(Reading time: 12 - 23 minutes)

நினைவுகளின் ஓட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டவள்,

“இந்த புடவை தான் எனக்குப் பிடிச்சிருக்கும்மா… இதுவே இருக்கட்டுமே… ப்ளீஸ்…..” என கெஞ்ச,

அவளின் அன்னையும் மகளின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்தார்….

இருவரும் ஹாலுக்கு வந்த போது,

“அம்மாவும் அப்பாவும் வரலையா தம்பி?...” என அவளின் தந்தை வந்திருந்த புதியவனிடத்தில் கேட்டுக்கொண்டிருப்பது அவளது காதுகளில் விழுந்தது….

அதற்கு அவன் பதில் சொல்ல வாயெடுத்த போது, அவளது தலை விண் விண் என்று வலிக்க ஆரம்பித்தது மெதுவாக….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

“இல்ல மாமா… நான் வொர்க்ல இருந்து அப்படியே வந்துட்டேன்… அவங்க வந்துட்டிருக்காங்க…” என வந்தவன் சொன்னது, அரைகுறையாகவே அவளது காதுகளில் விழுந்தது தெளிவில்லாமல்…

“சரி தம்பி….” என்றவர், திரும்பிய போது, தன் மகளை கவனித்துவிட்டு

“வாம்மா…” என்றழைத்தார்…

அவர் பார்வையைத் தொடர்ந்து அவனும் அவளைப் பார்க்க, அவன் பார்வை அவளை விட்டு அகலவில்லை கொஞ்சமும்…

“இந்த காபியை கொடும்மா….” என அவளின் அன்னை அவளிடம் கொடுக்க,

“இல்ல அத்தை…. அம்மா அப்பா வரட்டும்… அப்புறம் சாப்பிடுறேன்….” என்றான் அவன் புன்னகையோடு….

அவள் அது எதையும் கவனிக்காது அவளது தனி உலகிலேயே இருக்க,

“மாமா… எனக்கு ஜானவியை ரொம்ப பிடிச்சிருக்கு…. அவங்ககிட்ட கொஞ்சம், நா….ன் தனியா பேசலாமா?... நீ…ங்….க அனுமதி தருவீங்களா?...”

அவன் சட்டென மெதுவாக கேட்டதும், அவர் தனது மகளைப் பார்க்க, அவளோ நிலம் பார்த்துக்கொண்டிருந்தாள்…

பின்னர் முடிவெடுத்தவராக, “ஜானவியை உள்ள கூட்டிட்டு போம்மா..” என்றார் மனைவியிடம்….

“நீங்க போய் பேசுங்க தம்பி….” என்றவர் வந்திருந்தவனிடம் தன் சம்மதம் தெரிவிக்க,

“தேங்க்ஸ் மாமா…” என்றபடி அவன் ஜானவியின் அறைக்கு வந்தான்….

அறையின் வாசலில் நிழலாட, அவள் அதை உணர்ந்தும் ஜன்னலோரம் முகம் புதைத்து அவனுக்கு முதுகு காட்டியபடி நின்று கொண்டிருந்தாள்…

அவளின் அமைதியை அவன் ரசித்தான்… பெண் ஒவியம் ஒன்று தன்னைப் பார்க்க விரும்பாது முகம் திருப்பிக்கொண்டதாகவும் அவன் மனம் உணர, அவன் இதழ்களில் மெல்லிய புன்னகையும் படர்ந்தது இனிதே….

நேரம் சென்று கொண்டே இருக்க, அவளும் திரும்பவில்லை… அவனும் எதுவும் பேசவில்லை…

இறுதியில், அவனே பேச தயாராகி, “ஹ்ம்ம்….” என தொண்டையை லேசாக செறும, அவள் அப்போதும் திரும்பிடவில்லை….

“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு… நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்…. உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?...”

அவன் கேட்டு முடித்த வேளை, சட்டென நிலத்தில் சரிந்தாள் அவள்….

“ஹேய்………….” என்ற கூக்குரலுடன் அவளருகில் அவன் செல்ல, அவள் கரங்கள் உயர்ந்து அவனைத் தடுத்தது….

அதோடு அவள் விழிகளும் மூடியிருந்தது இறுக….

தன் மனதில் இருப்பவனை தவிர, வேறொருவனையும் மாப்பிள்ளையாய் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் அவள் மனதில் தீவிரமாய் இருக்க, அது அவளின் விழிகளைத் திறக்க விடாமல் தடுத்தது…

“லூசு…. என்னைப் பாருடி….” என்றவனின் கரங்கள் அவளை தன் மீது கிடத்த முனைய, அவள் கரங்கள் வலுவிழந்து போய் அவனைத் தடுக்க முற்பட்ட வேளை, அவனது ஸ்பரிசமும், வார்த்தையும் அவளை விழி திறக்க வைத்தது வேகமாய்….

கலங்கியிருந்த விழிகளில் இருந்த நீரோடு இமை பிரித்தவள், தன் முகத்துக்கு வெகு அருகே, கண்ட உருவத்தில் அவள் விழிகள் விரிந்தது சட்டென….

இதழ்களும் விரிந்து மலர்ந்த தருணம்,

“கா……ர்……..த்…….தி…………..” என அவள் திக்கித் திணறி கூறி முடிக்க, நுரை நுரையாய் அவளின் உதட்டிலிருந்து வெள்ளை திரவம் வழிய, அவன் அதிர்ந்து போனான்….

“அய்யோ… என்னடி இது?...” என பதறியபடி அவளின் இதழிலிருந்து வழிந்து கொண்டிருந்ததை துடைத்து எடுத்தான் அவன் வேகமாய்….

“என்னை…. ம……ன்…..னி…..ச்….சி….டு….ங்….க….. நான்… தூ…க்…..க…. மா….த்….தி…ரை……”

அவள் சொல்ல முடியாது தவிக்க,

“அய்யோ……. ச…..கி…….” என்றவன், அவளை சட்டென தன் மார்போடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டான்….

“கா…ர்….த்….தி…….” என்றவளின் இதழ்கள் விரிந்து மலர,

“வா… ஹாஸ்பிட்டல் போகலாம்…” என அவளை தூக்க முனைந்தவனை தடுத்து நிறுத்தினாள் அவள்…

“லூசு ஏண்டி இப்படி பண்ணின?... உங்கிட்ட என் காதலை சொல்லலாம்னு வந்தா நீ இப்படி பண்ணிட்டியேடி… என்னை விட்டுட்டு போக முடியுமாடி உன்னால?...”

“கா…த…..!!!!!.....................” அவள் விழிகளில் ஆச்சரியம் பிரதிபலிக்க,

“என் லூசு சகி… நான் உன்னை விரும்புறேண்டி… சத்தியமா உன்னை மட்டும் தாண்டி விரும்புறேன்… எப்படி நீ என்னை நினைச்சு உருகுறீயோ அதே மாதிரி நானும் உனக்காக உருகிட்டிருக்குறேண்டி…”

அவன் தன் மனம் திறந்து காதலை சொல்லிட, கடிகாரம் 12 மணியைத் தொட்டது சரியாய்….

அவள் மனம் சந்தோஷத்தில் மிதக்க, கடிகாரத்தையும், காலண்டரையும் அவள் பார்வை தொடர, அவன் பார்வையும் அங்கே செல்ல, பிப்ரவரி 14 என்று இருந்ததை கவனித்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…

“லூசு சகி….” என அவன் இதழ்கள் கூற, அவளோ சிரித்தாள்…

“உ…ங்…….க… கை…..யை…… நா….. பி….டி….ச்…..சி…..க்…….” என சொல்லியவள், அவனை நோக்கி அவள் தன் கரங்களை உயர்த்த,

கொஞ்சமும் தாமதிக்காமல், அவள் விரல்களோடு தன் விரல்களை அவன் பிணைத்துக்கொள்ள,

அவள் விழியிலிருந்து வழிந்த கண்ணீர் அவனது மார்பினை தொட,

“உங்…..க….ளோ………ட…..  நா…… வா……ழ…….ணு……..ம்…ணு…. ஆ…..சை…..யா…. இ…..ரு..க்கு….. கா…..ர்…..த்……தி…….” என்றாள் அவள் தன் விழி நீரோடு அவன் விரல் கோர்த்தபடி…

“உங்ககூட வாழணும்னு ஆசையா இருக்கு கார்த்தி… வாழ்க்கை முழுதும் உங்க கூட வாழணும் நான்… என்னை ஏத்துப்பீங்களா?... உங்க மனைவியா?...”

அன்று அவள் காதல் சொன்ன நொடி நினைவு வர, அவன் விழியிலும் நீர் உதயமானது உடனேயே…

“ஐ…. லவ்….. யூ….டி…. சகி….. ஐ… லவ்…. யூ… ஐ லவ் யூ…...”

சொல்லிக்கொண்டே அவள் உச்சியில் இதழ் பதித்து, அதில் அவன் தன் கன்னம் பதித்துக்கொள்ள

“வழியும் விழிநீரும்

விரல் கோர்க்க துடிக்கும் கரமும்

உள்ளம் சேர துடிக்கும் காதலும்

உன் கண்களுக்கு புலப்படவில்லையாடா….

விடியும் நாள் என் மனதிலும் ஒரு புது விடியலை ஏற்படுத்திட

காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா???... என் ராஜா!!!...”

என நேற்றிரவு அவள் எழுதிய வரிகள், அந்நேரத்தில் அவளுக்கு நினைவு வர,

அவள் மனம், விரும்பியவனின் விரல் பற்றிய நிறைவிலும், தன்னவனின் மடி சாய்ந்த திருப்தியிலும் குதூகலிக்க,

காதல் வரத்தை பரிசாய் பெற்றுக்கொண்ட இதயமோ அதிகமாய் படபடத்து துடிக்க, அதே நேரம், அவளின் விழிகளோ தன் இமைக்கதவுகளை அடைத்துக்கொள்ள முனைய….

“ச…..கி…………………..” என்ற அவனின் கதறல் அவள் செவிகளுக்குள் விழுந்த வேளை, அவளது விழிகள் அதற்கு மேலும் காத்திராது மூடிக்கொண்டது மெல்ல…

தொடரும்

Episode # 33

Episode # 35

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.