(Reading time: 12 - 23 minutes)

ங்கையின் கழுத்தில் தாலியா? என அதிர்ந்து கிறிஸ் பிரபாவைப் பார்க்க அவளுக்கு இது எப்போது நடந்தது என்பதே புரியவில்லை. இங்கே என்னதான் நடக்கின்றது? எதுவானாலும் அனிக்கா எழுந்து உண்மைச் சொன்ன பின்னே இவனுக்கு தகுந்த பாடம் கற்பித்தாக வேண்டும் என்றெண்ணிய தாமஸ் தான் கூட்டி வந்த காவலர் முன்னே தன் கோபத்தை காட்டவியலாத சங்கடத்தில் இருந்தார்.

தான் அனிக்காவின் மயக்கம் தெளியும் வரை சிறிது நேரம் காத்திருப்பதாகக் கூறி காவலர் காத்திருக்க, ரூபனை கிறிஸ் வெளியே அழைத்தான்.

நிகழப் போவது தெரிந்திருந்தாலும் ரூபன் அயரவில்லை, ஜீவனை அனிக்காவை விட்டு நகராதே என்றவனாக அவனைப் பின் தொடர்ந்தான். ஹாஸ்பிடலின் பின்பக்கமாக வந்திருந்தனர் பதறியபடியே பிரபாவும் பின்னாக வந்திருந்தாள்.

“வேண்டாங்க எந்த பிரச்சினையும் வேண்டாம்" என் மனைவி கூற வருவதைக் கேட்கும் நிலையில் கிறிஸ் இல்லை. என் தங்கச்சியையா நீ அடிச்ச என்றவனாய் ரூபனை ஆத்திரம் தீர மாறி மாறி கன்னங்களில் அறைந்திருந்தான்.

"விடுங்களேன்" மனைவி அவனை பின்னிழுக்க ரூபன் கன்னமும் கண்களும் கலங்கியிருந்தாலும் இன்னும் எத்தனை அடித்தாலும் எனக்கு போதாது என வரம் யாசிப்பவனைப் போல கிறிஸ்ஸின் அடிக்காக காத்திருந்தான்.

"ப்ளீஸ் சொன்னாக் கேளுங்களேன். அனிக்கா செத்துப் போறேன்னுச் சொன்னா அதான் கோபத்தில தம்பி அடிச்சிட்டாங்க, அவளுக்கு ரூபன் தம்பியை தான் பிடிக்கும் போலிருக்கு நாம தான் அவ விருப்பம் கேட்காம எல்லாம் அரேஞ்ச் பண்ணிருக்கோம். ப்ளீஸ் கேளுங்களேன்" …என்றவளின் அனிக்கா செத்துப் போறேன்னு என்பதில் சிக்கிக் கொள்ள விதிர்த்து மனைவியைப் பார்த்தான்.

அவனுடைய முதல் விளையாட்டுப் பொம்மை, முதல் குழந்தை அவன் தங்கை அவள் வாயிலிருந்து இப்படியும் வார்த்தை வந்ததா? வென அவனை அது உலுக்கியெடுக்க எல்லோரையும் மறந்து மறுபடி தங்கையைப் பார்க்க ஹாஸ்பிடலினுள்ளே அவன் விரைந்தான், கணவன் பின்னேயே பிரபாவும் விரைந்தாள்.

கிறிஸ்ஸிடம் அடி வாங்கிய நேரம் வாயினுள்ளே சதைக் கிழிய உதட்டில் உப்புக் கரித்த ரத்தத்தை துடைத்தவன், எப்போது வந்தானோ? என்னவெல்லாம் பார்த்தானோவென எண்ணியவனாக தன் எதிரில் நிற்கும் தீபனைப் பார்த்தான். அருகில் வந்த தீபன் தம்பியை அணைத்துக் கொண்டான்.

நெருங்கிய ரத்த சொந்தங்கள் இப்போது யாராவது ஒருவர் வாய் வார்த்தை தவறாக விட்டாலும் குடும்பமே இரண்டுப் பட்டுப் போகவேண்டிய சூழல் இருந்தது. பெரியவர்கள் நிதானம் தவறினாலும் இளையவர்கள் பொறுமைக் காத்தார்கள். தம்பியின் வாழ்வு கருதி தீபன் மௌனம் சாதித்தான். தங்கையின் மனம் புரியாமல் முடிவெடுத்து விட்டோமோ? என்கிற குற்றவுணர்ச்சியில் கிறிஸ் தங்கை வாயினின்று பதில் கேட்டபின் முடிவெடுக்க காத்திருந்தான்.

தாமஸ் தன் மகள் பொய் சொல்லமாட்டாள் என்பதை அறிவாராகையால் அவள் கண்விழித்து ரூபனை கை நீட்டி குற்றவாளியாக்கிய நொடியே சட்ட ரீதியாக அவனை உரிய விதத்தில் தண்டிக்கக் காத்திருந்தார். அவன் உருவாக்கியவைகள் அவன் பிசினஸ் அத்தனையும் அழித்து எப்படி அவனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்று திட்டங்கள் பல அவர் உள்ளத்தில் உதித்தவாறு இருந்தது.

ஜீவன் அங்கு நிகழும் யாவையும் எவ்வாறு திரும்புமோ எனக் கலக்கத்தில் வீட்டிலிருந்து வந்துக் கொண்டிருந்த அத்தனை போன் காலுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அத்தனை பேரையும் தவிக்கவிட்டிருந்தவள் அரை மணி நேரத்தில் மயக்கத்தினின்று விழிக்க, டாக்டர் அனுமதிக் கொடுத்தவுடன் ஒவ்வொருவராக அந்த அறையில் கூடினர்.

காவலர் அனிக்காவின் அருகில் வந்து , உங்க அப்பா உங்களை மிஸ்டர் ரூபன் கிட்னாப் செஞ்சிட்டதாக கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கிறார். மிஸ்டர் ரூபன் உங்களுக்கும் அவருக்கும் ஏற்கெனவே மேரேஜ் ஆகி விட்டதாக கூறுகிறார். ஆனால், உங்க அப்பா உங்களுக்கு இன்னும் மேரேஜ் நடக்கவில்லைன்னு கூறியிருக்கிறார். நீங்கள் உண்மை சொல்வதைப் பொறுத்தே நாங்கள் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும். என்றுக் கூறினார்.

அனிக்காவிற்க்கு நடப்பது என்னவென்று தலையும் வாலும் புரியவில்லை. கழுத்தினூடாக ஏதோ நெருடிக் கொண்டிருக்க தன்னிச்சையாக அதனை முன்னிழுத்துப் பார்த்தாள். அழகிய சின்னதொரு செயின் அதில் சிலுவை வடிவ அந்த தாலி புதுமெருகோடு பளிச்சிட்டது.

தொடரும்

Episode # 26

Episode # 28

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.