இதில் தாமஸிம், கிறிஸ்-ம் அனிக்காவிற்கு இந்த விஷயம் குறித்து தெரிவிப்பதோ, சம்மதம் கேட்பதையோ முதல் கடமையாக கருதவில்லை. எப்போதுமே அவளுடைய முடிவுகளை தாங்களே எடுத்து பழகியதாலோ என்னவோ, அவளிடம் இதுக் குறித்துச் சொல்லாததைக் குறித்து அவர்கள் பெரிது படுத்தவில்லை. சாராவோ கணவரும் , மகனும் இதைக் குறித்து மகளிடம் பேசியிருப்பார்கள் என்றெண்ணி இருந்து விட்டார்.
சம்மதம் தெரிவித்த அடுத்த நாளே விக்ரம் அவர்கள் வீட்டில் தன் இரு கைகள் நிறைய ஷாப்பிங்க் பைகளை தூக்கவியலாமல் தூக்கி வந்து தாமஸ் முன் நின்றான். அத்தனையும் அனிக்காவின் விருப்பத்திற்கேற்ப வாங்கியவை தான். விலையுயர்ந்த துணிமணிகள், நகைகள் என பெண்கள் விரும்பும் அத்தனையும் அவற்றில் இருந்தன.
அவற்றை வாங்கிக் குவிக்கும் போதே அனிக்கா அவன் செலவழித்த தொகை குறித்து வாய் பிளந்திருந்தாளே..... பல பெண்களோடு பழகிய உறுதியிலேயே அவன் அவளை அன்று தன்னோடு ஷாப்பிங்க் கூட்டிச் சென்றது. எப்படியாகிலும் தான் இறைக்கும் பணத்தைப் பார்த்து மற்ற பெண்கள் மயங்குவது போல, இவளும் மயங்கி விடுவாள் என்கின்ற அசையாத நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
தன் மகளுக்காக இத்தனையாய் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டு வந்து நிற்கும் விக்ரமை பைகளை சுமக்க விட்டவாரே நிற்க செய்ய தாமஸ் விரும்பவில்லை. முதலில் அனிக்காவை வரவழைத்து அவற்றை வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று எண்ணியவர் சட்டென்று மனதை மாற்றிக் கொண்டார். கிறிஸ் அலுவலகம் செய்யாமல் வீட்டில் இருந்திருந்தால் ஒருவேளை அவர் செய்ததை அனுமதிக்க வாய்ப்பு இருந்திருக்காது. சாராவும் , பிரபாவும் மதிய தூக்கத்திலிருக்கும் நேரம் விக்ரம் வந்திருந்ததால் தாமஸ் அவராகவே முடிவெடுத்து விக்ரமை அனிக்காவின் ரூம் இருக்கும் மாடிப் பகுதியைக் காண்பித்து அங்கு சென்று அவனுடைய பரிசுகளைக் கொண்டு போய் கொடுக்கச் சொன்னார்.
அதே நேரம் அவள் அறையில் இருந்த அனிக்காவோ தன்னுடைய அம்மா சொன்னதையே வேதவாக்காக பின்பற்றிக் கொண்டு அவரோடு ஒட்டிக் கொண்டே கடந்த நாட்களைக் கடந்திருக்க, தினம் தோறும் பொழுது போக்க புது புது ரெசிப்பிகளாக முயற்சி செய்து வீட்டினரை சோதனைச் சுண்டெலி ஆக்கியவளாக இருந்தவள் அம்மா தூங்க சென்ற பின்னரே சற்று முன்னர் தன்னுடைய அறைக்கு வந்திருந்தாள்.
தன்னுடைய அறையில் மட்டும் அவளுக்கு கிடைக்கும் "Say No to Dupatta" சுதந்திரத்தை பயன்படுத்தியவள். துப்பட்டாவை அணியாதவளாய், படுத்தவாக்கில் கைகளை ஊன்றிக் கொண்டு லேப்டாப்பில் கவனத்தை பதித்துக் கொண்டிருந்தாள். கால்கள் காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தன.
அலையன்ஸ் என்று அண்ணி ரூபனைச் சொன்னதும், அம்மா திருமணம் வரை என்னோடு டைம் ஸ்பெண்ட் பண்ணு என்றுச் சொன்னதுமாக அவளது கற்பனையில் ரூபன் தான் தனக்காக வீட்டினர் பார்த்திருக்கும் வரன் என்ற எண்ணம் தோற்றுவித்திருக்க அதைக் குறித்து அவள் எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளுமளவு ரூபனும் , அவன் வீடும் அவளுக்கு அந்நியமும் இல்லையே?
அப்போதுதான் கேட்டது தடாரென அதிரும் அவள் கதவின் ஒலி. வழக்கமான காற்றின் அழுத்தத்தை விடவும் அதிகமான ஒலியாயிற்றே என்றெண்ணியவள் எட்டிப் பார்க்க, அவளது அறைக் கதவு முழுமையாக திறந்து கிடக்க, வாசல் முழுவதையும் அடைத்துக் கொண்டு நின்றாற் போல உயரமாக நின்றுக் கொண்டிருந்தான் விக்ரம்.
வீட்டில் யாரும் நம்முடைய அறைக்கு இப்படி சட்டென்று வந்ததில்லையே? இவன் எப்படி? என வெகுவாக குழம்பினாலும் சட்டென்று தன்னைச் சரிப்படுத்தி எழுந்து உட்கார்ந்தாள் அனிக்கா, கை வாக்கில் எங்கோ எறிந்திருந்த துப்பட்டா மட்டும் இன்னும் அவள் கண்ணில் படாமல் கண்ணாம் மூச்சி ஆடிக் கொண்டிருந்தது.
அவள் துப்பட்டாவைத் தேடிய ஓரிரு நொடிகளுக்குள்ளாக அவளை அளவெடுத்தன விக்ரமின் லேசர் கண்கள்……
செக்ஸி……… சொல்லியவன் பார்வையிலும் சொல்லிலும் விதிர்த்து அவசரமாய் பக்கத்திலிருந்த டவலை தன் மீது போர்த்திக் கொண்டாள்.
அவனை கீழே அழைத்துச் சென்று விடும் நோக்கத்தில்,
வாங்க கீழ அம்மா அப்பா கிட்ட கூட்டிட்டு போறேன் என்று புறப்பட்டவளை,
என்னை மாமாதான் இங்க அனுப்பி வச்சாங்க என்றான் அவன்.
ஏற்கெனவே தாமஸை அவன் உறவு முறையெனச் சொல்லி மாமாவென்று அழைத்திருந்ததால் அவளுக்கு அது வித்தியாசமாக தெரியவில்லை.
அப்பாவா? எதுக்கு?
இதோ இந்த கிஃப்ட்ஸ் தரச் சொல்லி தான்.
அப்போதுதான் அவனது கைகளில் இருந்தவற்றை கவனித்தவள்,
இதெல்லாம் எனக்கெதுக்கு?