காதை பொத்திக் கொண்டு தூங்க முயற்சித்தாள் சதீரஞ்சனி. முடியவில்லை அவளால். கௌதமின் காந்த குரல் அவளைஇழுத்துக் கொண்டே சென்றது, கற்பனையுமில்லை, அசரீரியும் இல்லை,
“எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாளில் நீ கெளம்புற மாதிரி இருக்கும்ல மச்சி,, சோ அதுவரைக்கும் நானும் உன் வீட்டிலேயே தங்கிக்கிறேன்டா”என்று சொல்லியிருந்தான் அவன்.அவர்களுக்குள் இது வழக்கம் தான். பொதுவாக கௌதம் ரஞ்ஜினியின் வீட்டிற்கு வந்தாலே அவளுக்கு உறக்கம் என்பது மறந்து போகும்.
நண்பர்கள் இருவரும் அரட்டை அடிப்பது, செல்ல சண்டைகள் போடுவது, படம் பார்ப்பது, காராஓகேவில் பாட்டு பாடுவது என்று ஓயாமல் எதையாவது செய்வது வழக்கம், இந்த முறை சதிரஞ்சனியால் அதே போல உற்சாகமாய் இருக்க முடியவில்லை.
“போகாதே !”என்ற ஒரு வார்த்தை அவனிடமிருந்து வந்து விடாதா ?” என்ற தவிப்பினிலேயே கிடந்தாள் அவள்.
“நீ டீவி பாரு கௌதம்.. எனக்கு தூக்கம் வருது.. குட் நைட்” என்றுவிட்டு அவள் போகும்போது கூட வெகு இயல்பாய்,
“ அப்படியா? சரி சரி டீ நீ தூங்கு போ” என்றுவிட்டான் அவன். அதோடு அவன் டிவியில் மூழ்கி போக, தற்பொழுது பாட்டும் பாடிக் கொண்டிருந்தான்.
உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்குமுன் இறப்பேன்,,!
கண்மணியே!
காதலால் கசிந்துருகும் குரலில் அவன் பாடிட அவளின் காதல் மனம் வெம்பியது, தனக்காக இல்லையா? அவனது பாடலும், தேடலும் தன்னில் அடங்காதா? காதலே ஒருவித மாயம்தானே! அந்த மாயம் தன் வாழ்வில் நிகழவே போறதில்லையா? இப்படியெல்லாம் மனம் வெம்பியது. உள்மனமோ எள்ளி நகைத்தது.
“இது நீயே போட்டுக்கிட்ட சிக்கல் சதி! காதல் என்பது தவறான விஷயம் இல்லை என்ற பட்சத்துல, அதை நீ ஏன் வெளிப்படுத்தவில்லை? அவனுக்கு எப்படித் தெரியும்? அவன் உன் ந/ண்பனாக இருந்துவிட்டு போகட்டும், உன்னை நன்கு அறிந்தவனாகவும் இருக்கட்டும்.அதற்காக உன் காதல் மனதை அவன் கண்டுகொள்ளவில்லை என்று சாடுவது சரியாகுமா? அழுதபிள்ளை தானே பால் குடிக்கும்? உன் காதலுக்காக நீ எதை செய்துவிட்டாய்? எதை செய்து தோற்றதற்காக நீ அழுகிறாய்?”
“..” . அவளால் பதிலளிக்கமுடியாத கேள்வியை உள்ளமது கேட்டிடவும், சட்டென எழுந்து கொண்டாள்.
“ சொல்லனும்..இந்த மரமண்டையில ஏறுர மாதிரி சொல்லனும்” என்று சொல்லிக் கொண்டவள், இதுவரை அவனுக்காக வாங்கி எழுதிவைத்து, தனது அலமாரியில் பூட்டி உறங்க வைத்த வாழ்த்து அட்டைகளை கையில் எடுத்துக் கொண்டாள்.
நூற்றுக்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள். அவ்வப்போதென அவனுக்காக வாங்கி சேர்த்து வைத்திருந்தாள். கவிதைகளாக வார்த்தைகளையும் கோர்த்து வைத்திருந்தாள். அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவன் முன் நின்றாள்.
“ ஹேய் தூங்கலையாடா?” தேன்தடவிய குரலில் கேட்டான் கௌதம்.
“நீ எங்க தூங்க விடுற?”
“ஏன் பாட்டு ரொம்ப சத்தமா இருக்கா?”
“பாட்டு மட்டும் சத்தமா இல்லை கௌதம்..”
“ வேற என்ன சத்தம் ?”
“நீ! நீ எனக்குள்ள பண்ணுறஇம்சை தான்!” என்றாள் சதீரஞ்சனி,
“புரியல டா”
“உனக்கு எதுதான் டா புரிஞ்சது? டியூப்லைட்.. புரிஞ்சிருந்தா நான் இந்நேரம் இப்படியா இருப்பேன்! “என்று அவள் குரல் உயர்த்தவும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால் அதையும் காட்டிக்கொண்டு அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வனேன்? என்ற ஜாக்கிரதை உணவர்வில் அமைதியாகவே இருந்தான் கௌதம்.
கையில் இருந்த வாழ்த்து அட்டைகளை ஒரு ஓரமாய் வைத்தவள்அவனருகில் பொத்தென அமர்ந்து விழிகளை மூடிக் கொண்டாள்.
“போதும் கௌதம்.. நீ என்னை வெறுத்தாலும் பரவாயில்லை.. உனக்கிது தெரிஞ்சாகனும்”
“..”
“நான் சொல்லியே ஆகனும்”
“..”
“இந்த உணர்வும் அதை வெளிப்படுத்துற விதமும் ஆணுக்கு மட்டும் சொந்தமில்லை..”
“..”