விடிய விடிய அழுது துவண்ட தங்களுக்கு துணை நின்று தேற்றியவள்... கமிஷனர் கிளம்ப சொன்ன பிறகும்... போக மனதின்றி தங்கள் முகத்தையே பார்ப்பதைக் கண்ட ஸ்ரீ வாசனின் தாய், அவள் கரத்தை ஆதுரமாக பற்றி,
“எங்களுக்கு நம்பிக்கை வந்துருச்சும்மா! அவன் தேறி வந்துடுவான்னு! நீ நிம்மதியா போ கண்ணு!”,
இரண்டு நாளாய் பாலையாய் இருந்த அந்த தாயின் முகத்தில்... பேச்சில்.. துளிர் விட்டிருந்த நம்பிக்கை மனதை நிறைக்க, அதன் பின் தான் அங்கிருந்து கிளம்பினாள்.
விடை பெறும் பொழுதும், “கூடவே இருந்து என் பையனை மட்டுமில்ல.. எங்களையும் காப்பாத்தி கொடுத்திட்டே!”, பாசத்துடன் முகவாயைப் பற்றி பாசமும்.. நெகிழ்ச்சியுமாய் வாழ்த்தி அனுப்பி வைத்த அந்த தாயின் வார்த்தைகள்... நெஞ்சுக்குள் இனிக்க... வழியெல்லாம் அந்த நினைவிலே மூழ்கி போயிருந்தவளை....
“அப்ப நாளைக்கு ஆபிஸ் போவ தானே குட்டி! ”, என்ற கமிஷனரின் கேள்வியில்...
‘பரணி!!!!’, வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தது மனம்!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
கிடப்பில் போட்டிருந்த ஆசையும் வேகமும் முண்டி அடித்துக் கொண்டு முன்னே வர... .அத்தனை பிரகாசம் அவள் முகத்தில்!!! உற்சாகத்துடன் நிமிர்ந்தவள்... வார்த்தை வரும் முன்னே, துள்ளலாய் மேலும் கீழும் தலையசைந்து தன் இசைவை வெளிபடுத்த..
சிறு தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டவராக,
“இரண்டு வாரத்தில் திருவிழா போறப்போ பெரியவரை பார்த்து பப் நடந்ததை பத்தி லேசாக பேசிடலாம்ன்னு பார்க்கிறேன்.”
என்றார் அடுத்து!!!
ஆம், அவருக்கு இன்னும் வீட்டிற்கு நடந்ததை சொல்லவில்லை என்ற மன உளைச்சல் இருக்க தான் செய்தது! ஸ்ரீ வாசனுக்கு நடந்தது விபத்து அல்ல கொலை முயற்சி என்ற யூகம் வலுப்பெற, அதை வழக்கு பதிவு செய்ய அவர் நினைக்கும் பொழுது தான் அந்த மத்திய அமைச்சரின் அழைப்பு.
“இப்போ ACPக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?”, என்பது போல ஆரம்பித்த அந்த அமைச்சர்,
“பப்க்கு போனப்போ மேல கையை வைச்சிட்டார்ன்னு அவர் மேல கொஞ்சம் கோபமாகிட்டாங்க பசங்க! நானும் கண்டிச்சிட்டேன்! நீங்களும் அந்த ஆக்ஸிடென்ட் பத்தி குடையாம விட்டுடுங்க! போனா வராதது உயிர் மட்டுமில்லை.. மானமும் தான்! வேற வீட்டு பொண்ணை நம்ம வீராப்புக்கு பலியாக்கிட கூடாது!” - என்ற மிரட்டல்!!
என்ன தைரியமாக என்னையே மிரட்டுகிறார்கள்! ஆட்டை கடித்து மாட்டை கடித்து என்னையேவா என்ற கோபம் ஓங்கியது அவருக்கு! இந்த மிரட்டலுக்கு எல்லாம் பின்வாங்க அவருக்கு எண்ணமே இல்லை என்றாலும், நடந்ததை வீட்டினருக்கு தெரிவிப்பதில் காலம் தாழ்த்தக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார்.
அவர் கவனமெல்லாம் ஸ்ரீ வாசனின் விபத்திலே இருக்க, ஹரிபிரசாத்தின் அலைபேசியை கண்டெடுக்க வேண்டும் என்பது தோன்றாமலே போனது - சிறு சிறு கவனக் குறைகள் தானே மாபெரும் சிக்கல்களை உருவாக்கும்!
அஞ்சனாவோ ஓர் இரவு நிகழ்வு தன்னை விடாது துரத்தும் என்பதை அறியவே இல்லை அவள்!
அது வரை பிரகாசமாக இருந்தவள் முகம் அவர் இப்படி ஒரு குண்டைப் போடவும் “புஸ்”ஸன்று காற்றுப் போன பலூனாகிப் போனது.
நடந்தது வீட்டிற்கு தெரிந்தால், சென்னை வாழ்க்கை அஸ்தமாகி போகுமே என்று வருத்தமடைந்தாள்.
இத்தனை நாள் பரணியை காணாமலே தன் மானசீக காதல் மடிந்து விடுமோ அலை மோதிய மனம்... அவனைக் கண்ட பின்.. கிடைக்காமல் போய் விடுவானோ என்று அலை மோதியது!
சில நிமிடம் தான் அந்த வருத்தம், கவலையின் பிடியில் சிக்கியவள்... இந்த சுழலில் சிக்க வைத்த இறைவனிடமே சரணடைந்து... சமாதானம் கண்டவளாக..
நம்பிக்கை தான் வாழ்க்கை!! பெல்லி பாய் தான் நம்ம நம்பிக்கை! முப்பது நாள்ல எப்படி பரணியை காட்டினாரோ பெல்லி பாய்! அவர் தான் பரணியை என் கையிலும் பிடித்து கொடுக்க மாட்டாரா என்ன? கண்டிப்பா என லவ் சக்சஸ் ஆகும்! இப்போ என்ன இரண்டு வாரம் இருக்கே.. ‘
‘எனிவே நாளைக்கு கண்டிப்பா பரணியை பார்த்தே ஆகணும்!’
என்ற எண்ணம் வலுப்பெற... அலுவலகம் செல்ல தீர்மானித்தவளுக்கு ஹர்ஷவர்தனிடம் அதை சொல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை!
பக்குவமற்ற பெண் மனதில் மையம் கொண்டிருந்தது பரணி, பரணி, பரணி மட்டுமே!
டிசம்பர் 19, திங்கட்கிழமை
மனம் முழுதும் வியாப்பித்திருந்தவனை அவனை நிஜமாகவே பிடித்திருக்கிறதா என்று தன் நெஞ்சத்திற்கு கேள்வியே வைக்கவில்லை அஞ்சனா!
எனக்கு அவனை பிடிக்கும்! என் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கடவுளே காட்டி விட்டார்! அவன் தான் ஆயுள் முழுவதும் உடன் வருபவன் அவன் உருவத்தை, அவன் பெயரை பதிய வைத்தது போல இதையே மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.