ இங்கு வந்ததும் எழுதப்பட்டது தான்…”
“உங்களின் மாய வேலைகள் மற்றவர்களிடத்தில் வேண்டுமானால் செல்லுபடியாகலாம்… என்னிடத்தில் அது முடியாது… நான் பாதை தவறி வந்ததாக நினைக்கிறேன்… முதலில் இங்கிருந்து கிளம்புகிறேன்…” என அவள் நகர்ந்தபொழுது,
“நான் மகரிஷியின் தர்மபத்தினி… நீங்கள் தேடி வந்த மலர்கள் இதோ…. பெற்றுக்கொள்ளுங்கள்…” என்றபடி ஏராளமான தாமரை மலர்களை சதியிடம் நீட்டினார் அந்த பெண்மணி…
“இல்லை… நான்….” அவள் திணறுகையிலே,
“பெற்றுக்கொள்ளுங்கள்…” என அவள் கரங்களில் அந்த பெண்மணி மலர்களை கொடுக்க, புன்னகையுடன் வாங்கிக்கொண்டு, நன்றி உரைத்தாள் சதி…
“கிளம்புகிறேன்… நேரமாயிற்று…” என்றவாறு, வேகமாக இரண்டடி எடுத்து வைத்தவள், பின் சட்டென நின்றாள்…
அவளின் அருகே, ஒரு பாறையின் மீது சிவலிங்கம் வீற்றியிருக்க, அதன் பக்கத்திலேயே, தன் கைகளில் இருந்த ருத்திராட்சத்தை போட்டுவிட்டு,
“என் விதியும், என் வாழ்க்கையும், யாரும் எழுதுவதற்கு நான் அனுமதியேன்…” என்று உரைத்தும்விட்டு அவள் செல்ல,
“செல் மகளே… இனி நீயே நினைத்தாலும், உன்னால் இந்த நிழலை விட்டு விலக முடியாது…” என தன் மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டவர், உயர்ந்திருந்த லிங்க மலையினைப் பார்த்து புன்னகைத்தார் அந்த மகரிஷி…