அந்த உணர்வில், தன் மகளுக்கு தாயாக தான் கொடுக்க வேண்டிய தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்ட எண்ணியவராக,
“அதுக்கென்ன செல்லம், வாழப் போறவ நீதானே,உனக்கு பிடிச்ச மாதிரி இருந்தா தான் மேற்கொண்டு பேசுவோம். நீ கவலைப் படாதே. இந்த மாப்பிள்ளை இல்லன்னா என்ன வேற பார்க்கலாம் எனச் சொல்லும் முன் தாமஸ் தன்னுடைய பொறுமை இழந்தவராக மனைவியை நோக்கி ஆங்காரமாய் கத்த தொடங்கினார்.
“ஓஹோ, அப்ப எல்லாம் உன்னோட பிளான் தானா. பிடிக்கலைன்னு மகளை சொல்ல வச்சு மாப்பிள்ளையை தட்டி விட்டா மட்டும் நான் அனிக்காவை உன்னோட அண்ணன் மகனுக்கு கட்டிக் கொடுத்திடுவேன்னு கனவும் காணாத”
என்றவரின் பேச்சைக் கேட்டு அவமானத்தில் குன்றியவராக சாரா நிற்க, சத்தம் கேட்டு எழுந்து வந்த பிரபாவும் என்னச் சொல்வெதென்று புரியாமல் மௌனம் காக்க, தன் தந்தையின் இத்தகைய பேச்சையும் , குரலையும் முன்பொருபோதும் அறிந்திராத அனிக்கா தான் தன் மனதை வெளிப்படுத்தி தனக்கு விக்ரமை பிடிக்கவில்லை என்றுச் சொன்னதால் தானே தன்னுடைய அம்மாவிற்க்கு இத்தனை பிரச்சினைகளும் என மனம் வாடியவளாக ஓரத்திலிருந்த டைனிங்க் டேபிளில் கைகளில் தலையைத் தாங்கி குனிந்தவளாக அமர்ந்து இருந்தாள்.
தாமஸ் அத்தோடு நிற்காமல் மணிக்கணக்காக தன்னுடைய ஆத்திரத்தை மனைவியிடம் கொட்டிக் கொண்டு இருந்தார்.
ரூபனுக்கும் அவன் குடும்பத்திற்கும் தனக்கு சரிசமமாக வருகின்ற எந்த அருகதையும் இல்லை என்றும், தன்னுடைய சொத்திற்காகவே தன் மகளை அவன் மணக்க கேட்பதாகவும், அத்தோடு நில்லாமல் தன்னுடைய மகளை திருமணத்திற்கு பின்னர் சம்பளமில்லா வேலைக் காரியாக பயன்படுத்திக் கொள்ளவும் தான் அவன் எண்ணியிருப்பதாகவும் அவர் பேசிக் கொண்டிருந்தார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாக அவரது பேச்சுக்கள் இருந்தன.
கூடவே விக்ரமுடனான தன் மகளின் திருமணத்தில் எந்த மாற்றமுமில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்தார். அன்றைய தினத்தினின்று அந்த வீட்டின் கலகலப்பிற்க்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டது. பஞ்சம் ஏற்படாமல் எப்படி இருக்கும்? தன் எதிர்காலத்தை எண்ணி, எண்ணியே அனிக்காவைத் தான் பயமும் நடுக்கமும் சூழ்ந்துக் கொண்டதே.
மறுபடி ஒருமுறை வந்து விக்ரம் அழைத்தும் அவள் அவனுடன் வெளியேச் செல்லவில்லை. அவளின் செயலால் விளையும் விக்ரம் மற்றும் தன் அப்பாவின் கோபப் பார்வைகளை அவள் அறிந்தே இருந்தாள். ஆனால், ரூபன் சொல்லை மீறி விக்ரமோடு அனிக்காவால் தனியாக எங்கும் செல்ல இயலவில்லை. இன்னுமெத்த்னை நாட்களுக்கு இப்படிச் செய்கிறாய் பார்க்கிறேன் என்று சிறுத்தையாய் சீறிய விக்ரமையும், அவனை அவமானப் படுத்துவது தன்னையே அவமானப் படுத்தியதாக எண்ணி கோபத்தில் பொறிந்த அப்பாவையும் பார்த்தவளுக்கும் அதே தான் தோன்றியது……… இன்னும் எத்தனை நாட்களுக்கு ?
இந்திரா தன்னுடைய மகனைக் கவனித்துப் பார்த்துக் கொண்டு மனதில் வேதனையோடு இருந்தார். அப்பொழுது அவருக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. எப்படியும் இன்று வரை அனிக்காவின் திருமண நிச்சயம் கூட நிகழவில்லை. மறுபடி ஒருமுறை அவர்களது வீட்டிற்கு முறையாகச் சென்று பெண் கேட்டால் என்ன? வெளிப்படையாக பேசி தீர்வு காணலாமே? என்பது தான் அது.
அவர் அடுத்த நாள் வீட்டிற்கு வரப் போவதாக தெரிந்தவுடன் மறுபடியும் தாமஸின் ஆணவ முகத்தை அவர் வீட்டினர் பார்க்க முடிந்தது. சாரா மேலும் மேலும் வேதனையோடு அவரின் கடுஞ்சொற்களைக் கேட்டவாறு இருக்க தந்தையின் பேச்சுக்களைக் கேட்ட கிறிஸ் தன் அன்னையின் வேதனையை தணிக்க முயன்றவனாக அருகே வந்து,
அம்மா அத்தையை இப்ப நம்ம வீட்டுக்கு வர வேணான்னு சொல்லுங்க, வீணா பிரச்சினை எதுக்கு? அப்படியும் நமக்கு இந்த சம்பந்தம் சரிவராது சயின்ஸ் படி சொந்தத்துக்குள்ள மேரேஜ் செய்யிறது ஃப்யூச்சர் ஜெனரேஷனுக்கு நல்லது இல்ல. எனக் கூறிக் கொண்டிருக்க, மகனின் பேச்சினூடே தன்னுடைய பேச்சை தாமஸ் இணைத்துக் கொண்டார்.
அப்படி நாளைக்கு அவங்க யாரும் வந்தாங்கன்னா நான் சொந்த பந்தம்னு பார்க்க மாட்டேன், நான் பேசற பேச்சில அவங்க உறவே இல்லாம போனாலும் பின்னாடி நான் கவலைப் பட மாட்டேன். என கர்ஜித்தவர் தான் சொன்னதைச் செய்வார் என்பதற்கு நூறு சதவிகித வாய்ப்புக்கள் இருந்தன.
திகைத்து நோக்கிய மனைவியிடம் சொல்லாமல் தாமஸ் விடை பெற, தன் தாயையும், தங்கையையும் கவனித்துக் கொள்ளச் சொல்லி கண்களாலேயேச் சொல்லி பிரபாவிடம் கிறிஸ் விடை பெற இருவரும் அலுவலகத்திற்கு புறப்பட்டனர்.