26. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
அவளுடைய தோள்கள் இரண்டிலும் ஊர்ந்தன அவன் கைகள் அவளோ இப்படி ஒன்றை எதிர்பாராதிருந்ததால் தனக்குள்ளே இறுகிப் போய் பாறையாக உறைய. சட்டென்று அவன் கரங்கள் தன் எல்லையைக் கடந்து அவள் கழுத்தை தாண்டி இறங்க முற்படவும் நடு நடுங்கிப் போனாள்.
தன்னருகே அமர்ந்துக் கொண்டு பயணிக்கும் அனிக்கா நடுங்குவதைப் பார்த்த பிரபா தன்னோடு அவளைச் சாய்த்து அணைத்துக் கொண்டாள். அவளை ஆசுவாசப் படுத்த எண்ணியவளாக முதுகை நீவி விட்டாள்.
சில வாரங்களாக அனிக்கா மாறிப் போய் விட்டாள் என தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். திருமணம் குறித்து அவளுக்கு பயம் இருக்குமோ? வெளிப்படையாக எதையும் பேசினாலாவது தேவையானது சொல்லிக் கொடுக்கலாம். தனக்குள்ளே சுருண்டு போகின்றவளை என்னச் செய்வது?
ஒழுங்காக சாப்பிடுகிறாளா? தூங்குகிறாளா? என்றும் கூட அனிக்கா குறித்து அவளுக்கு மனதிற்குள் சந்தேகமே? எல்லோர் முன்பும் சாப்பிடுகிற மாதிரி காட்டிக் கொள்கிறாள். ஹனியை அவள் அறையினின்று தூக்கி வரச் செல்லும் போது தூங்கியது போல அவள் படுத்திருக்கும் பாவனையிலேயே அவள் இன்னும் தூங்கவில்லை என்று பிரபாவிற்கு புரிந்து விடும். ஆனால், தன்னையே மறுத்து ஒளித்து வைப்பவளிடம் என்னவென்று கேட்க? ஆரம்பத்தில் வேண்டாமென்று சொல்லியிருந்தாலும் அதன் பின்னர் திருமண ஏற்பாடுகள் எதற்கும் மறுத்துப் பேசவேயில்லையே? எதிலும் வெளிப்படையாக பேசுபவள் திருமணம் பிடிக்கவில்லை என்றால் மனதை மறையாது பிடிவாதமாக பிடிக்கவில்லை என்று சொல்லி இருப்பாளே? அப்படியும் கூட நடந்துக் கொள்ளவில்லை. வீட்டில் தினம் தோறும் நடைபெறும் களேபரத்தில் எல்லோரும் இந்த சின்ன பெண்ணைக் கவனிக்காமல் விட்டு விட்டோமோ?
“அண்ணி என்னாலதான் நம்ம ஃபேமிலிக்குள்ள பிரச்சினையோன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாளைக்கு அத்தை வந்து அப்பா அநாவசியமா பேசிட்டா எப்பவுமே அம்மா மாமா வீட்டோட பேச முடியாம ஆகிடும். நான் போய் ரூபன் அத்தான் கிட்ட போய் சொன்னேன்னா அத்தைய வர வேண்டாம்னு அவங்களே சொல்லிடுவாங்க. இந்த பிரச்சினையை வராம தடுத்திடலாம். நீங்க எனக்கு துணையா என் கூட ஃபேக்டரி வரைக்கும் வர்றீங்களா அண்ணி”
எனக் கெஞ்சிய சின்னவளிடம் மறுப்பாக எப்படி பேசுவது? அதனால் தான் தன் கணவனிடம் கூடச் சொல்லாமல், ஹனி பாப்பா கிண்டர்கார்டனிலிருந்து திரும்பி வருவதற்குள்ளாக திரும்பச் சென்று விடலாம் என்று எண்ணி அனிக்காவுடன் பிரபா புறப்பட்டு வந்திருந்தாள்..
எண்ணி எண்ணி கோர்த்து வைத்ததைப் போல தான் எண்ணியதை அண்ணியிடம் சொன்னதோடுச் சரி அதற்கு அப்புறமாக அனிக்கா எதையுமே பேசவில்லை. லொட லொடவென்று ஒரு விஷயமும் விட்டு வைக்காமல், மனதை மறையாமல் பேசும் அனிக்கா எப்போதிருந்து மாறிப் போனாள்? என்னும் சிந்தனையில் பிரபா இருந்த போதே அவர்கள் கார் ரூபனின் ஃபேக்டரியை அடைந்திருந்தது.
அனிக்காவிற்காக ஏற்பாடு செய்திருந்த டிடெக்டிவ் ஏஜென்ஸியிலிருந்து அவள் வீட்டிலிருந்து புறப்பட்டதாக வந்த செய்தியில் தான் எண்ணியவற்றை செயல் படுத்த எண்ணியிருந்த ரூபன் அவள் தன்னுடைய பேக்டரி பக்கமாக வருவதாக அறிந்ததும் தன் திட்டத்தை மாற்றினான்.
உடனே சீக்கிரமாக தன்னுடைய ஆஃபீஸ் ஸ்டாஃப்களுக்கு அரை நாள் விடுப்பு கொடுத்து அனுப்பி வைத்தான். அனிக்கா ஆஃபீஸ் வாசல் வழியாக நுழைந்தவள் ஸ்டாஃப் ஒருவரையும் காணாமல் ஆச்சரியப் பட்டாலும் அண்ணியை அங்கு உட்காரச் சொல்லி விட்டு கேபினுக்குள் நுழைந்தாள்.
கேபினில் போய் இண்டர்காம் மூலமாக ரூபனை அழைக்க வேண்டுமென அவள் யோசித்து இருக்க அவளுக்கு அங்கே இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. தன்னையே வெறித்தவனாக தன்னுடைய மென்மையான இயல்பை தொலைத்தவனாக அமர்ந்திருந்த ரூபன் அவள் பார்வையில் விழுந்தான்.
இவன் முறைப்பைக் கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும்? என்கிற எண்ணம் மனதில் வியாபிக்க மென்மையாக புன்னகைத்தாள் அவள். இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அவள் நின்றவிடமே நின்றிருக்க, அவளை நோக்கி அவன் எழுந்து வந்தான். அவனுக்கு தன்னைக் குறித்து அவளின் எண்ணம் என்னவென்று அறிந்துக் கொள்ள வேண்டியிருந்தது. வார்த்தைகளால் கேட்டு பதில் பெறவியலாத ஆதங்கம் இன்னும் மிச்சம் இருந்தது. எல்லாவற்றையும் பேசும் அவள் வாய் தங்கள் காதலைப் பற்றி பேசாததால் மனதில் காயம் இருந்தது. தன் காதலை அவள் உணர்ந்திருக்கிறாளா? தன்னை நம்புகிறாளா? என மிக முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது.
எனவே அவளருகில் வந்ததும் அவளைச் சட்டென்று இழுத்து தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான். காற்றையும் அவர்களுக்கிடையில் வரவிடுவதாக அவனுக்கு எண்ணமில்லை போலும், தான் இருப்பது தன் பணியிடம், யாரும் பார்த்தால் என்னவாகும் என்கிற சிந்தனையில்லை. அனிக்காவோடு அவள் அண்ணி வந்திருப்பதான பிரக்ஜை இல்லை. சொல்லப் போனால் அவன் அவனாகவே இல்லை, நொடிகள் கடக்க கடக்க அவன் அணைப்பு இறுகிக் கொண்டே போனது.