27. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
வேரற்றவளாக மயங்கிச் சரிந்த வேகத்தில் தரையில் விழுந்திருந்தால் அவளுக்கு காயம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்னும் பதட்டத்தில் அனிக்காவை தன் கையில் ஏந்தியிருந்த ரூபனுக்கு உலகமே நின்றாற்போல பிரமை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டாலும், அவள் மயங்கி விழுந்த காரணம் என்னவாக இருக்கும்? என்று அவனுடைய மூளை அவனிடம் கேள்வி கேட்க, ஒருவேளை இப்படியிருக்குமோ? என்று எதையோ எண்ணியவன் உடல் நடுக்கமுற, “நான்…நான் …செத்து போகப் போறேன்” எனச் சொல்லி தன் அடியை வாங்கிக் கொண்டு உணர்வில்லாமல் கிடப்பவள். தான் சொன்னதற்கேற்ப எதையாவது செய்த பின்னரே தன்னிடம் வந்திருப்பாளோ? உயிரை மாய்க்கும் எதையும் உண்டிருப்பாளோ? என பயம் மனதைக் கவ்வ அவளை உடனே தூக்கிக் கொண்டு மருத்துவமனை புறப்பட்டான்.
அவன் பின்னே புறப்பட்ட பிரபா அவனோடு காரில் ஏறிக் கொள்ள பின்னோடு தன் காரை வரச் சொல்லி பணித்தாள். அனிக்காவை தன் மீதே சாய்த்திருந்த ரூபன் டிரைவரை வண்டியை வேகமாக விடச் சொன்னதோடு நில்லாமல், ராஜேஷிற்க்கு அலைபேசி வழியாக தகவல் தெரிவித்து சிகிட்சைக்காக எல்லாவற்றையும் தயார் நிலையில் இருக்கச் செய்தான்.
பேசும்போதே அவன் விழிகளிலிருந்து உருண்டோடிய கண்ணீரும் கடந்த சில நிமிடங்களாக கண்கூடாக தான் கண்ட அனைத்தும் பிரபாவிற்கு நிறைய விஷயங்களை புரிய வைத்திருந்தது. அவளுக்கு அவை அனைத்தும் நம்ப வியலாதவனாக இருந்தன. இப்போதைய சூழலில் அனிக்கா மயக்கமுற்று இருப்பதை தான் முதலாக வீட்டிற்கு தெரிய வைக்க வேண்டும் என்று மனதிற்கு புரிந்தாலும், ஏற்கெனவே போர் சூழலில் தம் வீடு இருக்கும் நிலைமையில் தானும் அவசரப்பட்டு எதையாவது செய்து வைக்க கூடாது என்று எண்ணியவளாக, இன்னும் சில நேரத்தில் மருத்துவரிடம் காண்பித்து அனிக்காவின் உடல் நிலை தெரிந்த பின்னரே வீட்டிற்கு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
தன் வீட்டுப் பெண்ணை ஒருவன் அறைந்ததை அவளாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விஷயம் தெரிய வந்தால் கிறிஸ் என்னவாக இதை கையாளுவான்? அவனது ஒரு அடிக்கு ஆயிரமாகவாவது பதில் சொல்லுவான்? என்பதில் பிரபாவிற்கு சந்தேகம் எதுவுமில்லை. அவளை ரூபன் அடித்ததன் பிண்ணனி வெறுப்பாக மட்டும் இருந்திருந்தால் என்றால் நிச்சயமாக அதை அப்படித்தான் கையாள வேண்டும் என்று பிரபாவும் ஆதரித்திருப்பாள். ஆனால், இங்கே கதையே வேறாக இருக்கின்றதே விட்டால் அவளை அடித்த தன் கையை நொறுக்கி விடும் விதமாக தன்னை காயப் படுத்திக் கொண்டிருப்பவனை எவ்வாறு தண்டிக்க? தான் அடித்து வீங்கிய அவள் கன்னத்தை அடிக்கடி தடவிப் பார்த்தவனாக மௌனமாக தன்னையறியாமல் கண்களினின்று வடிகின்ற கண்ணீர் ரூபன் உடையில் தெளித்து, அதையும் தாண்டி அவன் கை வளையில் கிடக்கும் அவள் உடையிலும் தெறித்திருக்க, அவளை அடிக்கடி எழும்பி விட மாட்டாளா? என உலுக்கி உலுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றவனிடம் எவ்வாறு கோபத்தைக் காட்ட?
அனிக்கா மயக்கம் தெளிந்து எழுந்து விட்டாலென்றால் அவர்கள் ரூபனை சந்திக்க வந்த தடமே தெரியாமல் அவளைக் கையோடுக் கூட்டிச் சென்று விடவேண்டும் என்கிற மற்றொரு திட்டம் பிரபாவிடம் இருந்ததாலும் கூட பிரபா தன் வீட்டினருக்கு அனிக்காவின் நிலைச் சொல்லாமல் தாமதித்தாள். அவள் எண்ணியது நடக்குமா?
அவசர அவசரமாக அனிக்காவை பரிசோதித்து விட்டு வெளியே வந்த ராஜேஷ் ரூபனையும் பிரபாவையும் தன் அறைக்குள் அழைத்து பேசலானார். ரூபன் சந்தேகித்த மாதிரி அவள் உயிர் போக்கும் எதையும் உட்கொள்ளவில்லை என்றதும் தான் இருவருக்கும் ஆசுவாசமாயிற்று. சில நேரம் ராஜேஷின் திட்டுக்களை வாங்கி தலைக் குனிந்து அமர்ந்திருந்த ரூபன் அப்படியென்றால் அவள் மயங்கி விழுந்ததன் காரணம் என்னவென்று அறிந்துக் கொள்ள எண்ணி கேள்வி கேட்க தலை நிமிர்த்தினான்.
டாக்டர் அண்ணா அனிக்கா இப்போ எழுந்திடுவாளா? நான் வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா? இப்ப ஹனி பாப்பாவை ஸ்கூல்லருந்து கூட்டிட்டு வர்ற டைம். நாங்க ரெண்டு பேரும் ஹாஃப் அன் ஹவர்ல வந்திட்டு திரும்ப போகிறதா புறப்பட்டது. இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கலை. வீட்டில இன்னிக்கு கூட பிரச்சினை இப்ப இவ இப்படி மயங்கி கிடக்கிறான்னு தெரிஞ்சா அவ்வளவுதான் என்றவள் காலையில் வீட்டில் நிகழ்ந்தவற்றை பிரபா சொல்லி முடித்தாள்.
இல்ல சிஸ்டர் அவ கான்ஷியஸ்க்கு வர கொஞ்ச நேரமாகும். இன்னும் டெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க, எனக்கு பார்க்க எப்பவும் போல அவ தெரியலை ரொம்ப நாளா ஒழுங்கா சாப்பிடாம தூங்காம இருந்திருப்பாளோ? டாக்டரின் கேள்வி பிரபாவை குற்றஉணர்ச்சிக்குள்ளாக்கியது. தான் அறிந்தவைகளை அவள் சொன்னாள்.