04. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்
அவளது முகம் தன் மனக்கண்ணில் வந்து போக, அவன் நிலை குலைந்தான்…
கைகள் தானாக நெஞ்சில் சாய்ந்திருந்த குட்டி தேவதையின் தலையினை வருடிக்கொடுக்க,
“பிரஷன்……………..”
குரல் கேட்டு நினைவுகளின் தாக்கத்திலிருந்து வெளிவந்தவன், தன் அன்னையினைப் பார்க்க,
அவரின் விழிகள் கலங்கியிருந்தது…
கைகளை உயர்த்தி, தாயின் விழிகளை துடைத்தவன், மகளை கை காட்டி சைகையில் கையசைக்க, அவரும் புரிந்து கொண்டு மௌனமானார்…
“பாட்டி உனக்கு தோசை கொண்டு வரட்டா?...”
பேத்தியின் முகம் பற்றி அவர் கேட்க, அதற்குள் உறங்கி விட்டிருந்தாள் அவள்…
“ம்ம்ம்….” அவள் சிணுங்கிக் கொண்டே அவன் நெஞ்சில் மேலும் ஒன்ற, மகளின் முதுகினை வருடியபடி தட்டிக்கொடுத்தான் அவன்…
“நல்ல அப்பாடா நீ?... அவ சாப்பிடாம தூங்குறா… நீயும் தட்டிக்கொடுக்குற?...”
“மணி பத்து தாண்டிடிச்சு… இன்னும் ஏன் சாப்பிட வைக்காம இருக்குற மம்மி நீ?...”
“அது சரி… உன் மக நீ வந்தா தான் சாப்பிடுவன்னு அடம்பிடிக்குறா… அதை எல்லாம் நீ ஏன்னு கேட்கமாட்ட… என்னை மட்டும் கேட்க வந்துட்ட?... போடா…”
அவர் கோபமாய் சொல்லிவிட்டு முகம் திருப்பிக்கொள்ள,
தாயின் கன்னம் தொட்டு திருப்பியவன்,
“நீ சாப்பிட்டியா கலை?...” எனக் கேட்க, அவரிடத்திலோ மௌனம்…
“சொல்லு கலைம்மா… சாப்பிட்டியா?...”
அவன் கேட்டுக்கொண்டே இருக்க,
“நீ வராம, உனக்கு சாப்பாடு கொடுக்காம, அவ என்னைக்கு சாப்பிட்டிருக்கா பிரஷன்?....” என்றபடி வந்தார் அவனின் தந்தை ராஜேஷ்வரன்…
“வாங்கப்பா…” என எழுந்து கொள்ள இருந்தவனை தடுத்து அவனது பாதத்தின் அருகில் அமர்ந்தார் அவர்…
காலை மடக்கி கொள்ள முனைந்தவனை தடுத்து, அவனது காலை பிடித்து தன் மடியில் போட்டுக்கொள்ள அவர் முயல, அவனோ மறுத்தான்…
“அப்பா… என்னப்பா இது??… நீங்க போய்….” அவன் விடாப்பிடியாய் மறுக்க,
“உன் மகளை நீ நெஞ்சில போட்டுப்ப… உன் அம்மா என்னடான்னா, தன் பையன் தலையை தன் மடியில சாச்சிப்பா… அப்போ நான் என் பையன் காலை என் மடியில போட்டுக்க கூடாதா?...”
அவர் கோபத்துடன் உரிமையாய் கேட்க, அவனோ சிரித்தான்…
“அது வேற… இதுவேறப்பா…”
அவன் பிடிவாதமாய் மறுக்க, அவர் உடும்பாய், மகனின் காலைப் பிடித்து தன் மடியில் போட்டுக்கொண்டார்…
தகப்பனின் விரல்களை அவன் பற்றிக்கொள்ள, அவரும் அவனது கரத்தினை தட்டிக்கொடுத்தார்…
“வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சதாப்பா?...”
அவர் தன்மையுடன் கேட்க, “ஆமாப்பா… எல்லாம் முடிஞ்சது… இன்னும் இரண்டு நாள்ல நான் கிளம்ப வேண்டியது தான் பாக்கி…”
“இன்னும் இரண்டு நாள்லயா?... என்னப்பா சொல்லுற?...”
கலைவாணி அதிர்ச்சியுடன் கேட்க,
அவனோ தகப்பனிடத்தில் பதில் கூறினான்…
“டேய்… கேட்குறது நான்… நீ என்ன உன் அப்பாகிட்ட பதில் சொல்லுற?...”
கலைவாணி அதட்ட,
“நீ ஏன் சாப்பிடாம இருக்குற?... அதுக்கு முத பதில் சொல்லு… அப்புறம் உன் கேள்விக்கு நான் பதில் சொல்லுறேன்….” என்றான் அவனும்…
“அது…. வ…ந்து….. எனக்கு பசிக்கலை…”
“ஓஹோ… அப்போ எனக்கும் பதில் சொல்லணும்னு தோணலை…”
“அடடா… ஆரம்பிச்சிட்டீங்களா இரண்டு பேரும்?...”
ராஜேஷ்வரன் தன் தலையில் கைவைத்துக்கொள்ள, கலைவாணியோ சிரித்தார்…
“சிரிச்சி மழுப்ப வேண்டாம்… எத்தனை தடவை சொல்லியிருக்குறேன்… நான் வரலைன்னா வெயிட் பண்ணாம சாப்பிடணும்னு… ஏன்ம்மா கேட்கவே மாட்டிக்குற?....”
அவன் ஆதங்கத்துடன் கேட்க,
“இதோ தூங்குறாளே இவளுக்கு என்ன வயசு இருக்கும்?... இவ வெயிட் பண்ணுறா நீ வரணும்னு… அப்போ என் பையன் நீ… நீ வர்றதுக்கு நான் வெயிட் பண்ண மாட்டேனா?...”
அவரும் நறுக்கென்று பதில் சொல்ல,
“என்னம்மா இது சின்னப்பிள்ளையாட்டம்?... அவ தான் புரியாம பண்ணுறான்னா நீங்களும் கூட சேர்ந்துட்டு ஏன்ம்மா இப்படி?...”
“நான் புரிஞ்சு தான் பண்ணுறேன்… என் பையன் வராம எனக்கு சாப்பிட பிடிக்கலை… அவ்வளவுதான்….”
அவர் அந்த பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவனோ அமைதியாக அவரையே பார்த்தான்…