வைஷ்ணவியிடம் சவால் விட்ட நந்தினி அதை செயல்படுத்திட முழு மூச்சாக இறங்கியிருந்தாள். அண்மையில் அடிக்கடி அபிநந்தன் போகும் இட்த்தில் எல்லாம் அவள் இருந்தாள். ஏதார்த்தமா அல்லது திட்டமா?என்று அவனே குழம்பிடும் அளவு மிக இயல்பான சந்திப்புகளை உருவாக்கிக் கொண்டாள் நந்தினி. அதோடு அவளின் நடத்தையிலும்மாற்றத்தை கொண்டு வந்தாள். அபி தன்னிடம் வெறுக்கும் அந்த மிடுக்கினையும் ஆடம்பரத்தையும் மறைத்து அவனையே கொஞ்சமாய் ஆச்சர்யபடவும் வைத்தாள்.
ஓரிரு வாரங்கள் அமைதியாக பொறுத்தவனுக்கு அதற்குமேல் பொறுமையில்லாமல் போக, அவனே நந்தினியை தேடி போய் பேசினான்.
“நந்தினி”
“ம்ம்? என்னையா கூப்பீட்டீங்க?” தேன் சொட்டும் குரலில் கேட்டாள் அவள்.
“உன் பேரு தானே நந்தினி?” என்று அவன் அலட்சியமாய் கேட்கவும்,அவள் விழிகளில் பொய்யான மிரட்சி. அந்த மிரட்சியில் அந்த ஆண்மனமும் கரையத்தான் செய்தது.
“ நான் எங்க போனாலும், நீயும் அங்க இருக்குற மாதிரி தோணுது எனக்கு! இது தானாகத்தான் நடக்குதா?”என்று அவன் கேட்கவும், நந்தினி முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் உஷாராகினாள். அவனே எதிர்ப்பாராத தொனியில் அவனைத் தாக்கினாள்.
“போயிடவா? காலஜை விட்டே போயிடவா?”
“வாட்??”
“இல்லை இந்த ஊரை விட்டே போகனுமா சொல்லுங்க?”
“ஏன் இப்படி கேட்குற?”
“வேற எப்படி கேட்குறது ? எனக்கு தெரியும் என்னை கண்டாலே உங்களுக்கு பிடிக்காதுன்னு..அதுக்கு நான் என்ன செய்வேன்? நீங்க என்னை வெறுக்குறீங்க.. அதுவும் தெரியும்” என்று அவள் கோபமும் அழுகையுமாய் பாவனை செய்ய, உடனே மறுத்தான் அபிநந்தன்.
“ஹேய் ஏய்..என்ன நீ வெறுப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை பேசுற?”
“ஒருத்தர் மேல வெறுப்பு இருக்கனும் இல்லன்னாவிருப்புஇருக்கனும்..நான் உங்க மனசுல என்னவாக இருக்கேன்னு உங்களுக்குத்தான் தெரியும்?நானாக ப்ளான் பண்ணிலாம் உங்க கண்ணு முன்னாடி நிக்கல.. இனிமே தானாகவே அப்படி ஒரு சூழ்நிலை வந்தாலும் என் தொல்லை உங்களுக்கு இல்லை போதுமா?” என்றுவிட்டு விடுவிடுவென நடந்தவளை அபியின் குரல் நிறுத்தியது.
“விருப்பு இருக்கா தெரியல.. ஆனா வெறுக்கல நந்தினி!!”என்று அவன் சொல்லியிருக்க அவனுக்கு முதுகு காட்டி நின்றவளின் முகத்தில் வெற்றி புன்னகை அரும்பியது. இருந்தும் அவனை திரும்பி பார்க்கவில்லை. அங்கேயே நிற்கவும் இல்லை!
சொன்ன வார்த்தையை நிரூபிப்பவள் போல அவனை விலகியே இருந்தாள். ஒரு பொருள் நம்மை விலகி போகும்போது அதை நெருங்கி பயணிப்பது மனித இயல்பு! அபிநந்தனும் அப்படித்தான்! நந்தினியின் விலகல் அவனை குழப்பியது. விரும்புகிறேனா அவளை? புது கேள்வியொன்று மூளையை குடைந்து எடுத்தது.
அதன்பின் அவளை அதிகம் கவனிக்க ஆரம்பித்தான். அவள் நன்றாக பாட தெரிந்தவள் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டவன், அவளுடன் பாடும் வாய்ப்பினை உருவாக்கி கொண்டான். எப்போதும் இறுக்கமான முகபாவத்தில் அவனுடன் வலம் வருவாள் நந்தினி. ஓரிரு வார்த்தைகளுக்குமேல்பேசவே மாட்டாள். அவளின் ஒதுக்கம் அவனுக்குள் சலனத்தை உருவாக்கியது!
அந்த சலனம்தான் காதல் என்று இளம் வயதும் சீறிய ஆசைகளும் சொல்லிற்று! காதலை உணர்வதாக நினைத்தான் அபிநந்தன். நந்தினியை தனது முதலும் முழுவதுமான காதலியாக்கினாள்.
வெற்றி பெற்றிருந்தாள் நந்தினி. அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.. ஆனால் விடவில்லை! வலிக்கவேண்டும் அவனுக்கு! அவன் தன்னை அலட்சியமாய் பார்த்தபோதெல்லாம் தனக்குள் எரிந்தது போலவே, அவனுக்கும் எரியவேண்டும் என்றேதோன்றியது.
அதுவரை குற்ற உணர்வில் நடந்ததை சொன்ன அபி இப்போது கட்டிலை விட்டு எழுந்து நின்றான். சூரியனை பிரிந்த வான் கருநிற ஆடை அணிந்து துக்கம் அனுசரிப்பது போல தெரிந்த காட்சியை ஜன்னல் வழியே பார்த்தான். நிர்மலமானது ஆகாயம்! அதன் வேதனையை அறிந்தவர்தான் யார் ?
அபியின்வேதனையை புரிந்தவரும் யார்?
“என்னங்க?” என்று கனிவாய் அழைத்தபடி கட்டிலில் இருந்தபடியே இரு கைகளை நீட்டினாள் நந்திதா. அவள் மார்பில்முகம் புதைத்தாள் சோகம் தீர்ந்துவிடும்..ஆனால் பாதம் பணிந்தால்தானே செய்த பாவம் மறையும் என்று அவன் மனம் கூறியது. லேசான கசப்பான புன்னகையை ஏந்தியவன் அவள் பாதங்களின் அருகே அமர்ந்து கொண்டான். அவளே எதிர்ப்பாராத நேரத்தில் அவளது பாதங்களை மடியில் சுமந்து பிடித்துவிட ஆரம்பித்தான்.
“என்ன பண்ணுறீங்கநீங்க?”
“நான்தானே பண்ணுறேன்?எனக்கு உரிமை இல்லையா?”என்றான் அபி.அவள் மனம் கனிந்தட அவன் விழிகளிலோ அன்ற நாளின் நினைவு!