இவர்கள் சாப்பிட்டு முடிக்கும் போது மலர் தன் அப்பாவிற்கு தகவல் கொடுத்து விட அவர் வந்து கொண்டு இருந்தார்.
எல்லோரும் சாப்பிட்டு கிளம்ப, கல்யாண பொண்ணை அவள் உறவினர்கள் அழைத்து சென்றிட, செந்தில் , செழியன் இருவரும் எல்லோரயும் வழி அனுப்ப சென்றனர்.
HOD, வளர்மதி மற்றவர்கள் எல்லோரயும் பார்த்து செந்தில் “சார்.. இதே மாதிரி நாளைக்கும் கல்யாணத்திற்கு வந்து வாழ்த்தனும்.. யாரும் வராம இருக்க கூடாது..” என்று எல்லோரையும் அனுப்பி வைத்தான்..
எல்லோரும் கிளம்பவும் மலரின் தந்தை வரவும் சரியாக இருந்தது.. மலர் அப்படியே கிளம்ப போக, செந்தில், செழியன் இருவரும் வாசலுக்கு சென்றனர்.
அவர்கள் வரவும் காரிலிருந்து இறங்கினார் வேலன்..
செந்தில் “ ஹலோ சார்.. நான் தான் செந்தில்.. சாரி.. ரொம்ப லேட் ஆகிட்டுதா?” என
வேலன் கல்யாண மாப்பிள்ளை வாசலில் நின்று வழி அனுப்ப வந்ததை உணர்ந்து
“ஹலோ.. சாரி எல்லாம் எதுக்கு சார்.. எல்லா பெத்தவங்களும் பயப்படுற விஷயம் தான்.. தனியா இப்போ தான் முதல் முறையா வந்து இருக்கா.. friends கல்யாணத்திற்கு கூட அவங்க அம்மா கூட போயிட்டு வருவா.. அது தான் கொஞ்சம் டென்ஷன்.. மத்தபடி இப்போ நானே கூப்பிட வந்துட்டுதாலே ஒன்னும் பிரச்சினை இல்லை..”
இருவரும் “ஒஹ்.. “ என்றவர்கள்,
“மலர் மேடத்தையும் வீட்டிலே வந்து கூப்பிட்டு இருக்கணும்.. அவங்களோடு பழகியே கொஞ்ச நாள் தான் ஆகுது.. அதான் வீட்டில் எப்படி எடுத்துபீங்க என்று தெரியவில்லை.. இல்லாட்டா உங்களையும் நேர்லே வந்து கூப்பிட்டு இருப்போம்..”
“அதுனாலே என்ன தம்பி.. பரவா இல்லை..”
மலர் இப்போது “செந்தில் அண்ணா... நாளைக்கு நான் திருமணத்திற்கு கட்டாயம் வரணுமா? “ என்று வினவ,
செந்திலோ “மூச்.. நாளைக்கு நம்ம department மட்டும் தான் இருப்பாங்க.. அதிலும் அவங்க பாமிலி மெம்பெர்ஸ் எல்லாம் வொர்க் போய்டுவாங்க.. சோ நாம மட்டும் தான்.. கண்டிப்பா வரணும்..”
வேலணை பார்த்து “சார்.. ப்ளீஸ் அனுப்பி வைங்க.. இன்னிக்கு மாதிரி லேட் எல்லாம் ஆகுது.. மதியம் சாப்பாடு முடிந்து நாங்களே மண்டபம் காலி பண்ணிடுவோம்.. டே டைம் தான். உங்கள இங்கே கூப்பிடுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்களும் கல்யாணத்திற்கு வந்து வாழ்த்தினா ரொம்ப சந்தோசமா இருக்கும் “என்று செந்தில் கேட்க,
வேலனும் கல்யாண பையனே கேட்கும்போது சரி என்று தலை அசைத்தார். செழியனை பார்த்தவர் “தம்பி .. நாளைக்கு கொஞ்சம் பார்த்து அவளை பஸ்சிலோ, கால் டாக்ஸி யிலோ அனுப்பி வைங்க..” அவன் தலை ஆட்டவும் கிளம்பினார்.
பின் செந்திலிடம் “ நான் வருவது சந்தேகம்தான் தம்பி.. வேலை இருக்கு.. தீடிர்னு லீவ் போட முடியாது.. கண்டிப்பா மலர அனுப்பி வைக்கிறேன்.. உங்களுக்கு வாழ்த்துக்கள்.. பதினாறு பேரும் பெற்று பெரு வாழ்வு வாழனும்நு மனசார வாழ்த்துறேன் ” என்று வாழத்தினார். பிறகு இருவரும் கிளம்பினர்.
அதோடு செழியன் “சரி. .செந்தில் நானும் கிளம்பறேன்.. நீ உள்ளே போய் உன் ட்ரீம் continue பண்ணு.. கூடவே இனிக்காவது கடலை வறுக்காம சிஸ்டர் கொஞ்சம் தூங்க விடு.. எப்படியும் நாளையிலேர்ந்து உன்னோட மொக்கை தான் கேட்டு ஆகனும்.. “ என
“டேய்.. அடி வாங்காத.. காலையிலே சீக்கிரம் வரியா? “
“அம்மா, அப்பா வ கூட்டிட்டு வரணுமே மச்சான்..”
“டேய் .. அப்பா கிட்டே சொல்லிட்டு நீ சீக்கிரம் வந்துடு.. அவங்க எப்படி வசதியோ வரட்டும்..” என்று அனுப்பி வைத்தான்.
வீட்டிற்கு சென்ற மலர் களைப்பு மற்றும் சாப்பாடு நிறையா சாப்பிட்டதால் நேராக படுக்க சென்று விட்டாள். வள்ளியும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை..
பால் மட்டும் கேட்க, டின்னெர் ஓடு ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் வேண்டாம் என்று விட்டாள்.
படுக்க சென்று விட்டாலும் ஏனோ அன்று மலருக்கு தூக்கம் வரவில்லை.. மனதில் சொல்ல தெரியாத ஒரு உணர்வு.. கண்கள் மூடினால் செழியன் உருவமே வந்தது.. இன்று வரை அவளின் எண்ணங்களில் எந்த ஒரு ஆண்மகனும் வந்தது இல்லை.. அதிகம் friends இல்லாததால் சைட் அடிப்பது பற்றி எல்லாம் தெரியாது..
ஆனால் இன்றைக்கு மண்டபம் நுழைந்தது முதல் அவளின் பார்வை செழியனை சுற்றியே சென்றது. அவனது உயரத்திற்கும் உருவத்திற்கும் ஏற்ற formal உடையில் கையில் கட்டி இருந்த வாட்ச் மட்டுமே அதிகபடியான ஆபரணம்.. அழகாக ஷாம்பூ மாடலில் வருவது போல் அலை அலையாய் இருந்தது. வடநாட்டவர் போல் நிறம் என்று இல்லாவிட்டாலும், மாநிறத்தை விட சற்று நல்ல நிறமே. அவனின் தீர்க்கமான மூக்கும், சிலை போன்ற முக அமைப்பும் அவனை ஹீரோவாகி காட்டின.. அவனை ஹீரோ என்று அழைப்பது சரிதான்.
“ஹ்ம்ம். .” என்று பெருமூச்சு விட்டவள்... சற்று நேரம் கழித்து தூங்க ஆரம்பித்தாள்.