அதைப் பார்த்த கலைவாணிக்கு கோபம் ஏற,
“கலைம்மா… நீங்க இரண்டு பேரும் பேசுறதைப் பார்க்குறப்போ, எனக்கு வீட்டுலேயே இருந்துடலாம்னு தோணுது… நல்லா ஜாலியா இருக்குது…”
அவன் தன் மனதார கூற, கலைவாணியும், நைனியும் தங்களை ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர் வேகமாக…
“பாட்டி… பார்த்தீயா நாம கொஞ்ச நேரம் முன்னாடி போட்ட பிளானையே இந்த பிரசன் மாத்திட்டான்…”
“ஆமாடா தங்கம்… இவன் முன்னாடி இனி என்னைக்கும் சண்டையே போடக்கூடாது நாம…”
“ஆமா பாட்டி…” என்றவள், அவனின் மடியில் இருந்து இறங்கி, அவரை நோக்கி செல்ல, அவர் பேத்தியை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டார்…
“நீ வாடா தங்கம்… நாம போய் தோட்ட்த்துல விளையாடலாம்…” என்றவர் பேத்தியை தூக்கிக்கொண்டு எழுந்து கொள்ள,
“கலைம்மா… ஒரு நிமிஷம்…” என்றவன், தன் கரத்தினால், தாயின் வாயையும், மகளின் வாயையும் துடைத்துவிட்டு விட்டு,
“ம்ம்… இப்போ போயிட்டு வாங்க…” என கூற, இருவருமே, சற்று நேரம் அப்படியே நின்று அவனைப் பார்த்தனர்…
அவர்களின் பார்வையினை உணர்ந்தவன்,
“அப்பா.. ஆயிரம் தான் இருந்தாலும், அம்மா சமையலே சமையல் தான்லப்பா… கலைன்னா கலை தான்…” என தாயை புகழ, நைனி கண்களை சுருக்கிக்கொண்டு கலைவாணியைப் பார்த்தாள்…
ராஜேஷ்வரன் நமுட்டு சிரிப்புடன் மகனுக்கு பதில் சொல்லும் முன்னர்,
“பாட்டி… இந்த பிரசன் மறுபடியும் நமக்குள்ள சண்டை வரவைக்க ட்ரை பண்ணுறான்… வாங்க நாம போயிடலாம்…” என்றாள் நைனி…
“ஆமாடா குட்டி… நீ வா நாம போகலாம்…” என்றவாறு அவர் பேத்தியை தூக்கிக்கொண்டு செல்ல, ராஜேஷ்வரரோ விழுந்து விழுந்து சிரித்தார்…
“எதுக்குப்பா இப்படி சிரிக்குறீங்க?...”
“இவங்க இரண்டு பேரையும் நீ ஹேண்டில் பண்ணுற விதத்தை நினைச்சா என்னால சிரிப்பை அடக்க முடியலைடா…”
“இரண்டு பேரும் வேற வேற இல்லப்பா…. நைனியும் மம்மியும் மனசளவில ஒன்னுதான்… இரண்டு பேருமே குழந்தை தான்…”
“உண்மைதான்ப்பா… உன் அம்மாவும் நைனி மாதிரி தான்…” என்றவர், மனைவி சென்ற திசையையேப் பார்த்துக்கொண்டிருக்க,
“சாப்பிடுங்கப்பா…” என்றான் அவன்…
“நான் சாப்பிட்டேன்…” என்றதும், சிரிப்புடன் அவன் எழுந்து கொள்ள முயல, அவனின் கைப்பிடித்து தடுத்தார் அவர்…
“என்னப்பா?..” என கேள்வியுடன் பார்த்தவனை அமர சொன்னவர்,
“சாப்பிடு….” என்றார் தட்டை அவனின் முன் வைத்து…
“இல்லப்பா நான் சாப்பிட்டேன்…” என அவன் மறுக்க,
“நீ சாப்பிட்டதை தான் நான் பார்த்தேனே… மாத்தி மாத்தி இரண்டு பேருக்கும் ஊட்டி விட்டுட்டு, நீ எதுவுமே சாப்பிடலை…”
“அம்மாவும், நைனியும் ஊட்டி விட்டாங்களேப்பா…”
“ஒருவாய் ஊட்டி விட்டா பசி ஆறிடுமா?...”
“எனக்கு அதுக்கே வயிறும் மனசும் நிறைஞ்சிட்டுப்பா…” என்றான் அவன் மனதார…
“ஆனா எனக்கு நிறையலைப்பா…” என்றார் அவர் அவனின் முகம் பார்த்தபடியே…
தகப்பன் சொல்ல வருவது புரிந்து, அவரைப் பார்த்தான்….
“சாப்பிட்டு எழுந்திரு பிரசன்…. உன் அன்புக்காகவும், பாசத்துக்காகவும் இரண்டு குழந்தைங்க ஏங்கிட்டிருக்காங்கன்னு மறந்துடாதப்பா… அட்லீஸ்ட் அவங்களை நினைச்சாவது சாப்பிடு….”
மகனின் தோளில் கைவைத்து சொல்லிவிட்டு அவர் சென்றதும்,
சாப்பாட்டில் தன் கையை வைத்து உண்ண ஆரம்பித்தான் அவன்…
ஏனோ இரண்டு வாய் எடுத்து வைத்ததும், சற்று நேரத்திற்கு முன் அவனது நினைவிற்குள் வந்து சென்ற முகம் மீண்டும் அவனது நெஞ்சில் தோன்ற,
வாயருகே கொண்டு சென்ற சாப்பாட்டினை உண்ணாமலேயே அப்படியே வைத்திருந்தான் அவன்…
கண்கள் தானாக அவளின் முகத்தினை காண, மனமோ அவளை நினைத்த்து வேகமாக…
அதே நேரம்,
கேஷ் கவுண்டரில் அமர்ந்திருந்த சந்தாவிற்கு விக்கல் எடுத்தது…